பிரதமருக்கு கடமைப்பட்டுள்ளேன் : தனுஷ்


பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன் என்று விருந்தில் பங்கேற்ற தனுஷ் கூறியிருக்கிறார். நம்மில் பலருக்கு 2011-ம் ஆண்டு எப்படியோ, ஆனால் நடிகர் தனுஷை பொறுத்தமட்டில் பொன்னான ஆண்டு, என்று தான் சொல்ல வேண்டும். முதலில் ஆடுகளம் படத்திற்காக தேசிய விருது கிடைத்தது. இப்போது சமீபத்தில் வெளியான கொலவெறி பாடல் அவரை எங்கயோ கொண்டு போய் நிறுத்தியுள்ளது. இப்பாடலால் உலகம் முழுக்க பிரபலமாகி இருக்கும் தனுஷ்க்கு, மேலும் ஒரு இன்ப அதிர்ச்சியாக பிரதமர் மன்மோகன் சிங் விருந்தில் பங்கேற்க அழைப்பு வந்தது.

சில தினங்களுக்கு முன்பு பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் நடந்த இந்த விருந்தில் மன்மோகன் சிங், ஜப்பான் பிரதமர் யோசிகோ நோடா ஆகியோருடன் நடிகர் தனுஷூம் விருந்து உண்டார்.

இந்த அனுபவம் குறித்து மகிழ்ச்சி பொங்க தனுஷ் கூறியிருப்பதாவது, பிரதமர் அளித்த விருந்தில் நான் பங்கேற்ற ‌போது, மன்மோகன் சிங் அவர்கள் என்னுடைய கையை பிடித்து உங்களை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார். கூடவே என்னுடைய கொலவெறி பாடலுக்கும் வாழ்த்தும், அப்படியே என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்தும் தெரிவித்தார் என்றார்.

மேலும் பிரதமர் விருந்தில் நான் பங்கேற்றது என் வாழ்வில் கிடைத்த மிகப்பெரிய கவுரவம் என்றும், ஜப்பான் பிரதமருடன் சேர்த்து என்னையும் அழைத்தமைக்கு, பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன் என்றும் கூறியுள்ளார். 

Post a Comment

0 Comments