முதல்வருக்கு பில்கேட்ஸ்சின் புத்தாக்க விருது

தி பில்கேட்ஸ் அண்ட் மெலிண்டா ஃபவுண்டேஷனின் 'கேட்ஸ் வாக்ஸின் இன்னொவேஷன் விருது', பிகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு வழங்கப்படுகிறது.

இதன் மூலம், கேட்ஸ் வாக்ஸின் இன்னொவேஷன் அவார்டு (Gates Vaccine Innovation Award) பெறும் முதல் நபர் என்ற சிறப்பைப் பெறுகிறார், நிதிஷ் குமார்!

பீகாரில் நோய் எதிர்ப்புத் திட்டத்தை வலுப்படுத்தியதற்காக, முதல்வர் நிதிஷ் குமாரின் பெயர், இந்த விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்தது என அம்மாநில சுகாதாரத்துறை நிர்வாக இயக்குனர் சஞ்சய் குமார் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

இந்த விருதை முதல்வர் நிதிஷ் குமார் பெறுவதற்கான ஒப்புதலை, வெளியுறவு அமைச்சகம் அளித்தாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த விருதுடன் 2,50,000 அமெரிக்க டாலர்கள் பரிசுத் தொகையையும் நிதிஷ் குமார் பெறுவார்.

முன்னதாக, உலக அளவில் நோய் எதிர்ப்பு நடவடிக்கைகளில் சிறப்பான பங்களிப்பை நல்கும் தனி நபர் அல்லது அமைப்புக்கு ஆண்டுதோறும் 'கேட்ஸ் வாக்ஸின் இன்னொவேஷன் அவார்டு' விருது வழங்குவது என 'தி பில்கேட்ஸ் அண்ட் மெலிண்டா ஃபவுண்டேஷன்' கடந்த ஆண்டு தீர்மானித்தது.

குழந்தைகளை நோயில் இருந்து காப்பதற்காக, சொட்டு மருந்துகளை வழங்குவது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளில் சிறந்து விளங்குவதை ஊக்கப்படுத்தும் விதமாக இவ்விருது உருவாக்கப்பட்டது.

இந்த நிலையில், 2011-ம் ஆண்டில், இந்தியாவிலேயே போலியோ பாதிப்பு இல்லாத மாநிலமாக பீகார் இருப்பதற்கு முக்கியக் காரணமாக இருந்த முதல்வர் நிதிஷ் குமாருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. 

Post a Comment

0 Comments