அமெரிக்காவில் ரூ. 61 கோடி கிரெடிட் கார்டு மோசடி

அமெரிக்காவில் நிகழ்ந்த மிகப் பெரிய கடன் அட்டை மோசடி வழக்கில் இந்திய வம்சாவளியினர் 13 பேர் உள்பட 111 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.அமெரிக்காவில் மிக அதிகபட்ச அளவுக்கு கடனட்டை மோசடி நடந்திருப்பது இதுவே முதல் முறையாகும். வாடிக்கையாளர்களின் கடன் அட்டை விவரங்களைத் திருடி அதன் மூலம் விலை உயர்ந்த பொருள்களை வாங்கி பயன்படுத்தியுள்ளதாக பெடரல் போலீஸôர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகள் மட்டுமின்றி உலகிலேயே அதிக விலை கொண்ட ஜியுசிசிஐ நிறுவனத்தின் கைப்பைகளையும் கடனட்டை மூலம் இவர்கள் வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது.


வாடிக்கையாளர்கள் பொருள் வாங்கும்போது கடன் அட்டைகளை அளிப்பது வழக்கம். கடன் அட்டை தகவல்களை பதிவு செய்யும் அதே நேரம் அவர்களது தனிப்பட்ட தகவல்களையும் அறிந்து அதன் மூலம் இத்தகைய மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. வங்கிகளில் கடன் அட்டைகளை ஸ்வைப் செய்யும் ஊழியர்கள், மிகப் பெரிய விற்பனையகங்களில் பணிபுரிவோர், ரெஸ்டாரண்ட் பணியாளர்கள் ஆகியோர் இத்தகைய மோசடியில் ஈடுபட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடியில் பெருமளவு பாதிக்கப்பட்டவர்கள், உலகம் முழுவதும் பயணம் செய்து அதிக அளவில் கடன் அட்டைகளை பயன்படுத்துபவர்கள்தான். இவர்களில் பெரும்பாலானோர் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்குபவர்கள். கடந்த 16 மாதங்களில் மட்டும் சுமார் 1.30 கோடி டாலர் (சுமார் ரூ. 61 கோடி) அளவுக்கு இவர்கள் மோசடி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஷ்ணு ஹரிலால், ரவீந்திர சிங், அமர் சிங், நேஹா பஞ்சாபி சிங், ரவி ராம்ரூப், கமல் சன்னாசி ஆகியோரும் அடங்குவர்.

இந்த மோசடியில் ஈடுபட்ட 111 பேரில் இதுவரை 86 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலியான கடன் அட்டைகளைத் தயார் செய்து நியூயார்க், ஃபுளோரிடா, மாசசூசெட்ஸ், லாஸ் ஏஞ்சலீஸ் ஆகிய நகரங்களுக்குச் சென்று அங்கு ஆப்பிள் ஐ-பாட், ஐ-போன், கம்ப்யூட்டர், கைக்கடிகாரங்கள், விலை உயர்ந்த கைப்பைகள் உள்ளிட்டவற்றை வாங்கியுள்ளனர். இவற்றை சீனா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இவர்கள் விற்பனை செய்துள்ளனர்.
மேலும் சொகுசு கார்களான லம்போர்கினி, போர்ஷே ஆகிய கார்களை வாடகைக்கு எடுத்தும் பயன்படுத்தியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.பிடிபட்டவர்களிடமிருந்து இதுவரை 6.50 லட்சம் டாலர் ரொக்கம் மட்டும் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் 7 கைத்துப்பாக்கிகள், கம்ப்யூட்டர்கள், கடன் அட்டைகளில் எண்களை பதிவு செய்யும் கருவிகள், வெற்று அட்டைகள் உள்ளிட்டவையும் கைப்பற்றப்பட்டதாக பெடரல் போலீஸôர் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments