வாடகைக்கு குடியிருப்போர் விவரத்தை அளிக்க காவல்துறை ஆணை

சென்னை நகரில் குடியிருக்கும் வாடகைதாரர்கள் பற்றிய முழு விவரங்களையும் புகைப்படத்துடன் கூடிய உரிய படிவத்துடன், குடியிருப்பின் உரிமையாளர்கள் அருகில் உள்ள காவல்நிலைய அதிகாரிகளிடம் வழங்க வேண்டும் என்று மாநகர காவல்துறை புதிய ஆணை ஒன்றை பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

சென்னை மாநகரில் உள்ள பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் வாடகைதாரர்கள் என்ற பெயரில் சமூக விரோதிகள் குடியிருந்து வருவதாகவும், அவர்களால் பொது ஒழுங்கு மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படலாம் என்றும் தெரிய வருகிறது. 

மேலும், சென்னை மாநகரில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வாடகைதாரர்கள் என்ற பெயரில் தீவிரவாதிகள் மற்றும் சமூக விரோதிகளும் புகலிடம் தேடி குடியேற வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கின்றன.

எனவே, சென்னை மாநகர குடியிருப்பு பகுதிகளில் உள்ள வாடகைதாரர்கள் குறித்து அவர்களுடைய பெயர் மற்றும் முகவரி போன்ற விபரங்களை சேகரிக்க வேண்டிய அவசியம் காவல்துறைக்கு ஏற்பட்டுள்ளது.

எனவே, 1973 ஆம் ஆண்டு குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 144-ன் கீழ் மாவட்ட கூடுதல் நீதிபதி என்ற பொறுப்பின் அடிப்படையில் காவல்துறை ஆணையாளரால் குடியிருப்பு உரிமையாளர்கள் மற்றும் நிலக்கிழார்கள் ஆகியோர் தங்களுக்கு சொந்தமான குடியிருப்புகளில் வாடகைக்கு குடியிருப்போர் குறித்த விபரம் அல்லது வேறு நபருக்கு தங்குவதற்காக அனுமதி வழங்கியிருந்தால், அது தொடர்பான விபரங்களை சம்பந்தப்பட்ட காவல்நிலைய அதிகாரிக்கு வாடகைதாரர் புகைப்படத்துடன் கூடிய உரிய படிவம் வாயிலாக தெரியபடுத்த வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்படுகிறது.

இந்த ஆணைக்கு எதிராக செயல்படுகிறவர்கள் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 188-ன் கீழ் தண்டனைக்கு உள்ளாவர். இந்த ஆணை 3.3.2012 முதல் அமலுக்கு வருகிறது. 

பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் பொது அமைதியை பேணி பாதுகாக்கும் பொருட்டு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த ஆணைக்கு பொது மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று அந்த அறிவிப்பில் காவல்துறை தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments