தங்கம் விலை 30 ஆயிரம் ரூபாய்


"தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து கொண்டிருந்தாலும், இந்த ஆண்டில் தங்கத்தின் இறக்குமதி, ஆயிரம் டன்னைத் தாண்டும். தீபாவளிக்குள் தங்கம் விலை 30 ஆயிரம் ரூபாய் வரை உயரலாம்' என, ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இனி சாதாரண மக்களும், நடுத்தர குடும்பத்தினரும் தங்கம் வாங்க ஆசைப்படுவது எட்டாக்கனியாக மாறிய நிலை ஏற்பட்டிருக்கிறது.அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நிலவும் பொருளாதாரச் சரிவு காரணமாக, அங்குள்ளவர்கள் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வதை தவிர்த்து, தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால், தங்கத்தின் விலை, வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.

தற்போதைய நிலையில் ஒரு சவரன் தங்கம் 21 ஆயிரத்தை தாண்டிவிட்டது. "இதே நிலை நீடித்தால், தீபாவளிக்குள் 10 கிராம் தங்கம் 30 ஆயிரம் ரூபாய் வரை விற்கக் கூடிய வாய்ப்பு உள்ளது' என, உலோக தாது அமைப்பின் துணைத் தலைவர் பிரவீன்குமார் தெரிவித்துள்ளார். அதாவது ஒரு சவரன் விலை 25 ஆயிரம் ரூபாயை எட்டும்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், "தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்தாலும், இந்தியாவில் இந்த ஆண்டு தங்கம் இறக்குமதி, ஆயிரம் டன்னைத் தாண்டும். இந்த ஆண்டின் முதல் அரையாண்டில், 553 டன் அளவுக்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, 958 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. தங்கத்தில் முதலீடு செய்வதில் தான் தற்போது மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். தங்க நகை செய்வதில், அவ்வளவாக வரவேற்பு இல்லை. தங்க நகை வைத்திருப்பவர்கள் தற்போதைய விலையேற்றத்தைப் பயன்படுத்தி அவற்றை விற்று லாபம் பார்க்க முன்வந்துள்ளனர்' என்றார்.

உலக தங்கம் கவுன்சிலின் இந்தியாவுக்கான இயக்குனர் அஜய் மித்ரா குறிப்பிடுகையில், "தற்போதைய நிலையில் 10 கிராம் தங்கத்தின் விலை 28 ஆயிரத்து 150 ரூபாயாக உள்ளது. இவ்வளவு விலை உயர்ந்தாலும், மக்களிடையே வாங்கும் திறன் அதிகரித்துள்ளதால் தங்கம் இறக்குமதி அதிகரிக்கும்; அத்துடன், விலை உயர்வுக்கான சாதகமான சூழ்நிலையும் உள்ளது' என்றார். உலகச் சந்தை வீழ்ச்சி அடிப்படையில் அவர் தெரிவித்த கருத்து இது.
அதே நேரத்தில், புதிதாக முதலீடு என்ற அடிப்படையில் தங்கம் வாங்குவோர் தங்க நாணயங்களையும், அதிக எடை இல்லாத ஆபரணங்களையும் வாங்கலாம் என்ற கருத்தும் உள்ளது. மேலும், தங்கம் விலை உயர்ந்திருப்பதால், வெள்ளி ஆபரணங்கள் பக்கமும் மக்கள் ஆர்வம் சிறிது திரும்பியுள்ளது. ஆனாலும், பிளாட்டினம் அல்லது வைரம் வாங்க ஆர்வம் காட்டவில்லை.

இந்தியாவில் எப்போதுமே தங்கத்தை ஆபரணங்களாகச் சேமிப்பது வாடிக்கை. வங்கிகளில் டீமேட் கணக்கு துவங்கி, பரஸ்பர நிதி நிறுவனத் திட்டம் போல சேமிக்கும் திட்டம் (இ.டி.எப்.,) மேல்தட்டு மக்களுக்கு ஆதரவானது. ஏனெனில், அதற்கு ஆதரவாக அப்படியே தங்கம் கையிருப்பாக வைக்கப்படும். ஆனால், அந்த திட்டத்தை எத்தனை பேர் ஆதரிப்பர்?
பழைய தங்கத்தை விற்று விட்டு, லாபமாக பணத்தை வாங்கும் போக்கு சந்தையில் அதிகரிக்கும் என்று கூறப்பட்டாலும், கடந்த இரு மாதங்களில் உள்ள நிலவரத்தைப் பார்த்தால், வழக்கமாக பழைய தங்கத்தை (ஸ்கிராப்), கடைகளில் விற்கும் அளவு மிகவும் குறைந்திருப்பதாக புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

ஒரு மாதத்தில் 20 சதவீத விலை உயர்வு

* ரியல் எஸ்டேட்டில் அல்லது பங்கு பத்திர முதலீடுகளில் அபாயம் ஏற்படும் என்ற அச்சத்தில், தங்கத்தில் கடந்த சில நாட்களாக முதலீடு அதிகரித்திருக்கிறது. ஒரு மாதத்திற்குள், 20 சதவீத விலை உயர்வை எட்டியிருக்கிறது.
* வங்கிகளில் தங்க ஆபரணத்தை அடமானம் வைத்து கடன் வாங்கி, அதன் மூலம் புதிய தங்க ஆபரணம் வாங்குவதும் இனி யோசிக்க வேண்டிய விஷயம். தப்பித் தவறி மாதாந்திர தவணை கட்டத் தவறினால், வாங்கிய கடனுக்கான வட்டி அதிகரித்து, அது பெரும் சுமையாகி விடும்.
* தங்க நகையை அடகு வைத்திருப்பவர்கள் அதை மீட்டு, வெளிச் சந்தையில் விற்று லாபம் பார்க்கலாம். அது, அவர்கள் கடன் சுமையைக் குறைக்கும். அதுவே நீண்ட நாள் அடகு என்றால் சந்தேகம் தான்.
* அதே சமயம், தங்கத்தின் மீது கிராமுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை என்று நிர்ணயித்து கடன் தரும் வங்கிகள், தற்போது அதிகரித்த விலை உயர்வுக்கு ஏற்ப கடன் தொகையை உயர்த்த வாய்ப்பில்லை. உலகச் சந்தை திசை மாறி சற்று விலை குறைந்தாலும், வங்கிகளில் தங்கத்தை ஈடாக வைத்து கடன் பெற்றவர்கள் திரும்ப வாங்கிச் செல்வது சந்தேகம் என்ற அச்சமும் அதற்கு காரணம்.

Post a Comment

2 Comments

எவ்வளவு எரினாலும் மக்கள் வாங்கிட்டு தான் இருக்காங்க. இனிமேல் யாரும் வரதட்ச்னையா தங்கம் கேட்காம இருந்தால் நல்லது.
www.panangoor.blogspot.com
calmmen said…
அப்படி நடந்த பரவாயில்லை , ஆனால் மக்களிடையே இரக்கம் இல்லை