சிங்கப்பூர் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்

சிங்கப்பூரின் பாராளுமன்ற தேர்தலில் ஆளும் கட்சி 60% வீதமான வாக்குகளை பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. எனினும் எதிர்க்கட்சி மக்களிடையே நல்ல செல்வாக்கை பெற்றுள்ளது.

நேற்று முன் தினம் சனிக்கிழமை நடைபெற்ற இத்தேர்தலில், நாட்டின் வெளியுறவு அமைச்சரின் ஆசனம் உட்பட ஏனைய சில ஆசனங்களை, எதிர்க்கட்சி கைப்பற்றிருப்பது அரசியல் ரீதியில் சில மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய சந்தர்ப்பங்களை உருவாக்கியிருக்கிறது.


சுமார் 40 வருடங்களுக்கு மேலாக அதிகாரத்தில் இருக்கும் மக்கள் செயற்பாட்டு கட்சி, இத்தேர்தலிலும் 87 ஆசனங்களில் 81 ஆசனங்களை கைப்பற்றிக்கொண்டது.

எனினும் கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சராக இருந்து வந்த ஆளும் மக்கள் கட்சியின் ஜோஜ் யோ முதன் முறையாக இத்தேர்தலில் தோற்றிருப்பது அவருடைய ஆதரவாளர்களிடையே அதிர்ச்சி அலைகளை தோற்றுவித்திருக்கிறது.

இது சிங்கப்பூர் வரலாற்றில் புதிய மாற்றத்தை தோற்றுவித்திருக்கிறது. கடும் சவாலுக்கு மத்தியில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றிருக்கிறார். இது தான் வாழ்க்கை என யோ கருத்து தெரிவித்துள்ளார்.


1965ம் ஆண்டில் சிங்கப்பூர் சுதந்திரமடைந்ததிலிருந்து, ஆளும் கட்சியின் அதிகாரத்தில் இருந்துவரும் சிங்கப்பூர் மக்கள், இம்முறை தேர்தலில் எதிர்க்கட்சிக்கு கணிசமான வாக்குகள் அளித்திருப்பது, பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டுமென்பதை மக்கள் விரும்புவதை காட்டுவதாக அந்நாட்டு பிரதமர் லீ சீன் லூங் தெரிவித்துள்ளார்.இவ்வாக்கெடுப்பில், நாட்டின் வரலாற்றில் முதற்தடவையாக 93 வீதமானோர் வாக்களித்திருக்கின்றனர்.



Post a Comment

0 Comments