மொபைல் ரிங்டோன் மக்களே இத கொஞ்சம் படிங்க


"மாமா நீங்க எங்கயிருக்கீங்க..?"

"டேய் மச்சான் போனை எடுடா..."

"வைச்சுக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள..." 

மேற்கண்ட பாடல்களும், வசனங்களும் ஏதோ ஒரு சந்தர்பத்தில் அனைவருக்கும் பிடித்தமானவை தான். ஆனால் இன்றைக்கு செல்லும் இடமெல்லாம் 'செல்' என்றாகி போனதில் பொது இடங்களில் அலரும் இது போன்ற பாடல்கள் பலரையும் கடுப்பாக்கி இருக்கலாம். 

செல்போன் பேசும் நபருக்கு இனிமை என்றால், அருகில் இருக்கும் மூன்றாம் நபருக்கோ அது அலர்ஜி. 

"கிட்சன்ல இட்லி, சட்னி வைச்சிருக்கேன் போட்டு சாப்பிடுங்க. நான் இப்போ பேங்குக்கு தான் போய்ட்டு இருக்கேன். பணம் எடுத்துட்டு பஸ்டாண்டு வந்து உங்கள்ட கொடுத்திடுறேன்," என விபரீதம் புரியாமல் பொது இடத்தில் செல்போனில் சத்தமாக பேசுவது இன்று வாடிக்கையாகிவிட்டது. 

சமீபத்தில் புரஃபஷனல் நெட்வொர்க்கிங் சைட் என்ற வலைத்தளம் உலகின் பதினாறு நாடுகளில் ஒரு சர்வே எடுத்தது. இதில் வேலை பார்க்கும் இடங்களில் எரிச்சலூட்டும் விஷயங்கள் எது? என கேட்கப்பட்டது. இந்தியர்கள் எரிச்சலூட்டும் ரிங்டோன்களை வைத்திருப்பதிலும், அதிக சத்தமாக போனில் பேசுவதிலும் முதல் இடத்தை பிடித்திருப்பதாக அந்த சர்வே முடிவில் தெரியவந்துள்ளது.

இதே போல் அமெரிக்காவில், அலுவலக ஃபிரிட்ஜில் இருக்கும் மற்றவர்களின் உணவை எடுத்து சாப்பிடுவது எரிச்சலூட்டுவதாக இருப்பதாகவும், ஜெர்மனியர்கள் பொது இடங்களில் அதிகமாக கோபப்படுகிறார்கள் எனவும் சர்வே முடிவு தெரிவிக்கிறது.

இப்படி அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, லண்டன், ஜப்பான் ஆகிய நாடுகளிலும் இந்த சர்வே எடுக்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகளை விட இந்தியா தான் வேலைப்பார்க்கும் இடத்தில் "அதிக எரிச்சலூட்டும் நாடு" என்ற பெயரை வாங்கியிருக்கிறது.

வேலைப் பார்க்கும் இடத்தில் மற்றவர்களுக்கு எரிச்சலூட்டும் விஷயங்களை பற்றி கவலைப்படுவதில்லை. இதனால் வேலைப் பார்க்கும் நிறுவனத்தின் மேலதிகாரிக்கும், பணியாளர்களுக்கும் இடையே நல்ல உறவு நீடிக்காமல் அவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள், இன்க்ரிமென்ட், பதவி உயர்வு போன்ற அவர்களது கேரியர் சம்பந்தப்பட்ட விஷயங்கள் கிடைக்காமல் போக வாய்ப்பிருப்பதாக இந்த சர்வே நடத்திய வலைத்தளத்தின் இந்திய மேலாளர் தெரிவித்திருக்கிறார்.

நமக்கு பிடித்திருக்கும் பாடல், சினிமா டயலாக் தான். அதனை ரசிக்க நமக்கு அதீத உரிமைகள் இருக்கிறது தான். ஆனால், அதற்கு இடம் பொருள் ஏவல் இருக்கிறது. 

நமக்கு பிடிக்கும் விஷயம் மற்றவர்களுக்கு பிடிக்க வேண்டும் என கட்டாயம் இல்லை. சூழ்நிலைகள் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. வீட்டில் இருக்கும்போது, வெளியில் இருக்கும் போது பிடித்தமான ரிங்டோன்களை வைத்துக்கொண்டு, அலுவலகத்துக்கு வரும் போது சைலன்ட் மோடில் மொபைல் போனை போட்டுவிடுவதே யாருக்கும் பாதகமில்லாமல் இருக்கும். 

அதேபோல் அலுவலகத்தில் மட்டுமல்ல பொது இடங்களில் சத்தமாக பேசுவது, ஸ்பீக்கர் போனை ஆன் செய்து பேசுவது போன்ற செயல்களில் ஈடுபடாமல் இருந்தால் மற்றவர்களுக்கு மட்டுமல்ல நமக்கும் நல்லது தானே? 

சொல்லப்போனால் சின்ன விஷயமாக தோன்றும்... ஆனால் இந்தியாவுக்கே கெட்ட பெயரை வாங்கித் தந்திருக்கிறது.



thx.vikatan

Post a Comment

0 Comments