விஜய் கடமை உணர்வு மிக்க நடிகர் -டைரக்டர் ஷங்கர்

விஜய் ரொம்பவே கடமை உணர்வு மிக்க நடிகர் என்று நண்பன் படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாவில் டைரக்டர் ஷங்கர் பேசினார். இந்தியில் வெளிவந்து சூப்பர் ஹிட் படமான 3-இடியட்ஸ் படத்தின் தமிழ் ரீ-மேக்காக உருவாகியிருக்கும் படம் நண்பன். இப்படத்தின் நாயகர்களாக விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா ஆகியோர் நடிக்க, பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கியுள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் சில தினங்களுக்கு முன்னர் கோவையில் பிரம்மாண்டமாக நடந்தது. படத்தின் ஆடியோ சி.டி.யை விஜய்யின் அப்பாவும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் வெளியிட, நடிகர் பிரபு பெற்று கொண்டார்.

விழாவில் பேசிய டைரக்டர் ஷங்கர், சூட்டிங் ஒன்றிற்காக மும்பை சென்றேன். அப்போது தான் 3-இடியட்ஸ் படத்தை பார்த்தேன். படத்தை பார்த்து வெளிவந்த அடுத்த நிமிடமே இதே ரீ-மேக் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அதன் வெளிபாடு தான் நண்பன். 3-இடியட்ஸ் படம் போலவே, நண்பன் படமும் நன்றாக வந்துள்ளது. படத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.

அதிலும் விஜய்யின் நடிப்பும், ஈடுபாடும் பிரமாதம். ரொம்ப கடமையுணர்வு மிக்க நடிராக விஜய் இருக்கிறார். எல்லோருக்‌குமே விஜய்யை பிடிக்கும். அப்படியே பிடிக்காத சிலருக்கும், இந்த நண்பன் படத்தை பார்த்தால் விஜய்யை ரொம்ப பிடிக்கும். சிவாஜி, எந்திரன் படங்களை போல நினைத்துக் கொண்டு நண்பன் படத்தை பார்க்க வரவேண்டாம். எந்திரன் படம் போன்று கிராபிக்ஸ் காட்சிகள் கிடையாது. ஆனால் நண்பனில் நல்ல கதை உள்ளது என்று பேசினார்.

இந்நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பேசுகையில், ஷங்கரின் முதல்வன் திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்தாலும் என்னால் அதை பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. தற்போது அவரது இயக்கத்தில் நண்பன் திரைப்படத்தில் நடித்துள்ளது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. படத்தில் என்னுடன் நடித்துள்ள ஸ்ரீகாந்த், ஜீவா ஆகியோர் எனது நண்பர்கள். சூட்டிங் ஸ்பாட்டில் ஜீவா கலகலப்பூட்டுவார். சோகமான காட்சிகளை சீரியசாக நடித்துக் கொண்டிருப்போம். அப்போதும் அவர் கலகலப்பூட்டுவார். என்னால் எந்த நேரத்திலும் சிரிப்பை அடக்க முடியாது. ஜீவாவின் கலாட்டாவை சிரித்து ரசித்தேன் என்றார்.

Post a Comment

0 Comments