இன்டர்நெட்டில் திருக்குறள் படிக்கலாம்


திருக்குறள் தமிழின் சிறப்பை எடுத்துரைக்கும் பெருநூலாக விளங்குகின்றது. உலக அளவில் பலமொழிகளில் பல வடிவங்களில் திருக்குறள் பரவியுள்ளது. ஓலைச்சுவடியில் இருந்த திருக்குறள் அச்சுவடிவம் கண்டதுபோல் இணையவெளியிலும் பல தளங்களில் பலவாறு பதிப்பிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள மக்களுக்குப் பயன்படும்வண்ணம் திருக்குறள் மூலமாகவும், உரையுடனும், மொழிபெயர்ப்புடனும், ஒலி, ஒளிவடிவிலும், திருக்குறள் கருத்துகள் அசைவுப்படங்களாகவும், படக்கோப்புகளாகவும், ஒருங்குகுறிவடிவிலும், தரப்படுத்தப்பட்ட எழுத்துகளிலும், தனியார் நிறுவனங்களின் எழுத்துகளிலும் உள்ளன. திருக்குறளைச் செல்பேசிகளில் எடுத்துச்செல்லும் வண்ணம் தரவிறக்கும் வாய்ப்புகளுடனும் உள்ளது.

ஒலிவட்டுகளாக்கி மூலமும் உரையும் இணைந்த பேச்சு வடிவிலும் திருக்குறள் உள்ளது. திருக்குறள் சார்ந்த அறிஞர்களின் பேச்சுகளாவும் திருக்குறள் இணையத்தில் உள்ளது. தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் திருக்குறள் பரவல் இணையப்பெருவெளியில் மிகச்சிறப்பாக நிகழ்ந்துள்ளது. இவ்வாறு இணையத்தில் இடம்பெற்றுள்ள திருக்குறள் பதிப்புகள் பற்றியும் இணையதளங்களின் பதிப்புச் சிறப்புகள், சில தளங்களின் மேம்படுத்தலின் இன்றியமையாமை பற்றியும் இக்கட்டுரையில் சில செய்திகள் பதிவாக உள்ளன.

திருக்குறள் இணையப் பதிப்புகளின் பொதுத்தன்மைகள்:

திருக்குறள் தொடக்கத்தில் தரப்படுத்தப்பட்ட எழுத்துருக்களைக் கொண்டு பதிப்பிக்கப்பட்டுள்ளது. படக்கோப்புகளாகவும் (பி.டி.எப்.) சில தளங்களில் பதிப்பிக்கப்பட்டுள்ளது. சில தளங்கள் தனியார் நிறுவன எழுத்துகளாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளன (கலைஞரின் திருக்குறள் உரை, குறளோவியம்). இன்று ஒருங்குகுறிப் பயன்பாட்டின் முதன்மை தெரிந்த பிறகு பல இணையதளங்களும் ஒருங்குகுறி எழுத்துருவில் யாவரும் படிக்கும் வண்ணம் எந்த எழுத்துருச்சிக்கலும் இல்லாமல் படிக்கும் வகையில் பதிப்பித்துள்ளன.

தினமலர் போன்ற நாளிதழ்களின் தளத்தில் திருக்குறள் சிறப்பாக மூலத்துடனும் உரையுடனும் பதிப்பிக்கப்பட்டுள்ளது. தினமணி நாளிதழ்த் தளத்தில் நாளும் ஒரு திருக்குறள் இடம்பெறுகின்றது. அருகில் உள்ள பொத்தானை அழுத்தி திருக்குறளுக்கு உரிய பொருளை அறிந்துகொள்ளலாம்.

ஒவ்வொரு கணினி, இணையத் தொழில்நுட்பம் அறிந்த ஆர்வலர்களும் தங்கள் விருப்பத்துக்கு ஏற்பத் திருக்குறளைப் பலவகையாகப் படித்து மகிழும்வண்ணம் பதிப்பித்துள்ளனர். பொதுவாகப் பால்பகுப்பு, இயல்பகுப்பு, அதிகாரப் பகுப்பு இவற்றின் வழியாகத் திருக்குறளைப் பார்வையிடும்படி செய்துள்ளனர். சில தளங்களில் திருக்குறள் எண்ணைச்சொடுக்கியும் திருக்குறளைக் காணலாம். தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் பதிப்பில் மூலமும் மொழிபெயர்ப்புகளும் உரைகளும் பலவாக இருக்கின்றமை பயனாளிகளுக்குப் பெரும் பயன் தரும் ஒன்றாகும்.

மேலும் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் தளத்தின் முகப்பிலும் குறள் அமுதம் என்னும் தலைப்பில் திருக்குறள் இடம்பெற்றுள்ளமை கூடுதல் சிறப்பாகும். தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் தளத்தில் உள்ள திருக்குறள் தரப்படுத்தப்பட்ட எழுத்துகளில் உள்ளன. இந்த எழுத்துகளை நம் கணினியில் உள்ளிட்ட பிறகே திருக்குறள் பயன்பாட்டை நுகரமுடியும்.ஒருங்குகுறி வடிவில் இருக்கும்பொழுதே இதன் பயன்பாடு எளிமையாக அனைவருக்கும் கிடைக்கும்.

இதில் பரிமேலழகர் உரை,பாவாணர் உரை, கலைஞர் உரை எனப் பல உரைகள் உள்ளிடப்பட்டுள்ளன. போப் அடிகளாரின் ஆங்கிலமொழிபெயர்ப்பும், சுத்தானந்த பாரதியாரின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் உள்ளன. ஒலிவடிவில் கேட்கும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. எனினும் இன்னும் தொழில்நுட்பம் எளிமைப்படுத்தப் படவேண்டும்.

முத்து வ.,சித்தார்த் என்னும் இருவர் (http://kural.muthu.org/)உருவாக்கியுள்ள தளத்துக்குச் சென்றால் திருக்குறள் பயன்படுத்துவதற்கு எளிய முறையில் உள்ளிடப்பட்டுள்ளது. பால் பகுப்பும், இயல்பகுப்பும், அதிகாரப் பகுப்பும் சிறப்பாக உள்ளது. தேடும் வசதியும் இந்தத்தளத்தில் சிறப்பாக உள்ளது.

திருக்குறள் (http://www.thirukkural.com/) என்னும் தளத்தில் எளிமையான அமைப்பில் அனைவரும் பயன்படுத்தும் வண்ணம் அமைத்துள்ளனர். பயன்மிகு பக்கங்கள் என்ற தலைப்பில் பல இணைப்புகளும் வைத்துள்ளனர். எழுத்துகள் ஒருங்குகுறி அமைப்பில் இருப்பதால் எந்தக் கணினியும் சிக்கலின்றி எழுத்துகளைக் காட்டும்.கலைஞர் உரை, மு.வ. உரை.சாலமன் பாப்பையா உரை ஆங்கில உரைகள் யாவும் சிறப்பாகப் பயன்படுத்தும்படி உள்ளன.

அகரம் (http://agaram-thirukkural.blogspot.com/) என்னும் தளத்துக்குச் சென்றால் தமிழ் ஆங்கில விளக்கத்துடன் திருக்குறள் சிறப்பாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளது. குறள்களை எண்ணைச் சொடுக்கிப் பயன்படுத்தும் வகையில் எளிய உரைகள் சிறப்பாக வழங்கப்பட்டுள்ளன.

செந்தமிழ்(http://senthamil.org) என்னும் தளத்தில் திருக்குறளின் முதற்சீர் மட்டும் குறியீட்டுச் சொல்லாக அமைந்துள்ளது. அதனைச் சொடுக்கினால் உரிய திருக்குறள் மூலத்தை மட்டும் படிக்கலாம்.இதில் ஒரு நெறிமுறை இல்லாமல் இல்லாத முறையைச் சீர் செய்தால் சிறந்த தளமாக அமையும்.

மதுரைத்திட்டத்தில் (http://www.infitt.org/pmadurai/pm_etexts/utf8/pmuni0001.html) உள்ள திருக்குறள் மூலம் மட்டும் கொண்டதாக அமைந்துள்ளது. படக்கோப்பு வடிவிலும், தரப்படுத்தப்பட்ட எழுத்து வடிவிலும்,ஒருங்குகுறி வடிவிலும் திருக்குறள் இடம்பெற்றுள்ளது.

ஆச்சார்யா தளத்தில் (http://acharya.iitm.ac.in/tamil/kural/kural_browse.php) உள்ள திருக்குறள் யாவும் மூலமும் அதற்கு ஆங்கில விளக்கமுமாக உள்ளன. எண்ணைச்சொடுக்கிக் குறளைப் பெறும் வகையில் தளம் உள்ளது.

தமிழன் வழிகாட்டி (http://www.tamilsguide.com/) இணைய தளத்தில் தினம் ஒரு திருக்குறள் என்னும் தலைப்பில் திருக்குறள் இடம்பெற்றுள்ளது. தமிழ் ஆங்கிலம் என்னும் இருமொழிகளில் அறியும்வண்ணம் உள்ளது. திருக்குறளுக்குத் தமிழ் உரையை அ.பொ.செல்லையா அவர்கள் வழங்கியுள்ளார். ஆங்கில விளக்கவுரையை அவர் துணைவியார் திருவாட்டி யோகரத்தினம் செல்லையா வழங்கியுள்ளார்.

ஆங்கிலத்தில் அதிகார எண், குறள் எண், ஆங்கில எழுத்தில் குறள், ஆங்கிலத்தில் விளக்கம் உள்ளது. தமிழிலும் இந்த வரிசைமுறையில் குறட்பாக்கள் உள்ளன. உரையாசிரியர்களின் படங்கள் இடம்பெற்றுள்ளமை கூடுதல் சிறப்பு.


பிறமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள திருக்குறள் பற்றி அறிய http://nvkashraf.co.cc/nvkashraf/kur-trans/languages.htm என்னும் தளத்திற்குச் செல்ல வேண்டும். இதில் சௌராட்டிரமொழி, இந்தி, வங்காளம், குசராத்தி, ஒரியா, மராத்தி, தெலுங்கு, அரபி, உருது, சீனம், ஆங்கிலம், பிரஞ்சு, இசுபானிசு, சுவீடிசு, என பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள விவரங்களை ஓரிடத்தில் பெறலாம்.

திருக்குறள் ஒலிப்பதிப்பு (http://universalepublishers.com/)

திருக்குறள் ஒலிப்பேழைகளாக (கேசட்) முன்பு உலகத் தமிழர்களுக்குக் கிடைத்தது. இன்று தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னிற்கும் தமிழர்கள் தங்கள் அறிவுத்திறமைகளால் திருக்குறளை ஒலிவடிவில் கேட்டு மகிழக் குறுவட்டுகளாக வெளியிட்டுள்ளார்கள்.

1330 அருங்குறட்பாக்களும் எட்டரை மணி நேரம் கேட்டு மகிழும் வகையில் உரையுடன் குறுவட்டில் பதிப்பித்துள்ளனர். முன்னுரையும், பால்பகுப்பும் சுட்டி, இயல் பகுப்பு உணர்த்தி, அரிய இசை முன்னோட்டமும், அதிகாரத்தின் எண்ணும், அதிகாரத் தலைப்பும், குறளும் அதற்குரிய பொருளும் இசை நிறைவும் கொண்டு ஒவ்வொரு அதிகாரமும் இந்தக் குறுவட்டில் சிறப்புடன் பதிவு செய்யப்பெற்றுள்ளது. பின்னணி இசையும் மென்மையாக ஒலிக்கின்றது.

திருக்குறளை இனிய குரல்வளத்துடன் பொருள் விளங்கும்படி படித்து, கேட்பவர்களுக்குச் சலிப்பு ஏற்படாமல் பதிவு செய்துள்ளமை பாராட்டத்தகுந்த முயற்சியாகும்.

முனைவர் க.ப.அறவாணன் அவர்களின் திருக்குறள் உரை இந்த ஒலிப்பேழையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

திரு.டெய்சன் அவர்களின் குரலில் ,ஒலிவல்லுநர் தினேசுகுமார்,(கிருபா எண்மியம்)ஒலிக்கோர்வை செய்ய, அமரர் இரா.இரவிச்சந்திரன் இசையில் இவர்களின் கூட்டுழைப்பில் இந்த ஒலிக் குறுவட்டு கோவையிலிருந்து செம்மொழி மாநாடு நடைபெறும் நாளில் வெளிவந்தது.திருக்குறள் ஒலிக் குறுவட்டுகள் செம்மொழி மாநாட்டை ஒட்டி நடந்த தமிழ் இணையமாநாட்டு அரங்கில் கண்காட்சிக்கூடத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டது.

நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள்,அல்லது அலுவலகப் பணிகளில் ஈடுபடுபவர்கள் திருக்குறளைக் கேட்டபடி தங்கள் பணிகளைச் செய்ய இத்தகைய ஒலிப்பதிப்புகள் பயன்படும்.அயல்நாட்டுத் தமிழர்கள்,தமிழ் ஆர்வலர்கள் யாவருக்கும் பயன்படும்.ஒரு குறுவட்டின் விலை (இந்திய உருவா) 150-00

திருக்குறள் மறைமொழி (http://panainilam.blogspot.com/2009/02/1330.html)

1330 திருக்குறளும் இசையுடன் பாடிக் குறுவட்டாக அமெரிக்காவில் வெளியிடப்பட்டுள்ளது. ஏழு பெண்களும், ஏழு ஆண்களும் அடங்கிய இரு குழுக்கள், ஒவ்வொன்றும் மாறி மாறி அவ்வைந்து அதிகாரங்களாகப் பாடியுள்ளது. எளிமையான இசையோடு மறைமொழியின் (மந்திரம் என்ற சொல்லுக்குத் தமிழில் மறைமொழி) மெட்டில் 1330 குறட்பாக்களும் பாடப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு அதிகாரத்தின் தலைப்பும் சொல்லப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு அதிகாரமும் சுமார் ஒன்றரை நிமிடங்கள் இசைக்கின்றன. மொத்த குறட்பாக்களைக் கேட்க ஆகும் நேரம் சுமார் மூன்று மணி நேரம். இதற்கான ஒலிப்பதிவு Island Sounds என்ற ஒலிப்பதிவகத்தில் Steve Green என்பவரால் செய்யப்பட்டது. ஒலிப்பதிய எடுத்துக்கொண்ட நேரம் சுமார் ஆறு மணி நேரம். குறுந்தகட்டுக்கான முன்னுரையை வழங்கியிருப்பவர் திருச்சி திருவள்ளுவர் தவச்சாலையைச் சார்ந்த இரா.இளங்குமரனார் அவர்கள் இதன் விலை 5 அமெரிக்க டாலர் ஆகும்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதியுதவியுடன் சென்னையில் உள்ள தமிழ் மையம் திருக்குறளின் 330 குறட்பாக்களை 50 பாடல்களாக உருவாக்கியுள்ளது. திருக்குறள் இசைத்தமிழ் என்னும் பெயரில் இம்மையம் குறுவட்டை உருவாக்கியுள்ளது. செம்மொழி நிறுவனத்தின் தளத்திற்குச் சென்று(http://ta.cict.in/thirukkural330-tamil-maiyam ) இலவயமாகப் பதிவிறக்கிக்கொள்ளலாம்.

திருக்குறள் சார்ந்த பதிப்புகளையும், இணையதளங்களையும் ஆய்வதுடன் திருக்குறள் பதிப்புகள் முறையாக இணையத்தில் உள்ளனவா என்று ஆராய்வது இன்றைய தேவையாக உள்ளது.திருக்குறள் பதிப்புகள், உரைவெளியீடுகள் மிகுந்துவரும் இந்த நாளில் அவற்றை இணையப் பதிப்புகளாக வெளியிடுவது மிகவும் எளிதாகும். அவ்வாறு வெளியீடு செய்தால் இணையப் பெருவெளியில் திருக்குறள் உரைகள் யாவும் ஓரிடத்தில் காணும் வாய்ப்பு ஏற்படும்.

புதுவைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வான்புகழ் திருக்குறள் பன்னாட்டுக் கருத்தரங்கில் காட்சிவழிப் படைப்பாக இக்கட்டுரை வழங்கப்பட்டது. நாள் 13.02.2011

நன்றி: முதுமுனைவர் ம.சா.அறிவுடைநம்பி அவர்கள்

நன்றி: http://muelangovan.blogspot.com

Post a Comment

2 Comments

ரேவா said…
தகவல்கள் அனைத்தும் அருமை... சில தளங்களை புக் மார்க் செஞ்சாச்சு... நன்றி உங்கள் தகவலுக்கு... தொடர்ந்து இதுபோன்ற தகவல்களை எதிர்பார்க்கின்றோம்....வாழ்த்துக்கள்
calmmen said…
ரொம்ப சந்தோஷம்
தங்கள் வருகைக்கு நன்றி , தொடர்ந்து இங்கே வரவும்