"சிம்' கார்டு வாங்க போலி ஆவணங்கள் கொடுத்தால்போலீசில் புகார்

"மொபைல் போன், "சிம்' கார்டு பெறுவதற்காக, வாடிக்கையாளர்கள் போலியான ஆவணங்களைக் கொடுத்தால், சம்பந்தபட்ட டீலர்கள், இதுகுறித்து போலீசில் புகார் அளிக்க வேண்டும்' என, தொலை தொடர்புத் துறையின் புதிய விதிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு சிலர், போலியான ஆவணங்களைக் கொடுத்து, மொபைல் போனுக்கான, "சிம்' கார்டுகளைப் பெற்று, அவற்றை, பயங்கரவாதச் செயல்களுக்காகப் பயன்படுத்துவதாகப் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, "சிம்'கார்டுகள் வழங்குவதற்கு, புதிதாகக் கடுமையான விதிமுறைகளை, தொலை தொடர்புத் துறை உருவாக்கியுள்ளது. இந்தப் புதிய விதிமுறைகள், நவம்பர் இரண்டாம் வாரத்திலிருந்து, அமலுக்கு வரவுள்ளன. 


"சிம்' கார்டுகள் வாங்குவதற்காக, தொலை தொடர்பு நிறுவனங்களின் டீலர்களையோ, விற்பனை மையங்களையோ, வாடிக்கையாளர்கள் அணுகும்போது, கவனமாக இருக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் வழங்கும் ஆவணங்களும், அவர்களைப் பற்றிய விவரங்களும், உண்மையானவையா என்பதை, டீலர்கள் உறுதி செய்ய வேண்டும்.விண்ணப்பத்தின் புகைப்படத்தில் உள்ளவரும், தங்களிடம் "சிம்' கார்டு பெற்றவரும், ஒரே நபர் தான் என்பதையும், உண்மையான ஆவணங்களை ஒப்பிட்டுப் பார்த்ததாகவும், கையொப்பமிட்டு, உறுதி அளிக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் வழங்கும் ஆவணங்கள் போலி என, தெரியவந்தால் அதுகுறித்து போலீசாரிடம் புகார் அளிக்க வேண்டும்.

இந்த விஷயத்தை, 15 நாட்களுக்குள், சம்பந்தபட்ட தொலை தொடர்புச் சேவை வழங்கும் நிறுவனத்தின் கவனத்துக்குக் கொண்டு வர வேண்டும். அவ்வாறு, டீலர்கள் புகார் அளிக்காத பட்சத்தில், சம்பந்தபட்ட தொலை தொடர்பு நிறுவனம், குறிப்பிட்ட டீலருக்கு எதிராக, அடுத்த மூன்று நாட்களுக்குள், போலீசில் புகார் அளிக்க வேண்டும்.தொலை தொடர்பு நிறுவனமும், இதுபற்றி புகார் அளிக்கவில்லை என்றால், அந்த நிறுவனத்துக்கு எதிராக, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

தனி நபருக்கு, மொத்தமாக, "சிம்' கார்டுகளை வழங்குவதற்கும், தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்ட"சிம்' கார்டுகளை வாடிக்கையாளர்கள் கேட்கும் பட்சத்தில், சம்பந்தபட்ட தொலை தொடர்பு நிறுவனத்தின் அதிகாரிகள், அந்த வாடிக்கையாளர் வசிக்கும் இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி, அவரைப் பற்றிய தகவல்களை உறுதி செய்ய வேண்டும். அதற்குப் பின்னரே, அவருக்கு,"சிம்' கார்டுகளை வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

1 Comments

அப்பாடா... இப்போதாவது நல்ல முடிவு எடுத்தார்களே...
தகவலுக்கு நன்றி...