நாக்கை காணிக்கை செலுத்திய சரிதாவுக்கு அரசு வேலை


ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக ஆக வேண்டும் என்று நேர்ந்து கொண்டு, ஜெயலலிதா முதல்வரானதைத் தொடர்ந்து தனது நாக்கைத் துண்டித்து காணிக்கை செலுத்திய சரிதா என்ற பெண்ணுக்கு முதல்வர் ஜெயலலிதா அரசு வேலை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீண்டும் தமிழ்நாடு முதல்வராக வரவேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொண்ட இராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை தாலுகா, தொண்டியைச் சேர்ந்த சரிதா, தேனி மாவட்டம் வீரபாண்டியிலுள்ள அருள்மிகு கெளரியம்மன் திருக்கோயிலில் 13.5.11 அன்று தனது நாக்கை அறுத்து நேர்த்தி கடன் செலுத்தியுள்ளார்.
இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மேலும், இவர் கணவனால் கைவிடப்பட்டு, ஏழ்மை நிலையில் வாழ்ந்து வருகிறார்.இவர் தனது நாக்கை அறுத்து நேர்த்தி கடன் செலுத்தியதை அறிந்ததும், ஆண்டிப்பட்டி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவியும், அதனை தொடர்ந்து மதுரை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்த நிகழ்வு குறித்து அறிந்ததும், பாதிக்கப்பட்ட சரிதாவை உடனடியாக சென்னைக்கு வரவழைத்து அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்து அறுவை சிகிச்சை செய்ய உத்தரவிட்டார்.இதன்படி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரிதாவுக்கு தேவையான அறுவை சிகிச்சை செய்யப்பட்டு குணமடைந்த பின்பு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.சரிதா கணவனால் கைவிடப்பட்ட நிலையில், அவரின் ஏழ்மையான குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று தலைமை செயலகத்தில் சரிதாவின் எதிர்கால வாழ்க்கைக்கு உத்திரவாதாம் அளிக்கும் வகையில், சத்துணவு துறையில் சத்துணவு உதவியாளர் வேலைக்கான பணி நியமன ஆணையை வழங்கினார்.

மேலும், எம்.ஜி.ஆர் அறக்கட்டளையின் மூலம், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சரிதாவின் சிகிச்சைக்கான முழுக்கட்டணத் தொகை 36,195/- ரூபாய் செலுத்தவும் உத்தரவிட்டார். அத்துடன், எம்.ஜி.ஆர். அறக்கட்டளை மூலம் அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.இதைத் தவிர, அவர் வசிப்பதற்கு சொந்த கிராமமான தொண்டியில் வாடகை வீடு ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான மாத வாடகையை எம்.ஜி.ஆர் அறக்கட்டளையின் மூலம் தொடர்ந்து வழங்கவும் ஆணையிட்டார்.இதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு, சரிதா தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார் என்று கூறப்பட்டுள்ளது.

Post a Comment

1 Comments

மனோவி said…
என்ன வாழ்க்கைடா இது?