NEWS

*** !! ***BEST VIEW IN THIS BLOG PLEASE USE MOZILLA FIREFOX AND GOOGLE CHROME - THANK YOU***

Subscribe Now

Monday, August 8, 2011

சென்னை 3 மாதத்தில் சுத்தம் -குப்பைகளை அகற்ற உத்தரவு


சென்னை மாநகரை நான் ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தபோது பெருமளவில் குப்பைகள் தேங்கிக் கிடப்பதைப் பார்த்தேன். அவற்றை முற்றிலும் சீர் செய்ய 3 மாதங்களில் விரிவான திட்டம் அறிவிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

சட்டசபையில் இன்று விதி எண் 110ன் கீழ் அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருந்ததாவது:

தமிழக மக்கள் அனைவரும் சுகாதாரமான சுற்றுச்சூழலில் வசிப்பதை உறுதி செய்வது எனது தலைமையிலான அரசின் முக்கிய நோக்கம் ஆகும். எனவே தான் ஆளுநர் உரையில், சுற்றுச்சூழலை பாதுகாக்க அரசு சிறப்பு முயற்சிகளை மேற்கொள்ளும் என்றும், கிராமப்புறங்களையும், நகர்புறங்களையும் தூய்மைப்படுத்த ஒரு சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.மேலும், 4.8.2011 அன்று, இந்த மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட, 2011-12 ஆம் ஆண்டுக்கான திருத்த வரவு-செலவு மதிப்பீட்டில், சென்னையிலும், அதன் புறநகர்ப் பகுதிகளிலும், திடக் கழிவு மேலாண்மைக்காக ஒரு விரிவான திட்டம் தயாரித்து, கரிம சேமிப்புக்காக கிடைக்கப் பெறும் நிதியையும் பயன்படுத்தி, இத்திட்டத்தைச் செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தோம்.

தற்போது, சென்னை மாநகர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள சுற்றுச்சூழல் குறித்த ஒட்டுமொத்த நிலையை நேரடியாகத் தெரிந்து கொள்ளும் பொருட்டு, நான் 5.8.2011 அன்று ஹெலிகாப்டரில் சென்று வான் வழியாக ஆய்வு செய்தேன். அப்போது, பெருங்குடி, கொடுங்கையூர் ஆகிய இடங்களில் உள்ள குப்பை கொட்டும் வளாகங்களையும் பார்வையிட்டேன். இந்த ஆய்வின் போது, சென்னை மாநகர், அதன் சுற்றுப்புற பகுதிகளில் ஏராளமான குப்பைகள் கொட்டிக் கிடந்தது தெரிய வந்தது.

மேலும், சென்னை மாநகரைச் சுற்றியுள்ள சில பகுதிகளில், குடியிருப்புகளைச் சுற்றி மழைநீர், கழிவுநீர் தேங்கியுள்ளதையும் கண்டறிந்தேன். மிகவும் அசுத்தமாக இருந்தது. எனவே, சென்னை மாநகர், அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள மக்கள் சுகாதாரமான சூழலை உடனடியாகப் பெறுவதற்கு ஏதுவாக, முதற் கட்டமாக, தேங்கியுள்ள குப்பைகளை உடனடியாக அகற்றவும்; குடியிருப்புப் பகுதிகளில் தேங்கியுள்ள அசுத்தமான நீரை அகற்றுவதற்குமான சிறப்பு தூய்மைப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும்.

இந்தத் தூய்மைப்படுத்தும் பணிகள், மூன்று மாத காலத்திற்குள் செய்து முடிக்கப்படும். இதனைத் தொடர்ந்து, இந்தப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், 2011-12ஆம் ஆண்டுக்கான திருத்த வரவு-செலவு மதிப்பீட்டில் குறிப்பிட்டவாறு, விரிவான திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

Post Comment

2 comments:

M.R said...

சுத்தம் சோறு போடும்

karurkirukkan said...

welcome sir

POPULAR

Followers

FOLLOW ME