பாஸ்போர்ட் கொடுமை


ராமநாதபுரத்தில் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்க வருவோரை கொத்தடிமைகள் போல உட்கார வைத்து கொடுமைபடுத்துவது தொடர்கிறது. மண்டல அளவில் திருச்சியில் மட்டுமே பாஸ்போர்ட் தொடர்பான பரிவர்த்தனைகள் இருந்தன. இதனால் பலரும் அலைக்கழிப்புக்கு ஆளாகினர். இந்நிலையில் மதுரையை மையமாக வைத்து பாஸ்போர்ட்டு தொடர்பான பரிவர்த்தனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இன்னும் இதை எளிதாக்க மாவட்ட தலைநகரங்களில் தனிப்பிரிவு ஏற்படுத்தினர். ராமநாதபுரத்தில் கலெக்டர் அலுவலகத்தில் இதற்கான பிரிவு செயல்படுகிறது. தமிழக அளவில் பெரும்பான்மையாக வெளிநாடுகளுக்கு செல்வோர் ராமநாதபுரத்தில் தான் உள்ளனர். பாஸ்போர்ட் விண்ணப்பித்தல், புதுப்பித்தல், கோளாறுகளை சரிசெய்தல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தினமும் குவிந்து வருகின்றனர். இவ்வாறு வருபவர்களுக்கு பாஸ்போர்ட் அலுவலகத்தில் போதிய மரியாதை இருப்பதில்லை. குறுகிய இடத்தில் அனைவரையும் கைதிகள் போல உட்கார வைத்து விசாரணை நடத்துகின்றனர். இன்னும் சிலர் வெளியே தியேட்டரில் டிக்கெட் வாங்குவதை போல நிற்கிறார்கள். இதில் பெண்கள், குழந்தைகளும் அடங்குவர். அருகில் அலுவலக கழிப்பறையில் துர்நாற்றத்திற்கு மத்தியில் வேறு வழியின்றி சிரமப்படுகின்றனர்.


இன்றைய நிலையில் அதிக வருமானம் கிடைக்கும் பிரிவாக பாஸ்போர்ட் இருந்தும், வருவோரை உட்கார சொல்ல ஒரு நாற்காலி கூட இல்லை. பாஸ்போர்ட் பெற்று வெளிநாடுகளில் சென்று தான் கொத்தடிமையாக பணியாற்றுகிறார்கள் என்றால், இங்கு பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்க வரும் போதே கொத்தடிமையாக மாறிவிடுகின்றனர். இடுப்பில் துண்டு கட்டாத குறையாக அனைவரும் தரையில் உட்கார்ந்திருக்க, அதிகாரிகள் மட்டும் ஒய்யாரமாக நாற்காலியில் அமர்ந்திருக்கின்றனர். தொடரும் இந்த கொத்தடிமைத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மாவட்ட கலெக்டர் முன்வந்து மனிதனை மனிதனாய் பாவிக்கும் முறைக்கு உத்தரவிட வேண்டும்.

Post a Comment

0 Comments