நலமுடன் நாடு திரும்பினார் யுவராஜ்சிங்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான யுவராஜ்சிங் நலமுடன் இன்று நாடு திரும்பினார். அவருக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

புற்றுநோய்க்காக அமெரிக்காவின் போஸ்டன் நகரில் யுவராஜ் கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததைத் தொடர்ந்து லண்டனில் அவர் ஓய்வெடுத்து வந்தார்.

அண்மையில் லண்டன் சென்றிருந்த இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர நாயகன் சச்சின் தெண்டுல்கர், யுவராஜை சந்தித்து நலம் விசாரித்தார்.

இந்நிலையில் தாம் நாடு திரும்பும்நாள் வந்துவிட்டதாகவும் இன்று இந்தியா வர உள்ளதாகவும் டிவிட்டர் தளத்தில் யுவராஜ்சிங் நேற்று தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து டெல்லி விமான நிலையத்தில் இன்று காலை யுவராஜ் சிங்கின் உறவினர்களும் ரசிகர்களும் குவிந்திருந்தனர். அவர்கள் யுவராஜூக்கு உற்சாக வரவேற்பளித்தனர். யுவராஜ்சிங் சற்று மெலிந்திருந்தாலும் உற்சாகத்துடன் காணப்பட்டார்.

தமது அடுத்த கட்ட திட்டம் தொடர்பாகவும் தமக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தும் புதன்கிழமையன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

புற்றுநோய் சிகிச்சைக்காக வெளிநாடு சென்றதால் ஆஸ்திரேலிய தொடர் மற்றும் தற்போதைய ஐ.பி.எல்.5வது தொடரில் யுவராஜ் பங்கேற்கவில்லை.

Post a Comment

1 Comments

Anonymous said…
இளமையில் நோயின் கொடுமையில் விடுபட்டு பரிபூரண குணமடைய வேண்டும்.