சில பதிவர்கள் தங்கள் நட்பு வளையத்துக்குள் மட்டும் ஒட்டு போட்டு கொண்டு அதிக ஹிட்ஸ் பெற்றுக்கொண்டும் இருகிறார்கள் , இவர்கள் இவாறு செய்வது மற்ற பதிவர்களை பாதிக்காதா? எவ்வாறு எப்படி செய்ய முடிகிறது ? முக்கி மூச்ச போட்டு எழுதினாலும் சரியாய் எந்த வித ஒட்டு கூட விழுவதில்லை , ஏன் பல பேர் படிப்பது உண்டு ஆனால் அதற்கு கமெண்ட்ஸ் எழுதுவது கிடையாது ! ஆனால் கும்பலாக நட்பு வைத்துகொண்டு நீ எனக்கு ஓட்டு போட்டு கமெண்ட்ஸ் எழுது, நான் உனக்கு ஓட்டு போட்டு கமெண்ட்ஸ் எழுதறேன் என்று ஒரு எழுதபடாத உடன்படிக்கை வைத்து கொண்டது போல செயல் படுகிறார்கள் !alexa ரேங்க் பட்டியலில் மிகச் சுலபமாக மேலே வந்து விடுகிறார்கள் எப்படி செய்வதனால் , இப்படி ஒட்டு போடுபவர்கள் மற்ற பதிவர்களின் பதிவுகளை படிப்பதும் இல்லை , ஒட்டு போடுவது இல்லை , ஆக இப்டி பல மாதிரி பதிவர்கள் நம்முடையே உள்ளார்கள். பதிவுலகத்திற்கு இது ஆரோகியமானதா என்று தெரியவில்லை ? .
சுமார் இராண்டாயிரம் பேர் திருமணம் நடந்த தேவாலயத்துக்கு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தார்கள்.வெஸ்ட்மின்ஸ்டர் அபி தேவாலயத்தில் நடந்த இந்த திருமணத்துக்காக மத்திய லண்டன் பகுதியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தார்கள்.இவர்களின் பாதுகாப்புக்காக பொலிஸார் நின்ற பொலிஸார் எந்தவிதமான அசம்பாவிதமும் இன்றி பாதுகாப்பு நடவடிக்கைகள் சிறப்பாக நடந்ததாகக் கூறியுள்ளனர்.இந்த திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இரு ஆர்ப்பாட்டங்களும் அமைதியாக நடந்தன.திருமண முடிவில் திறந்த குதிரை வண்டியயில் பவனியாக வந்த ஜோடி, பக்கிங்ஹாம் மாளிகையின் மேல்மாடத்தில் இருந்து பொதுமக்களின் வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டார்கள்.திருமணத்தை முன்னிட்டு இளவரசர் வில்லியத்துக்கு டியூக் ஒஃப் கேம்பிரிஜ் என்ற பட்டமும், கேட் மிடில்டனுக்கு டச்சஸ் ஒஃப் கேம்பிரிஜ் என்ற பட்டமும் மகாராணியாரால் வழங்கப்பட்டது.
திருமண உறுதி மொழி
திருமண பந்தத்தில் கணவனாக தான் ஏற்கும் வில்லியம்முக்கு "அன்பையும், ஆதரவையும், கௌரவத்தையும் வழங்குவேன்" என்று கேட் மிடில்டன் திருமண உறுதிமொழி வழங்கினார்.
வில்லியம்மின் தாயார் இளவரசி டயானா இளவரசர் சார்ல்ஸுடனான தனது திருமணத்தின்போது, "கணவனுக்கு கீழ் படிந்து நடப்பேன்" என்ற வரிகளை தனது திருமண உறுதிமொழியில் சொல்லாததுபோலவே, கேட் மிடில்டனும் அவ்வார்த்தைகளை சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இளவரசர் வில்லியம் அணிவித்த மோதிரத்தை கேட் மிடில்டன் அணிந்துள்ளார்.வேல்ஸிலிருந்து எடுக்கப்பட்ட தங்கத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட மோதிரம் இது.
பிரிட்டிஷ் முடிக்குரிய வாரிசுகளில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இளவரசர் வில்லியம் தனது நீண்ட நாள் காதலி கேட் மிடில்ட்டனை லண்டனில் நடந்த கோலாகலமான வைபவத்தில் திருமணம் செய்துகொண்டுள்ளார்.லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலயத்தில் நடந்த கண்கவர் திருமண சடங்கில் கேண்டர்பரி பேராயர் டாக்டர் ரோவன் வில்லியம்ஸ் இந்த ஜோடியை கணவன் மனைவியாக அறிவித்தார்
போட்டிக்கு முன்னரே முடிவை நிர்ணயிக்கும் மேட்ச் ஃபிக்ஸிங் முறைகேடுகள் இலங்கை கிரிக்கெட் அணியில் 1992ம் ஆண்டு முதலே நடந்துவருவதாக அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஹஷான் திலகரட்ண குற்றம்சாட்டியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பரந்தபட்ட அளவில் இந்த சீர்கேடு இலங்கை அணியில் தொடர்ந்து இருந்து வந்துள்ளது என்றும் ஹஷான் திலகரட்ண ஒரு தொலைக்காட்சி நிறுவனத்திடம் தெரிவித்திருந்தார் என செய்திகள் தெரிவிக்கின்றன.போட்டிக்கு முன்னர் முடிவை நிர்ணயிக்கும் முறைகேட்டுடன் தொடர்புகொண்ட இலங்கை வீரர்கள் அனைவரையும் தனக்கு தெரியும் என்றும் ஹஷான் திலகரட்ண கூறியுள்ளதாக அவரை மேற்கோள்காட்டி இலங்கையின் டெய்லி மிர்ரர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 1984 முதல் 2004 ஆம் ஆண்டு வரையில் ஹஷான் திலகரட்ண இலங்கை அணிக்காக விளையாடி வந்தார். 1996 ஆம் ஆண்டு இலங்கை அணி அர்ஜுன ரணதுங்க தலைமையில் உலகக் கோப்பையை வென்ற அணியிலும் அவர் இடம்பெற்றிருந்தார்
தலைமைக்குக் கட்டுப்பட மறுப்பது, ஒற்றுமையின்மை மற்றும் கோஷ்டிப் பூசல் என எனது எண்ணத்துக்கு மாறுபட்டு ரசிகர் மன்றத்தினர் நடந்து கொள்வதால், எனது பிறந்த நாளான மே 1-ம் தேதி முதல் ரசிகர் மன்றங்களைக் கலைக்கிறேன், இது எனது முடிவான அறிவிப்பு, என நடிகர் அஜீத் அதிரடியாக அறிவித்துள்ளார்.
அவரது இந்த அறிவிப்பால் அவரது ஆயிரக்கணக்கான ரசிகர்களும் நிர்வாகிகளும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கு அடுத்த வரிசையில் உள்ளவர்களில் முக்கியமானவர் அஜீத். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக மேல்தட்டு ரசிகர்கள் அதிகம்.
ரஜினிக்குப் பிறகு இவர் படங்களுக்குத்தான் பெரிய ஓபனிங் உள்ளது. அடுத்ததாக அவர் தனது 50வது படமான மங்காத்தாவை வெளியிடத் தயாராகி வருகிறார்.
இந்த நிலையில் நாளை மறுநாள், மே 1-ம் தேதி அவருக்குப் பிறந்த நாள் வருகிறது. இதனை விமரிசையாகக் கொண்டாட ரசிகர்கள் தயாராகி வந்தனர்.
இந்த நிலையில் இன்று அவர் ஒரு அறிக்கையை தனது பிஆர்ஓ விகே சுந்தர் மூலம் அனுப்பியுள்ளார்.
அந்த அறிக்கையில், "எனது நீண்ட திரைப் பயணத்துக்கு உதவிய ரசிகர்கள், பொதுமக்கள், ஆக்கமும் ஊக்கமும் கொடுத்த பொதுமக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நேரத்தில் நெடுநாட்களாக என்னைச் சிந்திக்க வைத்த ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன்.நான் என்றுமே என் ரசிகர்களை என் சுயநலத்துக்காக பயன்படுத்தியதில்லை. எனது விருப்பு வெறுப்புக்கேற்ப அவர்களைப் பயன்டுத்தியதில்லை. என் படங்கள் தரமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவற்றைப் பற்றி விமர்சிக்க ரசிகர்களுக்கும் உரிமை உள்ளது. என் படத்தை ரசிக்கும் எல்லாருமே என் இயக்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் இல்லை என்பதையும் நான் அறிவேன். இந்தக் காரணத்தாலேயே என் ரசிகர்களிடையே நான் வித்தியாசம் பார்ப்பதில்லை- பார்க்கவும் மாட்டேன்.கோஷ்டிப் பூசல், ஒற்றுமையின்மை, தலைமைக்குக் கட்டுப்பட மறுப்பது, தன்னிச்சையாக இயங்குவது, சொந்த அரசியல் லாபங்களுக்காக நற்பணி இயக்கத்தின் பெயரைக் கெடுக்கும் வகையில் நடப்பது போன்றவை என் எண்ண ஓட்டத்துக்கு உகந்தவை அல்ல. சமூக நலனில் ஈடுபடுவது கூட யாருக்கும் இடையூறு இல்லாமல், குறிப்பாக அவரவர் குடும்பத்துக்கு எந்த தொந்தரவும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதை ஆரம்பத்திலிருந்தே நான் வலியுறுத்தி வருகிறேன்.நலத்திட்டங்கள் செய்ய இயக்கம் எதுவும் தேவையில்லை. நல்ல உள்ளமும் எண்ணமும் இருந்தாலே போதும். எனவே வரும் மே 1-ம் தேதி எனது 40வது பிறந்த நாளில் இந்தக் கருத்தையே முடிவாக அறிவிக்கிறேன். இன்றுமுதல் எனது தலைமையில் இயங்கிவந்த நற்பணி மன்றங்களைக் கலைக்கிறேன்.
மாறிவரும் காலகட்டத்தில் மக்கள் எல்லாரையும் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, திரைப்படங்களுக்கு அப்பால் பொதுமக்களின் பார்வையிலும் கண்ணியமாக தென்பட்டால் மட்டுமே, நடிகனுக்கு அவரது ரசிகர்களுக்கும் கவுரவம் கிட்டும் என்பது என் நம்பிக்கை. அந்த கவுரவமும், எனது இந்த முடிவுக்கு ஆதரவு அளிக்கும் என் உண்மையான ரசிகர்களின் கருத்தும் மட்டுமே எனது இந்த பிறந்த நாளுக்கு உண்மையான பரிசாகும்!"
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற நடிகர் வடிவேலு சென்னையில் இன்று முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்தார். சிறிது நேரம் முதல்வரிடம் பேசிய வடிவேலு, பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, தேர்தல் முடிவு திமுகவுக்கு சாதகமாக இருக்கும்; திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று தனியார் தொலைக்காட்சியின் கருத்துக்கணிப்பு தெரிவித்திருக்கிறது. அந்த மகிழ்ச்சியை முதல்வர் ஐயாவுடன் பகிர்ந்து கொள்வதற்காக வந்தேன். அவரும் சந்தோஷமாக இருக்கிறார். இந்த தேர்தலில் திமுக கூட்டணி 200 இடங்களில் அமோக வெற்றி பெறும். மக்கள் திமுகவை ஆதரித்திருப்பார்கள் என நம்புகிறேன். ஏனென்றால் திமுக அரசின் திட்டங்களால் எல்லோருமே பயனடைந்திருக்கிறார்கள். பயனாளிகளின் ஓட்டு திமுகவுக்கு கண்டிப்பாக விழுந்திருக்கும். அப்படி விழுந்தாலே திமுக வெற்றி பெறும், என்றார்.
ராணா படத்தில் இருந்து நீக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதில் அளித்த வடிவேலு, ராணாவாவது... காணாவாவது... அதையெல்லாம் நான் பொருட்படுத்தல என்றார். மேலும் அவர் கூறுகையில், என்னை சினிமா துறையில் இருந்தே தூக்கினாக்கூட கவலைப்பட மாட்டேன். கலைஞர் ஐயா செஞ்ச நல்ல திட்டங்களை மக்கள் மத்தியில சேர்த்திருக்கேன். அதுக்காக பெருமைப்படுறேன். மே 13ம்தேதிக்கு பிறகு காட்சிகள் மாறும்; பொறுத்திருந்து பாருங்க... என்று சிரித்தபடியே கூறினார்.
அமெரிக்க டாலர் மதிப்பு தொடர்ந்து 3 மாதங்களாக வீழ்ச்சி அடைந்து வருவதால் தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.232 உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. வரும் மே 6-ம் தேதி அட்சய திருதியை என்பதால் இன்னும் விலை உயரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பங்குகளை வாங்குவதைவிட தங்கத்தை வாங்கி விற்பதில் எக்கச்சக்க லாபம் வர ஆரம்பித்துள்ளது. இதனால் சூதாட்டத்தில் ஈடுபடுவதுபோல தங்க நகைகளை வாங்கி விற்பனை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக அமெரிக்க டாலர் மதிப்பு வீழ்ச்சி அடைந்துவருவதாலும், கச்சா எண்ணெய் விலை உயர்ந்துவருவதாலும் தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகும் என்று நகைக்கடை அதிபர் ஒருவர் தெரிவித்தார்.இது மட்டுமின்றி, திருமண சீசன் தொடங்கிவிட்டதாலும் தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்துவருவதாக வியாபாரிகள் கருதுகிறார்கள்.
பவுனுக்கு ரூ.232 உயர்வு:
கடந்த 25-ந் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.16,472-க்கு விற்பனையானது. மறுநாள் பவுனுக்கு ரூ.200 குறைந்து, ரூ.16,272 ஆக இருந்தது. மறுநாள் மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.16,320-க்கு விற்பனையானது.
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.232 அதிகரித்தது. ஒரு பவுன் ரூ.16,552-க்கு விற்பனையானது. ஒரு பவுன் தங்கம் ரூ.17 ஆயிரத்தை நெருங்கிக்கொண்டிருப்பதால் வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அட்சய திருதியை:
ஆனாலும் சென்னையில் நகைக் கடைகளில் விற்பனை குறையவில்லை. இந்த வறுத்தெடுக்கும் வெயில், பாக்கட்டை சுடும் விலை என எல்லா பாதக அம்சங்கள் இருந்தாலும், தங்கத்தை தேடி வரும் மக்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது, நகைக்கடைக்காரர்களை சந்தோஷத்தில் மூழ்கடித்துள்ளது.
அட்சய திருதியை வேறு நெருங்குவதால் (மே 6), எவ்வளவு விலை உயர்ந்தாலும் விற்பனை குறைய வாய்ப்பே இல்லை என்கிறார்கள் சென்னை தங்க நகை வியாபாரிகள்.
பொள்ளாச்சி அருகே ராமச்சேரியிலிருந்து தயாரிக்கப்படும் இட்லிக்கு, துபாய், அபுதாபியில் கிராக்கி அதிகரித்துள்ளது.
நாகரீகம் வளர்த்த காலத்தில், "பிசா'வுக்கு மத்தியிலும் ஈடு கொடுத்து வருகிறது இட்லி. பெரும்பாலானோரின் காலை உணவு இட்லி என்பது தவிர்க்க முடியாததாகி விட்டது. காரணம், ஆவியில் வேக வைக்கப்படுவதும், உடலுக்கு கேடு விளைவிக்காததும் என்பது தான். இட்லிக்கு பல்வேறு பெயர்கள் சூட்டப்பட்டு, நாவில் கொண்டாடி, மறைந்து போன நிலையில், பொள்ளாச்சி அருகேயுள்ள ராமச்சேரி இட்லிக்கு, பல்லாண்டுகளாக மவுசு அதிகரித்து வருகிறது. பொள்ளாச்சியிலிருந்து 20 கி.மீ., தொலைவில், தமிழக- கேரள எல்லையில் உள்ள குக்கிராமம் ராமச்சேரி. மொத்தமாகவே, 25 குடும்பங்கள் வசிக்கும் ஊரின் முக்கிய தொழிலே, இட்லி தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது தான்.
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன், துபாய் உட்பட பல்வேறு இடங்களில் பணிபுரிந்த கேரள மாநிலத்தை சேர்ந்த பலர், ராமச்சேரிக்கு சுற்றுலா வந்த போது, இட்லியை சுவைத்து, பிடித்துப் போன நிலையில், அதை வாங்கிக் கொண்டு துபாய்க்கும் பறந்த நிலையிலும், ஒரு வாரம் வரை கெடாமல் இருந்தது கண்டு வியப்படைந்துள்ளனர். அப்போது தான் ஏற்றுமதி எண்ணம், இவர்களுக்குள் தோன்றி, நாளடைவில், இவர்கள் மூலம் பல இடங்களுக்கு செல்ல ஏதுவானது. தற்போது, டில்லி, மும்பை, துபாய், அபுதாபி உட்பட பல இடங்களில், ராமச்சேரி இட்லி மற்றும் பொடிக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.
இட்லி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறியதாவது:மண் அடுப்பில், புளிய மரக்கட்டைகளை எரித்து, மண் பானை மற்றும் அதன் மேல் வலை போன்ற மூடியும் தான், இட்லி தயாரிக்க பயன்படும் உபகரணங்கள். தினமும் 6,000த்துக்கும் மேற்பட்ட இட்லிகள் தயாரிக்கப்பட்டு, உள்ளூர் மட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன. வழக்கமான இட்லியை விட அகலமாகவும், தோசை போன்று இருக்கும்; ஒன்றின் விலை நான்கு ரூபாய். இரவு 12.00 மணியிலிருந்து காலை 8.00 மணி வரை, இப்பணி மும்முரமாக நடக்கும். இட்லியை தயாரிக்க பயன்படுத்தும் "சூட்சமம்' தான், ஒரு வாரம் வரை கெடாமல் இருக்க வைக்கிறது. உடலுக்கு பாதிப்பு தரக்கூடிய எந்தப் பொருட்களும் கலக்கப்படுவதில்லை.ஒரு பெட்டியில் 150 இட்லிகளை அடுக்கி, பொடியுடன் ஏற்றுமதி செய்கிறோம். ஒரு மணி நேரத்தில் 75 இட்லிகளை தயாரிக்கலாம்.இவ்வாறு, இட்லி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறினர்.
பென்குயின் பறவைகள் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். மிகவும் கடுமையான குளிர் பிரதேசமான அண்டார்டிகாவில் வசிக்கும் இந்த பறவைகள் மிகவும் சாதுவானவை. ரத்தத்தை உறைய வைக்கும் கடும் பனிப்பாறைகள் நிறைந்த, துருவ பகுதியில் மட்டுமே இவைகள் வளரும். பெரும் பனிப்பாறைகள் மிதக்கும் கடலில், இவைகள் குதித்து விளையாடும், தண்ணீரில் மூழ்கி மீன்களை பிடித்து சாப்பிடும். இந்த அபூர்வ காட்சியை பார்ப்பதற்கு என்றே, சுற்றுலாப் பயணிகள் துருவ பகுதியில் குவிவர். உலகம் முழுவதும் இப்போது வெப்பம் அதிகரித்து வருகிறது. இதன் பாதிப்பு அண்டார்டிகாவையும் விட்டு வைக்கவில்லை. அண்டார்டிகாவில் இப்போது இளம் பென்குயின்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது என, ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. அர்ஜென்டினா நாட்டிற்கு சொந்தமான தீவு மார்டிலோ தீவு. அமெரிக்காவில் தெற்கு கடைகோடியில் அண்டார்டிகாவை ஒட்டி இந்த தீவு உள்ளது. இந்த தீவில் கூட்டம், கூட்டமாக பென்குயின் பறவைகள் வசிக்கின்றன. பென்குயின் பறவைகள் குறித்த ஆராய்ச்சியில், அமெரிக்காவின் தேசிய அறிவியல் அகடமி ஈடுபட்டுள்ளது. இங்குள்ள பென்குயின்களைப் பிடித்து, அதன் உடலில் ஒரு அடையாள சின்னத்தை பொறித்து அனுப்புகின்றனர். கடந்த, 1970களில், இவ்வாறு அடையாள மிடப்பட்ட பென்குயின் பறவைகளில், 50 சதவீத பறவைகள், இரண்டு முதல் நான்கு ஆண்டு களுக்குள் மீண்டும் குட்டி போட கரைக்கு வரும். இப்போது, அதன் எண்ணிக்கை வேகமாக குறைந்து விட்டது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின்படி, இதில் வெறும், 10 சதவீத பென்குயின் பறவைகள் மட்டுமே மீண்டும் இனப்பெருக்கத்திற்காக கரைக்கு வந்தது தெரிய வந்துள்ளது. இதற்கு காரணம், உலக வெப்பமயமாதல்தான். அண்டார்டிகா பகுதியில் வெப்பம் அதிகரிப் பதால், அங்கு கடல் பகுதியில் வசிக்கும் மீன்கள், வேறு குளிர் பிரதேசங்களை நோக்கி இடம் பெயர்ந்து விட்டன அல்லது அவற்றின் எண்ணிக்கை குறைந்து விட்டது. இதனால், பென்குயின்களுக்கு போதுமான உணவு கிடைக்கவில்லை. இதனால்தான், பென்குயின் கள், இனப்பெருக்கத்திற்காக இங்கு வருவது குறைந்து விட்டது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த பகுதியில், 80 லட்சம் பென்குயின் ஜோடிகள் இருந்தன. இப்போது, அவைகள், 20 முதல் 30 லட்சமாக குறைந்து விட்டது. "இது ஒரு ஆபத்தான முன் எச்சரிக்கை. உலகம் முழுவதும் வெப்பம் அதிகரித்து வருவதை, மனிதர்களுக்கு, பென்குயின்கள் உணர்த்துகின்றன. இதை, நாம் ஒரு பாடமாக எடுத்து, முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்காவிட்டால், பின்னர், மனித இனத்திற்கே ஆபத்து...' என, பென்குயின் ஆராய்ச்சியாளர் வைனிடிரிவல்பீஸ் என்பவர் எச்சரித்துள்ளார்.
தமிழகம் முழுவதும், ஒவ்வொரு வீட்டுக்கும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மின்சாரத்தை சேமிக்கவும், மத்திய அரசு திட்டத்தில், நான்கு சி.எப்.எல்., பல்புகள் இலவசமாக வழங்கப்படவுள்ளன.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறையை சமாளிக்க, மாநிலம் முழுவதும், 2 முதல், 5 மணி நேரம் வரை, மின்தடை செய்யப்படுகிறது.தமிழகத்தை பொறுத்தவரை, பெரும்பாலான மக்கள், தங்கள் வீடுகளில், குண்டு பல்புகளை பயன்படுத்துகின்றனர். இதில், 60 வாட்ஸ் குண்டு பல்பு, தினமும் ஒரு மணிநேரம் எரிந்தால், 65 கிராம் கரியமிலவாயு வெளியேறுவதுடன், மாதத்தில், 1.8 யூனிட் செலவாகும்.அதேநேரம், 15 வாட் சி.எப்.எல்., பல்பு, தினம் ஒரு மணி நேரம் வீதம், ஒரு மாதம் எரிந்தால், 0.45 யூனிட் மட்டுமே செலவாவதுடன், 16 கிராம் கரியமில வாயு மட்டுமே வெளியேற்றுகிறது.தமிழகத்தில் ஒன்றரை கோடி, வீட்டு மின் இணைப்பு உள்ள நிலையில், அனைவரும் சி.எப்.எல்., பல்பு பயன்படுத்தினால், 1,000 மெகாவாட் மின்சாரத்துக்கு மேல் மிச்சப்படுத்தலாம். மேலும், குண்டு பல்புகளை விட, சி.எப்.எல்., பல்புகளில் கரியமிலவாயு வெளியேற்றம் குறைவாக இருப்பதால், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்.
இதை கருத்தில் கொண்டு, மின்சாரத்தை சேமிக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, சி.எப்.எல்., பல்புகள் குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதன் உபயோகத்தை அதிகரித்து, மின் உபயோகத்தை குறைக்க, மத்திய அரசு, நாடு முழுவதும் ஒவ்வொரு வீடுகளுக்கும், சி.எப்.எல்., பல்புகளை இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ளது.தமிழகத்தில், ஒன்பது மண்டலங்களை, இரண்டாக பிரித்து, முதல்கட்டமாக, விழுப்புரம் மின் மண்டலத்தின் சில பகுதியில், சி.எப்.எல்., பல்புகள் வழங்கப்பட்டுள்ளன. விரைவில், மற்ற மண்டலங்களிலும், இலவச சி.எப்.எல்., பல்புகள் வழங்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மின்வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஈரோடு மண்டலத்தில் முதல்கட்டமாக, சேலம், கோபி, நாமக்கல், மேட்டூர் மின் வினியோக வட்டங்களில் உள்ள வீடுகளிலும், அடுத்த கட்டமாக, ஈரோடு வட்டத்திலும், சி.எப்.எல்., பல்புகள் விரைவில் வழங்கப்பட உள்ளன. ஒரு வீட்டுக்கும், நான்கு, 11 வாட்ஸ் சி.எப்.எல்., பல்புகள் வழங்கப்படவுள்ளன.நான்கு சி.எப்.எல்., பல்புகளுக்கு மாற்றாக, வீட்டு உரிமையாளர் நான்கு குண்டு பல்புகளை ஒப்படைக்க வேண்டும். இதன் மூலம், மக்களிடம், சி.எப்.எல்., பல்பு குறித்து, விழிப்புணர்வு ஏற்படும். மின்சாரம் சேமிக்கப்படுவது மட்டுமின்றி, சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
குண்டு பல்புகளுக்கு தடை? குண்டு பல்பை விட, சி.எப்.எல்., பல்புகளின் விலை, பல மடங்கு அதிகம். ஒரு, 60 வாட்ஸ் குண்டு பல்பு, 10 ரூபாய்க்கும், அதே வெளிச்சத்தை தரும், 15 வாட்ஸ் சி.எப்.எல்., பல்பு, 110 முதல், 140 ரூபாய் வரை விற்கிறது. விலை குறைவாக இருக்கும் குண்டு பல்புகளை, ஏழை மக்களே அதிகம் பயன்படுத்துவதால், தடை விதிக்க அரசு தயங்குகிறது.ஆனால், சி.எப்.எல்., பல்புகள் விலை அதிகமாக இருந்தாலும், மின் கட்டணம் சேமிக்கப்படுகிறது. சி.எப்.எல்., பல்புகளை இலவசமாக வழங்குவதன் மூலம், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு, அதை வாங்க துவங்கினால், நாளடைவில் குண்டு பல்புகள் உபயோகம், முற்றிலும் நின்று விட வாய்ப்புள்ளது.
புட்டபர்த்தி பகவான் சத்ய சாய்பாபா (85), நேற்று காலை ஸித்தியடைந்தார். அவரது உடலை தரிசிக்க, லட்சக்கணக்கான பக்தர்கள் பிரசாந்தி நிலையத்தில் குவிந்துள்ளனர். வரும் 27ம் தேதி அவரது உடல், சமாதியில் அடக்கம் செய்யப்பட உள்ளது. ஆந்திர அரசு இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. ஆன்மிக தலைவராக இருந்து கொண்டு, எண்ணற்ற சமூக சேவைகளை ஆற்றியவர் சாய்பாபா. உலகம் முழுவதும் பல கோடி பக்தர்களை கொண்ட சாய்பாபாவின் உடல் நிலை, கடந்த மாதம் 28ம் தேதி மோச மடைந்தது. அவரது இருதயம், சிறுநீரகம், கல்லீரலின் செயல்பாடுகள் படிப்படியாக குறைந்து, நேற்று செயலிழந்தன. அனந்தப்பூர் மாவட்டத்தில் உள்ள சத்தியசாய் உயர் மருத்துவ அறிவியல் மையத்தில், அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. கடந்த ஒரு வாரமாக அவருக்கு செயற்கை சுவாசம் செலுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று காலை 7.40 மணிக்கு அவர் ஸித்தியடைந்தார்.
சத்தியசாய் மருத்துவமனையின் இயக்குனர் ஏ.என்.சபையா, சாய்பாபாவின் இதயம் மற்றும் நுரையீரல் முற்றிலும் தன் செயல்பாடுகளை நிறுத்தி விட்டதாக, நேற்று காலை அறிவித்தார். அவர், "பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா அவர்கள் பூத உடலை நீக்கி, விண்ணுலகம் சென்றார். இதயம் மற்றும் நுரையீரல் செயலிழந்து விட்டது' என்றும் தெரிவித்தார்.
சாய்பாபாவின் மறைவு செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பிரதமர், ஜனாதிபதி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், திரையுலக பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அனந்தப்பூர் மாவட்டம் புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்தி நிலையத்தின் சாய் குல்வந்த் ஹாலில், சாய்பாபாவின் உடல் வைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 6 மணி முதல் பக்தர்கள் தரிசிக்க அனுமதியளிக்கப்பட்டது. முன்னதாக, அவர் வழக்கமாக வலம்வரும் பிரசாந்தி நிலையத்தில் வைக்கப்பட்டது. இதையடுத்து, சாலையின் இருபுறமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று, சாய்பாபாவை தரிசிக்க காத்திருந்தனர்.
மாநில தொழில்துறை அமைச்சர் கீதா ரெட்டி குறிப்பிடுகையில், "சத்திய சாய் அறக்கட்டளை நிர்வாகிகள் தான் பாபாவின் உடலை சமாதியில் அடக்கம் செய்வது குறித்த ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அடுத்த இருநாட்களுக்கு (திங்கள், செவ்வாய்க்கிழமை) சாய்பாபாவின் உடல் பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் தரிசனத்துக்காக வைக்கப்பட்டிருக்கும். மாநில அரசு நான்கு நாட்களுக்கு துக்கம் அனுஷ்டிக்கிறது' என்றார்.
கடந்த 1926ம் ஆண்டு சத்திய நாராயண ராஜு என்ற இயற்பெயருடன் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்தார். ஷீரடி சாய்பாபாவின் மறு அவதாரம் தான் நான் என கூறி வந்த சாய்பாபா, ஆன்மிக பணியுடன் ஏராளமான கல்வி, சுகாதார பணிகளை ஆற்றி வந்தார். கையை அசைத்து லிங்கம், மோதிரம், விபூதி போன்ற பொருட்களை வரவழைத்து பக்தர்களை ஆசீர்வதிப்பது உண்டு. புட்டபர்த்தி பகுதி எல்லா வளத்துடன் இருக்க அவர் ஆற்றிய சமுதாயப் பணிகள் ஏராளம்.அவர் ஆற்றிய பணிகளை, தொடர்ந்து அறக்கட்டளை ஆற்றும் என, மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி நம்பிக்கை தெரிவித்துள்ளார். பாபாவின் உடல் பிரசாந்தி நிலையத்தில் உள்ள குல்வந்த் ஹாலில், சமாதியாக வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
நான்கு நாட்கள் துக்கம் : நான்கு நாட்களுக்கு மாநிலம் முழுவதும் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என, அறிவித்துள்ளார் கிரண்குமார் ரெட்டி. புதன் கிழமையன்று அனந்தப்பூர் மாவட்டத்துக்கு அரசு விடுமுறை அறிவித்துள்ளது. பாபாவின் இறுதிச் சடங்குகள் அரசு மரியாதையுடன் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.சாய்பாபா மருத்துவமனையில் இருந்த போதே அவரை பார்க்க, ஆயிரக்கணக்கான பக்தர்கள், புட்டபர்த்தியில் குவிந்தனர். ஆனால், பாபாவை பார்க்க அவர்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை. இதனால், பக்தர்கள் பலர் ஏமாற்றமடைந்தனர். எனவே, புட்டபர்த்தியில் 6 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது, பாபாவின் உடலை தரிசிக்க லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்துள்ளதால் கூடுதல் பாதுகாப்புக்கு, மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது. பாபாவின் மறைவையொட்டி, புட்டபர்த்தியில் கடைகளும், வர்த்தக நிறுவனங்களும் அடைக்கப்பட்டுள்ளன.ஆன்மிக பணியுடன் மக்கள் சேவையை ஆற்றி, உலக வரைபடத்தில் புட்டபர்த்தியை இடம்பெற செய்த மகானின் சகாப்தம் நிறைவடைந்ததைக் கண்டு, மக்கள் பாபாவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கின்றனர்.தனது தூய்மையான சமூக பணியின் மூலம் பலரையும் கவர்ந்தவர் பாபா. தனி விருப்பின்றி சமுதாய சேவை ஆற்றிய அவர், அன்பின் திருவுருவாக வழிகாட்டிய சகாப்தம் முடிந்தது என்று பக்தர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர். ஆனாலும், அவர் காட்டிய வழியில் தொண்டு தொடரும் என்றும் கூறினர்.
தனிப்பட்ட முறையில் தங்களுக்கு அவர் ஆசி வழங்கி, வாழ்வில் வசந்தம் ஏற்பட்டதைக் கூறி புகழாரம் சூட்டி, அங்கே பக்தர்கள் குவிந்துள்ளனர்.வெளிநாட்டு பக்தர்கள் பலர் விமானம் மூலம் பாபாவை தரிசிக்க வந்த வண்ணம் உள்ளனர். இதற்காக, கூடுதல் விமான சேவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அத்துடன், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பிரமுகர்கள் அஞ்சலி செய்தி அனுப்பியவண்ணம் உள்ளனர்.
சாய் வாக்கு சத்ய வாக்கு:" 95 வயது வரை வாழ்வேன்" என்று சத்ய சாய் பாபா ஏற்கனவே கூறியிருந்தார். இதனால்தான் மார்ச் மாதம் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது, "பாபாவுக்கு ஒன்றும் நேராது; அவர் உடல்நிலை தேறி மீண்டு வருவார்" என்று பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் சாய் பாபா தற்போது ஸித்தி அடைந்தது எப்படி என்று சில பக்தர்கள் மனதில் ஐயம் எழலாம்.
இது குறித்து சாய் பாபாவின் தீவிர பக்தர் ஒருவர் விளக்குகையில், "நாம் ஆங்கில முறைப்படி ஆண்டுகளைக் கணக்கிட்டு, சாய் பாபாவுக்கு தற்போது வயது 86 என்று கூறுகிறோம். ஆனால் ஹிந்து முறைப்படி சந்திரனை அடிப்படையாக கொண்டே ஆண்டு நிர்ணயிக்கப்படுகிறது. அதாவது ஆங்கில முறைப்படி ஒரு மாதம் என்பது 30 அல்லது 31 நாட்கள். ஆனால் ஹிந்து முறைப்படி பூமியை சந்திரன் ஒருமுறை சுற்றி வரும் காலம்தான் ஒரு மாதம் என கணக்கிடப்படுகிறது. சந்திரன் ஒருமுறை பூமியைச் சுற்றி வர 27.3 நாட்கள்தான் ஆகிறது. அந்த அடிப்படையில் கணக்கிட்டால் சாய் பாபாவுக்கு தற்போது வயது 94 ஆகிறது. மேலும் ஹிந்து வழக்கப்படி அவர் பிறந்த ஆண்டே முதல் வயதாக கருதப்படுவதால் சாய் பாபாவுக்கு 95 ஆகிறது. எனவே சாய் பாபா தமது ஆயுள் குறித்து தெரிவித்த வாக்கு பொய்க்கவில்லை; சாய் வாக்கு சத்ய வாக்காகவே இருக்கிறது" என்று தெரிவித்தார்.
5 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள்
மறைந்த ஆன்மீகத் தலைவர் சத்ய சாய்பாபாவின் உடல் அடக்கம் புதன்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கிட்டத்தட்ட 5 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசன் முதல் ஆண்டி வரை அத்தனை தரப்பினராலும் வணங்கப்பட்ட ஒரு ஆன்மீகத் தலைவர் சாய்பாபா. அவருக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் உள்ளனர்.
கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த சாய்பாபா நேற்று காலை 7. 40 மணிக்கு மரணமடைந்தார். அவரது மறைவு சாய்பாபாவின் பக்தர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது. உலகெங்கிலும் உள்ள சாய் பாபா மையங்களில் பக்தர்கள் கண்ணீர் விட்டு அழுது தங்களது துக்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். புட்டபர்த்தியிலும் சோக அலை வீசுகிறது.
85 வயதான சாய்பாபாவின் மரணச் செய்தி நேற்று காலை பத்தேகால் மணியளவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்ட்டது.
பாபாவின் உடல் தற்போது பொதுமக்கள் அஞ்சலிக்காக பிரஷாந்தி நிலையத்தில் உள்ள சாய் குல்வந்த் ஹால் அரங்கில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு செவ்வாய்க்கிழமை வரை உடல் வைக்கப்பட்டிருக்கும்.
அவரது உடலை செவ்வாய்க்கிழமை வரை அனைவரும் கண்டு இறுதி தரிசனம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு சாய்பாபாவின் இல்லம் உள்ள யஜூர் மந்திர் அருகே அடக்கம் செய்யப்படவுள்ளது. இந்து ஆன்மீகத் தலைவர்கள் உடல் அடக்க நிகழ்ச்சியை நடத்தவுள்ளனர்.
உடல் அடக்கம் புதன்கிழமை நடைபெறும் எனத் தெரிவித்துள்ள ஆந்திர மாநில உள்துறை அமைச்சர் சவீதா ரெட்டி, அடக்கம் நடைபெறும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.
இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து அதற்கான விரிவான ஏற்பாடுகள், பாதுகாப்புகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் பக்தர்கள் புட்டபர்த்தி வருகின்றனர்.
பாபாவின் உடல் ஆரஞ்சு நிற உடையால் மூடப்பட்டிருந்தது. அவரது கண்கள் வரையிலும் துணியைப் போர்த்தியிருந்ததாக உடலை நேரில் பார்த்த சாய் குமார் என்ற உள்ளூர் வர்த்தகர் தெரிவித்தார். பாபாவின் உடலுக்கு அருகே இருந்த யாருமே பேசவில்லை. மாறாக அவர்களது கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வந்து கொண்டிருந்தது என்றார் அவர்.
நேற்று மாலை 3 மணியளவில் சாய் குல்வந்த் ஹாலுக்கு சாய்பாபாவின் உடல் மாற்றப்பட்டது. அங்குதான் கடந்த நாற்பது வருடங்களுக்கும் மேலாக சொற்பொழிவுகளை ஆற்றி வந்தார் சாய்பாபா. பக்தர்களையும் இங்குதான் அவர் சந்தித்து தரிசனம் தருவார்.
மனிதன் தன் வாழ்வில் எதற்கு அதிக முக்கியத்துவம் தருகிறானோ அதையே அதிகம் காண்கிறான், அதுவே அவன் வாழ்வில் அதிகம் பெருகுகிறது என்று ஞானிகள் சொல்கிறார்கள். எதில் ஈடுபாடு அதிகமாகிறதோ, எதை அவன் மிக முக்கியம் என்று நினைக்கிறானோ அது குறித்த அவன் எண்ணங்களும், உணர்வுகளும் சக்தி வாய்ந்தவைகளாகின்றன. தன்னைச் சுற்றிலும் அதை ஈர்க்கும் ஒரு காந்த மண்டலத்தை அவன் உருவாக்கிக் கொள்கிறான். அது சம்பந்தமான சூழ்நிலைகளையும், மனிதர்களையும் அவன் தன்னிடத்தே ஈர்த்துக் கொள்கிறான்.
ஒவ்வொரு துறையிலும் நிறைய சாதனை புரிந்தவர்களைக் கேளுங்கள். அந்தந்த துறையில் அவர்களுக்கு மகத்தான ஈடுபாடு இருந்திருக்கிறதென்று அவர்கள் சொல்வார்கள். அவர்கள் எண்ணமெல்லாம் அதுவாக இருந்திருக்கிறதென்றும், அது மற்ற எல்லாவற்றையும் விட அதிக முக்கியத்துவத்தில் இருந்திருக்கிறதென்றும், அதற்காக மற்ற எத்தனையோ விஷயங்களை அவர்கள் தியாகம் செய்திருக்கிறார்கள் என்றும் சொல்வார்கள்.
பல விஷயங்கள் நமக்கு அதிகம் கிடைப்பதில்லை என்பதற்குக் காரணமே அவற்றிற்கு நாம் நம் வாழ்வில் பிரதான இடத்தை அளிப்பதில்லை என்பது தான். அல்லது அதற்கு எதிர்மாறான ஒன்றிற்கு நாம் அதை விட அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பது கூடக் காரணமாக இருக்கலாம்.
பணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறேன் ஆனால் அது ஒன்றும் என்னிடம் அதிகம் இல்லை என்று சொன்ன இருவரை நான் தனிப்பட்ட முறையில் அறிவேன். அவர்களை ஆராய்ந்ததில் ஒருவர் பணத்தை விட அதிகமாக சும்மா சோம்பி இருப்பதை விரும்புபவர் என்பதையும், இன்னொருவர் பணத்தை விட அதிகமாக அதை சூதாட்டத்தில் வைப்பதில் விருப்பமுள்ளவர் என்பதையும் நான் காண நேர்ந்தது. அந்த இரண்டுமே பணம் சேரத் தடையாக இருக்கும் பழக்கங்கள். எனவே பணம் நிறைய வேண்டும் என்ற ஆவல் அவர்களுக்கு நிறைய இருந்தாலும், பணத்துக்கு அவர்கள் மிக அதிக முக்கியத்துவத்தை தருபவர்கள் என்ற போதிலும் அதற்கு எதிர்மறையான ஒன்றிற்கு அதை விட அதிக முக்கியத்துவம் தந்ததால் அவர்கள் கடனாளியாகவே இருக்கிறார்கள்.
எனவே நீங்கள் மிக முக்கியம் என ஒன்றை நினைப்பதாக நம்பி இருந்தும் அது அதிகம் உங்களுக்குக் கிடைக்கவில்லை என்றால் நீங்கள் முக்கியத்துவம் அளிக்கும் விஷயங்களின் பட்டியலை மீண்டும் ஒரு முறை ஆராயுங்கள். அந்தப் பட்டியலில் அந்த முக்கியமான விஷயத்திற்கும் அதிகமாக அதற்கு இசைவில்லாத, அல்லது எதிராக உள்ள விஷயம் ஒன்றிற்கு உங்களை அறியாமல் பிரதானத்துவம் நீங்கள் தந்து கொண்டு இருக்கலாம்.
ஆராய்ச்சியாளர்கள் நீங்கள் வாழ்க்கையில் கண்டிப்பாக வேண்டும் என்று நினைப்பதைக் கூட எதிர்மறை வாக்கியங்களில் நினைக்காமல் இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். உதாரணத்திற்கு, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்கும், நோயில்லாமல் இருக்க வேண்டும் என்று எண்ணுவதற்கும் இடையே பெரிய வித்தியாசம் இருப்பதாகச் சொல்கிறார்கள். இரண்டாவதான அந்த எதிர்மறை வாக்கியத்தை ஆழ்மனதில் எண்ணும் போது நோய் என்ற வார்த்தையே பிரதானமாகிறது என்றும் அதையே அதிகம் நாம் நம் வாழ்வில் வரவழைக்கிறோம் என்றும் சொல்கிறார்கள்.
எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி ஆரோக்கியத்திற்கு மிக முக்கியத்துவம் தருபவர். அவருக்கு கவனமாக இல்லாவிட்டால் எதிலிருந்தும் சீக்கிரம் "infection" ஆகி விடும் என்ற பயம் அதிகம். எங்கு சென்றாலும் infection ஆகி விடக் கூடாது என்று சர்வ ஜாக்கிரதையாக இருக்கும் அவர் எனக்குத் தெரிந்து அடிக்கடி நோய்க்கிருமிகளால் தாக்கப்பட்டு சிகிச்சை பெறுவதைப் பல முறை கண்டிருக்கிறேன். ஆக ஆரோக்கியம் என்ற எண்ணத்தை விட "infection" என்ற எண்ணமே ஆழமாகப் பதிந்து முக்கியத்துவம் பெற்றதன் விளைவே அது என்பது தான் சரியாகத் தோன்றுகிறது.
எனவே அப்படி இருக்கக்கூடாது, இப்படி செய்யக் கூடாது, இது வேண்டாம் என்று எதிர்மறை வாக்கியங்களால் ஒன்றிற்கு முக்கியத்துவம் தருவதை நிறுத்தி விட்டு அப்படி இருக்க வேண்டும், இப்படிச் செய்ய வேண்டும், இது வேண்டும் என்று ஆழமாக நினைப்பது தான் அதை நம் வாழ்வில் வரவழைப்பதற்கு நல்ல வழி.
ஒன்று உங்களுக்கு மிக முக்கியம் என்றால், அதைத் தவிர வேறு எதுவும் அவ்வளவு முக்கியம் இல்லை என்றால் அதைக் காந்தமாக உங்களிடம் ஈர்க்கத் தேவையான சக்திகள் உங்களிடம் கண்டிப்பாக உருவாகும். அதை நிறைவேற்றத் தேவையான சூழ்நிலைகளும், மனிதர்களும் கண்டிப்பாக உங்கள் வாழ்வில் வருவார்கள். இதில் நம்பிக்கை மிக முக்கியம். நம்பிக்கை இல்லாமல் சந்தேகமே பிரதானமாக இருந்தால் அதை உறுதிப்படுத்துகிற மாதிரியான நிஜங்களே நடக்கும்.
எனவே உங்களுக்கு வேண்டியதையே பிரதானப்படுத்துங்கள். அதற்கே முதலிடம் கொடுங்கள். அதைக் கண்டிப்பாகப் பெறுவீர்கள் அல்லது அடைவீர்கள்.
உலகின் மிகுந்த சக்திவாய்ந்த 100 விவிஐபிகளில் ஒருவராக டைம்ஸ் பத்திரிகையால் பட்டியலிடப்பட்டிருந்த இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே பெயர், இப்போது பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
ஐநா அறிக்கையில் ராஜபக்சேவின் போர்க்குற்றங்கள் பட்டியலிடப்பட்டிருந்த காரணத்தாலும், டைம்ஸ் பட்டியலில் இடம் பெறுவதற்காக ராஜபக்சே சார்பில் பெருமளவில் ஆன்லைனில் கள்ள ஓட்டுகள் குத்தப்பட்டதாலும் அவரை நீக்கியுள்ளது டைம்.
உலகின் பிரபலமான, செல்வாக்கு மிக்க 100 நபர்களை ஆண்டுதோறும் வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்வது டைம் பத்திரிகையின் வழக்கம். இந்தப் பட்டியலில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவின் பெயரும் இடம் பெற்றிருந்தது. இவருக்கு நான்காவது இடம் தரப்பட்டிருந்தது. அவருக்கு மொத்தம் 2,38,908 வாக்குகள் பதிவாகியிருந்தன. இவற்றில் 44,428 வாக்குகள் மகிந்தாவுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டிருந்தன.
இந்தப் பட்டியலிலேயே எதிர்வாக்குகள் அதிகமாகப் பெற்றிருந்தவர் ராஜபக்சே ஒருவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதை சரி செய்வதற்காக தனது அலுவலகத்திலேயே ஒரு குழுவை அமைத்த ராஜபக்சே, அவர்கள் மூலம் ஆன்லைனில் ஏராளமான கள்ள ஓட்டுகளை போட வைத்துள்ளார். இதன்மூலம் கடந்த சில நாட்களுக்கு முன் ஆன்லைன் வாக்கெடுப்பில் 6வது இடத்துக்கு வந்த ராஜபக்சே, நேற்று காலை 4வது இடத்துக்கு முன்னேறினார்.
இதனால் சந்தேகமடைந்த டைம் இதழ் தனது தொழில்நுட்பக் குழு மூலம் ராஜபக்சே தரப்பின் மோசடியை தெரிந்து கொண்டு அவரை பட்டியலை விட்டு தூக்கியுள்ளது.
இந்நிலையில், டைம் இதழின் ஆன்லைன் வாக்குப் பதிவு நேற்று முடிந்தது. இறுதிப் பட்டியல் இன்று இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.
அதில் ராஜபக்சே பெயர் இல்லை!!.
இதற்கிடையே, போர்க்குற்றவாளி என உலக நாடுகளால் குற்றம் சாட்டப்பட்டு, சர்வதேச போர்க்குற்ற நீதிமன்ற விசாரணைக்கு காத்திருக்கும் ராஜபக்சே பெயரை செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் சேர்த்ததற்கே டைம் நாளிதழுக்கு உலகமெங்கிலுமிருந்து கண்டனங்கள் குவிந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஐநா நிபுணர் குழு அறிக்கையில் ராஜபக்சே அரசு மற்றும் படையினரின் போர்க்குற்றங்கள் வரிசையாக பட்டியலிடப்பட்டிருந்தன. உலகில் அத்தனை மோசமான ரசாயண குண்டுகளையும் பயன்படுத்தி லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்றார்கள் என ராஜபக்சே அரசு மீது அழுத்தம் திருத்தமாக ஆதாரங்களுடன் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இறுதி நாட்களில் மட்டும் 40000 தமிழர்கள் வன்னியில் கொல்லப்பட்டதை அந்த அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.
இத்துடன், ஐநாவிடம் அறிவித்த பிறகு இலங்கை ராணுவத்திடம் சரணடைய வந்த தமிழர் தலைவர்களை எரித்துக் கொன்றதற்கான சாட்சியங்களும், புலிகளின் பெண் போராளிகளை கொடூரமாக ராணுவம் சிதைத்ததற்கான ஆதாரங்களையும் சேனல் 4 மற்றும் அல்ஜஸீரா தொலைக்காட்சிகள் அடுத்தடுத்து வெளியிட்ட வண்ணம் உள்ளன. குறிப்பாக இந்த வாரம் முழுவதும் சேனல் 4, பார்ப்பவரின் இதயங்களை அதிர்ச்சியில் உறைய வைக்கும் இலங்கை ராணுவத்தின் கொடிய செயல்களுக்கு ஆதாரங்களை வெளியிட்டு வருகிறது.
ஐநா நிபுணர் குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு தினங்களில் வெளியாகும்போது, இலங்கை அதிபர் என்ற பட்டியலிலிருந்தே ராஜபக்சே பெயர் நீக்கப்படுமோ!?.