என்.ஆர்.ஐ.கள் இந்தியாவில் வீட்டுக் கடன் வாங்குவது எப்படி?


வேலை நிமித்தமாக வெளிநாடு சென்றிருக்கும் என்.ஆர்.ஐ.கள் அனைவரின் முதல் ஆசையாக இருப்பது, சொந்த ஊரில் வசதியான அழகிய வீடு கட்ட வேண்டும் அல்லது வாங்க வேண்டும் என்பதாக இருக்கிறது. இதற்காக அவர்கள் இந்தியாவுக்கு வர வேண்டும் என்ற அவசியமில்லை. அவர்கள் அங்கே இருந்தபடியே இந்தியாவில் எளிதாக சொத்து வாங்க முடியும்.


யாரெல்லாம் என்.ஆர்.ஐ.?

1973-ம் ஆண்டின் அந்நிய செலாவணி கட்டுப்பாடு சட்டப்படி, வேலை வாய்ப்பு, வணிகம் அல்லது வேறு காரணங்களால் வெளிநாட்டில் நீண்ட காலமாக தங்கியிருப்பவர்கள் வெளிநாட்டு வாழ் இந்தியர்களாக (என்.ஆர்.ஐ.கள்) கருதப்படுகிறார்கள்.

இவர்கள் தவிர, இந்திய அரசு ஊழியர்கள், மத்திய அரசு அமைப்புகளில் வெளிநாடுகளில் பணிக்கு அமர்த்தப்படுபவர்கள், சர்வதேச நிதியம், உலக வங்கி, உலக சுகாதார அமைப்பு உள்ளிட்டவைகளில் பணியாற்றுபவர்கள், மத்திய - மாநில - பொதுத்துறை நிறுவனங்களுக்காக வெளிநாடுகளில் பணிபுரிபவர்கள், இந்திய வம்சாவளியினரும் வீட்டுக் கடனை பெறலாம்!


எதுக்கெல்லாம் கடன் உதவி?

* மனை வாங்க..!
* அடுக்குமாடி குடியிருப்பு வாங்க..!
* வீடு கட்ட.. .!
* வீட்டை அழகுபடுத்த .!
* வீட்டை விரிவாக்கம் செய்ய...!
* இன்னொரு மாடி (தளம்) கட்ட..!

இப்படி பல்வேறு விஷயங்களுக்காக கடன் வாங்கிக் கொள்ளலாம்.


தற்போது இந்தியாவிலுள்ள பெரும்பாலான வங்கிகள் மற்றும் வீட்டு வசதி நிறுவனங்கள் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு தாரளமாக வீட்டுக் கடன் கொடுத்து வருகின்றன. எஸ்.பி.ஐ, ஹெச்.டி.எஃப்.சி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஆக்ஸிஸ் பேங்க், கனரா, ஐ.டி.பி..ஐ, பஞ்சாப் நேஷனல் பேங்க், எல்.ஐ.சி. ஹவுஸிங் ஃபைனான்ஸ் உள்ளிட்டவை கடன் அளிக்கின்றன.

வெளிநாட்டு வாழ் இந்தியரின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள் யார் வேண்டுமானாலும் இந்தியாவிலுள்ள வங்கி அல்லது வீட்டு வசதி நிறுவனத்தை தொடர்பு கொண்டு விண்ணப்ப படிவத்தை வாங்கிக் கொள்ளலாம். கடன் வழங்கும் நிறுவனத்தில் பொது அதிகார ஆவண (Authorised Power of Attorney) படிவம் ஒன்றை தருவார்கள். இது கடன் பெறுபவர் தனக்கு பதில், கடன் வாங்குவது தொடர்பான அனைத்து ஆவணங்களிலும் கையெழுத்திட, வேறு ஒரு நபருக்கு அதிகாரம் கொடுப்பதாகும். இதனை கடன் வாங்க உள்ள என்.ஆர்.ஐ. நிரப்பி, தான் பணிபுரியும் நாட்டிலுள்ள தூதரகம் அல்லது துணை தூதரகத்தில் கொடுத்து அங்குள்ள அதிகாரியின் கையெழுத்து மற்றும் அலுவலக முத்திரையை வாங்கி இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும். இதன் மூலம் கடன் வாங்குபவர் இந்தியா வர வேண்டிய அவசிமியமில்லை. 'பவர்' பெறும் நபரே கடன் வாங்குபவர் சார்பில் அனைத்து விஷயங்களையும் கவனித்துக் கொள்ளலாம்.


எவ்வளவு கடன் கிடைக்கும்?


பொதுவாக மனை என்றால் அதன் மதிப்பில் சுமார் 60-70 சதவிகிதம், வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பு என்கிறபட்சத்தில் அதன் மதிப்பில் 80-85% தொகை கடனாக கிடைக்கும். மீதியை கடன் வாங்குபவர் தன் கையிலிருந்து மார்ஜின் மணியாக போட வேண்டும். இது தவிர, கடன் வாங்குபவரின் திரும்பச் செலுத்தும் திறனும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுதான் கடன் தொகை நிர்ணயிக்கப்படும்.

என்.ஆர்.ஐ.-ன் சம்பளம் குறைவாக இருக்கிறது. ஆனால், அதிக தொகை கடனாக தேவைப்படுகிறது என்றால் வருமானம் ஈட்டும் இன்னொருவருடன் இணைந்தும் கடன் வாங்க முடியும். அந்த இன்னொருவர் என்.ஆர்.ஐ. ஆக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. இந்தியாவிலுள்ள துணைவராக (கணவன்/மனைவி) அல்லது மகனாக இருக்கலாம். சொத்துப் பத்திரத்தை அடமானம் வைப்பதன் பேரில்தான் கடன் வழங்கப்படுகிறது. இது தவிர, இரு தனி நபர்களின் உத்தரவாதம் (கேரண்டி) தேவைப்படும்.
கடன் வாங்குபவரின் மாத ஊதியம், வயது, கல்வித் தகுதி, பணி அனுபவம், துணைவரின் வருமானம், சொத்து, வேலை தொடரும் ஆண்டுகள், ரொக்க இருப்பு, இந்தியா திரும்பிய பின் வேலைவாய்ப்பு, சேமிப்பு உள்ளிட்டவைகளை அலசி ஆராய்ந்துதான் கடன் தொகை நிர்ணயிக்கப்படும்.

ஒருவரின் மாதச் சம்பளம் 25 ஆயிரம் ரூபாய். அவரின் மாதச் சேமிப்பு 18 ஆயிரம் ரூபாய். இதே சம்பளம் கொண்ட இன்னொருவரின் மாதச் சேமிப்பு பத்தாயிரம் ரூபாய் என்றால் யார் அதிகமாக சேமிக்கிறார்களோ அவருக்குதான் எளிதில் கடன் கிடைக்கும்.

வட்டி விகிதம் இந்தியர்களுக்கு வழங்கப்படும் கடனுக்கு உள்ளதை விட ஓரிரு சதவிகிதம் அதிகமாக இருக்கும்.

தேவையான ஆவணங்கள்:


* பணிக்கான ஒப்பந்தம்
* மாத சம்பள ரசீது
* வெளிநாட்டில் பணிபுரிவதற்கான அனுமதி
* கடன் வாங்குபவருக்கு அவரின் நிறுவனம் வழங்கிய அடையாள அட்டையின் நகல்
* விசா முத்திரைப் பதிக்கப்பட்ட பாஸ்போர்ட்
* கட்ட இருக்கும் மற்றும் வாங்க உள்ள வீட்டின் அப்ரூவல் பிளான்
* மனை கிரயப் பத்திரம் (அசல் மற்றும் நகல்)
* தாய் பத்திர நகல்
* வில்லங்கச் சான்றிதழ் - குறைந்தது 13 ஆண்டுகளுக்கு
* கட்டுமானச் செலவு மதிப்பீடு அறிக்கை
* வீட்டின் மதிப்பீடு அறிக்கை

கடனை எப்படி திரும்ப கட்டுவது?

கடன் பெற்ற வங்கி அல்லது வீட்டு வசதி நிறுவனங்களில் இந்தியாவிலுள்ள உறவினர்கள் அல்லது நண்பர்கள் நேரில் ரொக்கப்பணமாக அல்லது காசோலை மூலம் செலுத்தலாம். அல்லது என்.இ.ஆர். அல்லது எஃப்.சி.என்.ஆர், என்.ஆர்.ஓ.கணக்கு மூலம் கட்டலாம்.

வீட்டு வாடகை மூலம் கிடைக்கும் வருமானத்தையும் கடனை அடைக்கப் பயன்படுத்திக் கொள்ளலாம். என்.ஆர்.ஐ-க்கு பதில் இந்தியாவிலுள்ள அவரின் மிகவும் நெருங்கிய உறவினர்களை மட்டுமே கடனை அடைக்க சில வங்கிகள் அனுமதிக்கின்றன.

முக்கிய அம்சங்கள்..!

> கடன் வாங்குபவரின் வயது வரம்பு: 21-55 ஆண்டுகள்

> கடன் தொகை: ரூ.25,000 முதல் ரூ. 3கோடி வரை

> மார்ஜின் மணி : 15-20%

> கடன் தொகை: மாதச் சம்பளத்தைப் போல் சுமார் 20-30 மடங்கு கடனை திரும்பச் செலுத்தும் காலம்: 5-15 ஆண்டுகள் (சில வங்கிகள் 20 ஆண்டுகள் கூட அனுமதிக்கின்றன)

> வட்டி விகிதம் : மாறுபடும் வட்டி சுமார் 11-14%, நிலையான வட்டி 14-16%
பரிசீலணை கட்டணம்: 1-2% (கடன் தொகையில்)

எக்ஸ்டிரா டிப்ஸ்

* ஆன்லைன் விளம்பரங்கள், புரோக்கர்கள் வார்த்தைகளை மட்டும் நம்ப்பி சொத்து வாங்கும் முடிவை எடுக்காதீர்கள்.

* முடிந்த வரையில் உங்கள் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களை மனை அல்லது சொத்தை நேரில் பார்த்து வரச் சொல்லுங்கள்.

****

courtesy.vikatan


Post a Comment

2 Comments

வெளி நாட்டில் பணிபுரியும் என்னைப்போன்றோருக்கு பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள். நன்றி.

www.panangoor.blogspot.com
calmmen said…
Welcome Mr.Gandhi