பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1 உயரும்?

ரூபாய் மதிப்பு சரிவால் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு அதிகரித்துள்ளதால், ஜனவரி 1ம் தேதி முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சந்தை நிலவரத்துக்கேற்ப பெட்ரோல் விலையை நிர்ணயித்துக் கொள்ளும் அதிகாரத்தை கடந்த 2010 ஜூன் மாதம் எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அளித்தது. இதன்படி, 15 நாட்களுக்கு ஒரு முறை அதாவது ஒவ்வொரு மாதமும் 1 மற்றும் 16ம் தேதிகளில் பெட்ரோல் விலை மாற்றி அமைக்கப்படுகிறது. எனினும், முன்னதாக அரசுடன் ஆலோசனை நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், பெட்ரோல் விலையை உயர்த்துவது பற்றி வரும் 31ம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் ஆலோசனை நடத்த உள்ளன. இப்போதைய கச்சா எண்ணெய் விலையும், பெட்ரோல் விலையும் கிட்டத்தட்ட ஒரே அளவில்தான் உள்ளன. எனினும், நவம்பர் 30ல் 51.50 ஆக இருந்த அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, இப்போது ரூ.52.50ஐ எட்டியுள்ளது. இதனால் இறக்குமதி செலவு அதிகரித்து லிட்டருக்கு 85 பைசா இழப்பு ஏற்படுகிறது. எனவே, எண்ணெய் நிறுவனங்கள் விலையை உயர்த்த முடிவு செய்தால் ஜனவரி 1 முதல் வரி உட்பட லிட்டருக்கு ஸி1 வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம், உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பெட்ரோல் விலை உயர்த்துவது குறித்து மத்திய அரசுடன் பரிசீலித்துதான் முடிவெடுக்கப்படும் என தெரிகிறது. இதற்கு முன்பு, கடைசியாக டிசம்பர் 1ம் தேதி விலை மாற்றி அமைக்கப்பட்டது. கச்சா எண்ணெய் விலை குறைந்ததால், சென்னையில் கடந்த நவம்பர் 16ம் தேதி லிட்டருக்கு ரூ.2.35ம், டிசம்பர் 1ம் தேதி 83 பைசாவும் குறைக்கப்பட்டது.

3 ஆண்டுகளில் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டது இதுவே முதல் முறை. கடந்த 16ம் தேதி முதல் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 75 பைசா (வரி உட்பட) உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டிருந்தன. இதுகுறித்து பெட்ரோலியத்துறை  அமைச்சர் ஜெய்பால் ரெட்டி,  நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் ஆலோசனை நடத்தினார். அதற்கு பிறகு விலை உயர்வை ஒத்தி வைப்பதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

1 Comments

மறுபடியும் உயர்வா! எப்போ சார் குறையும்! நன்றி நண்பரே!