ரஜினியின் பஞ்ச் வசனங்கள் - அத்வானி பாராட்டு மழை!


 ரஜினியின் 'பஞ்ச் வசனங்கள்' மிகவும் அர்த்தமுள்ளவை, வாழ்க்கையில் பின்பற்ற வேண்டியவை என பாஜக தலைவர் எல்கே அத்வானி புகழ்ந்துள்ளார்.
ரஜினியின் 'பஞ்ச்' வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலம். ஆரம்ப காலத்திலிருந்தே ஒவ்வொரு படத்திலும் 'பஞ்ச்' வசனங்கள் இடம் பெற்று வருகின்றன.
அவரது ஆரம்ப காலப் படம் 'அவர்களி'ல் கூட பல பஞ்ச் டயலாகுகள் டம்பெற்றிருக்கும்.
'பாட்ஷா' படத்தில் வரும் நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி வசனமும், படையப்பா படத்தில் வரும் என் வழி தனி வழி வசனமும், அண்ணாமலை படத்தில் இடம் பெறும் நான் சொல்றதையும் செய்வேன், சொல்லாததையும் செய்வேன் வசனமும் ரசிகர்கள் மனதில் கல்வெட்டுகளாய் நிலைத்துவிட்டன.
முத்து படத்தில் அவர் பேசும் 'நான் எப்ப வருவேன்? எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா வரவேண்டிய நேரத்தில் கரெக்டா வருவேன்' என்ற வசனம் அவரது அரசியல் பிரவேசத்தை பறைசாற்றுவது போல் இருப்பதாக பேசப்பட்டது. இன்றும் அவர் தொடர்பான பல நிகழ்வுகளுக்குப் பொருத்தமான வசனமாகப் பார்க்கப்படுகிறது.
இதுபோல் ரஜினி படங்களில் அவர் பேசும் பஞ்ச் வசனங்களை தொகுத்து ஆங்கிலத்தில் புத்தகமாக வெளியிட்டுள்ளனர். அதற்கு ரஜினியின் 'பஞ்ச் தந்திரம்' என பெயரிட்டுள்ளனர். பஞ்ச் வசனங்ளை பிசினஸ் மற்றும் நிர்வாகவியல் பாடங்களுடன் இணைத்து இப்புத்தகத்தை உருவாக்கியுள்ளனர்.
குறிப்பாக, 'பார்த்து வேலை செய்யுங்கள். பார்க்கும் போது வேலை செய்யாதீர்கள்' என்ற ரஜினியின் பஞ்ச் வசனத்தை குறிப்பிட்டு பணியாட்கள் சுய உந்துதலால் பணிகளை செய்ய வேண்டும், மற்றவர்கள் பார்க்கிறார்களே என்பதற்காக மட்டும் வேலை செய்யக் கூடாது போன்ற விளக்கங்களைத் தந்துள்ளனர்.
இந்த புத்தகத்தை பாரதீய ஜனதா தலைவர் எல்.கே.அத்வானி படித்து பாராட்டியுள்ளார். அவர் ப்ளாக்கில் இதுகுறித்து எழுதியுள்ளதாவது:
நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினியை மையமாக வைத்து எழுதப்பட்ட சுயமுன்னேற்றம் பற்றிய 124 பக்கங்கள் கொண்ட நூலை படித்தேன். இந்த நூலின் பெயர் 'ரஜினி பஞ்ச் தந்திரா'. நூலின் பெயரை படிக்கும் போது பஞ்ச் தந்திரா என்ற வார்த்தையில் யு-க்கு பதில் ஏ போட்டுள்ளனர். ஒருவேளை ஏதாவது ஸ்பெல்லிங் மிஸ்டேக் செய்து விட்டார்களோ என்று நினைக்க வேண்டாம். உண்மையில் அதை வேண்டுமென்று தான் செய்துள்ளனர். இது மிகவும் பொருத்தமாக உள்ளது.
ரஜினிகாந்த் தனது படங்களில் பேசிய முப்பது பஞ்ச் வசனங்கள் பற்றிய அலசல் இந்த நூல். அந்த பஞ்ச் வசனங்களில் இருந்து நாம் பெறக்கூடிய பிசினஸ் மற்றும் நிர்வாகவியல்களை அழகாக விளக்கியுள்ளனர்," என்று குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

1 Comments

நல்ல நூல்... நானும் படித்துள்ளேன்...

நன்றி…