ஜப்பானில் 4-ம் எண் அணு உலை தீ பிடித்து எரிகிறது

ஜப்பானில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பயங்கர பூகம்பம், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி பேரலைகள் தாக்குதலில் சுமார் 15 ஆயிரம் பேர் பலியானார்கள். ஜப்பானின் வடக்குப் பகுதியில் உள்ள மியாகி மாநிலம் கடும் பேரழிவை சந்தித்துள்ளது. அங்குள்ள கடலோரத்தில் இருந்து இது வரை 2 ஆயிரத்துக்கும் மேற் பட்டவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

பூகம்பம், சுனாமி அலைகள் பாதிப்பால் ஜப்பான் வடபகுதி மக்கள் உறவினர் களையும், வீடுகளையும் இழந்து தவித்துக் கொண்டி ருக்கிறார்கள். இந்த நிலையில் அவர்களை மேலும் அவதிக்குள்ளாக்கும் வகையில் மின் உற்பத்தி செய்யும் அணு உலைகள் எமன் போல் மாறி வெடிக்கத் தொடங்கி உள்ளன.



மின்சாரம் தயாரிக்கும் அணு உலையில் செயல்பாடு நிற்குமானால், குளிர்ந்த நீர் பாய்ச்சி, அணு உலைகள் குளிர்விக்கப்பட வேண்டும். அதில் தவறு நடந்தால் கதிர் வீச்சு எற்பட்டுவிடும். ஜப்பான் வடக்கு பகுதியில் உள்ள அணு உலைகள் சுனாமி பேரலைகள் தாக்கியதும் தானாகவே செயல்பாட்டை நிறுத்திக் கொண்டன.

ஆனால் துரதிர்ஷ்ட வசமாக அணு உலைகளை குளிர்விக்கும் ஜெனரேட்டர்கள் மற்றும் கருவிகள் பூகம்பத்தால் நொறுங்கி செயல்படாத தால் சிக்கல் ஏற்பட்டு விட்டது. இதையடுத்து கடல் தண்ணீரை அணு உலைகளில் செலுத்தி குளிர்விக்கும் முயற்சி நடந்து வருகிறது. குளிர்விக்கும் நடவடிக்கைகளில் வெற்றி கிடைக்காததால் கடந்த சனிக் கிழமை ஒரு அணு உலை வெடித்தது.

நேற்று புகுஷிமா அணு மின் நிலையத்தில் உள்ள 3-வது பிரிவு அணு உலை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இந்த இரு உலைகளில் இருந்தும் கதிர்வீச்சு வெளியானபடி உள்ளது. அது மேலும் பரவுவதை தடுக்க தீவிர முயற்சிகளில் ஜப்பான் நாட்டு அணுசக்தி நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் புகுஷிமா அணுமின் நிலையத்தில் உள்ள டைசி யூனிட் 2-வது பிரிவு அணு உலை இன்று அதிகாலை இந்திய நேரப்படி 6.10 மணிக்கு பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த அணு உலை எந்த
நேரத்திலும் வெடிக்கலாம் என்று நேற்று எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இதையடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

2-வது பிரிவு அணு உலை வெடித்து சிதறிய சிறிது நேரத்தில் அந்த பிரிவில் இருந்த ஹைட்ரஜன் சிலிண்டர்களும் வெடித்து சிதறின. இதனால் 2-வது பிரிவு அணு உலை கூரை, சுற்றுச்சுவர்கள் நொறுங்கின. அணு உலையும், ஹைட்ரஜன் சிலிண்டரும் அடுத்தடுத்து வெடித்த சத்தம் பல மைல் தொலைவுக்கு கேட்டது.

2-வது பிரிவு அணு உலைப் பகுதியில் இருந்த சுமார் 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்புக்காக சென்றிருந்த ராணுவ வீரர்களும் கதிர் வீச்சில் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் சோதனை மேல் சோதனையாக 2-ம் எண் அணு உலை வெடித்ததில் இருந்து கிளம்பிய அதிக அளவு வெப்பம் மற்ற அணு உலை பிரிவுகளில் தாக்கியது.

இதன் காரணமாக 4-வது பிரிவு அணு உலையில் தீ பிடித்தது. எனவே 4-வது பிரிவு அணு உலை இன்று எந்த நேரத்திலும் வெடித்து சிதறலாம் என்ற அபாயம் ஏற்பட்டுள்ளது. புகுஷிமா அணு மின் நிலையத்தில் மொத் தம் 6 அணு உலை பிரிவுகள் உள்ளன. இவற்றில் 4 பிரிவுகள் பாதுகாப்பு இல்லாததாக மாறி விட்டன.


மற்ற 2 அணு உலைகள் வெடிக்காமல் இருக்க ஜப்பான் நாட்டு நிபுணர்கள் போராடிக் கொண்டிருக் கின்றனர். அனால் அந்த அணு உலைகளும் வெடித்து விடும் என்று தெரிகிறது. இந்த 6 அணு உலைகளும் ஜப்பான் வடகிழக்கு
பகுதியின் மின் தேவையில் சுமார் 40 சதவீதத்தை பூர்த்தி செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

முதல் 2 அணு உலைகள் வெடித்த போது கதிர்வீச்சு அபாயம் அதிகம் இல்லை என்று ஜப்பான் அரசு கூறி வந்தது. ஆனால் இன்று 3-வதாக மேலும் ஒரு அணு உலை வெடித்து இருப்பதன் மூலம் கதிர்வீச்சு அளவு பல மடங்கு அதிகரித்து விட்டதாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து ஜப்பான் பிரதமர் நயடோகான் ஒரு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் 3 அணு உலைகளில் இருந்து வெளியாகும் கதிர் வீச்சு அதிகரித்து வருகிறது. இது நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே புகு ஷிமா அணு உலை பகுதியில் இருந்து 20 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் இருப்பவர் கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கூறியுள்ளார்.

அரசின் எச்சரிக்கை ஜப்பான் மக்களிடம் கடும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. தலைநகர் டோக்கியோவில் இருந்து புகுஷிமா மின்நிலைய அணு உலைகள் தென்மேற்கு திசையில் 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளன. புகுஷிமா அணு உலை கதிர்வீச்சு டோக்கியோ வரை வந்து விடுமோ என்று மக்கள் பயந்தபடி உள்ளனர்.

பூகம்ப பாதிப்புகளை சமா ளித்து விடலாம். கதிர்வீச்சை எப்படி எதிர் கொள்வது என்று ஜப்பான் மக்கள் கதி கலங்கி போய் உள்ளனர். அணு உலைகளில் இருந்தும் கதிர்வீச்சு வெளியானபடி உள்ளது. அணு உலை கசிவைத் தடுத்து விட்டாலும் கூட அணு மூலப் பொருளில் இருந்து வெளி யாகும் கதிர்வீச்சுகளை நிபுணர்களால் தடுக்க இயல வில்லை.

மூலப்பொருளில் இருந்து வெளியாகும் காமா கதிர்கள் மிக, மிக பயங்கர ஆபத்தை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. கதிர்வீச்சு அபாயம் தொடர்ந்து நீடிப்பதால் ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே 3.5 லட்சம் பேர் பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று சுமார் 1.80 லட்சம் பேர் தொலை தூர பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஜப்பானின் வட கிழக்கு பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கடுமையான குடிநீர் தட்டுப்பாடும் நிலவுகிறது. 15 லட்சம் பேர் குடிநீர் தட்டுப்பட்டால் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். முகாம்களில் தங்கி இருப்பவர்களுக்கும் சரியான உணவு, உடைகள் கிடைக்க வில்லை.

வடகிழக்கு பகுதி நகரங்களில் சுமார் 6 லட்சம் தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் சேத மதிப்பு கணக்கிட முடியாதபடி உள்ளது. ஜப்பானின் வடகிழக்கில் பல ஊர்களுக்கு மீட்புக் குழு வினர் செல்ல முடியாத படி உள்ளது. ஜப்பானின் வடகிழக்கில் பல ஊர்களுக்கு மீட்புக் குழுவினர் செல்ல முடியாத படி சாலைகள் நொறுங்கியுள்ளன. இதனால் உலகின் பல நாட்டு மீட்பு குழுக்களும் வான் வழியாகவே மீட்பு பணிகளை செய்து வருகின்றன.

Post a Comment

0 Comments