சேவாக்கின் 'தனித்துவ' பதிவு

                சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த விரேந்திர சேவாக், இதையொட்டி ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், தனது கிரிக்கெட் வாழ்வுக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.
                   அந்த அறிக்கையின் கடைசியில் சற்றே நகைச்சுவையுடன், தனக்கு அறிவுரை வழங்கியவர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, பெரும்பாலான அறிவுரைகளை தான் ஏற்காததற்கு மன்னிப்பும் கேட்டுள்ளார். அந்த அறிக்கையின் விவரம்:
'மார்க் ட்வெயினை மறு கூற்றாக்கம் செய்தால் நேற்று என் ஓய்வு பற்றிய செய்தி சற்றே ஊதிப்பெருக்கப்பட்டதுதான். ஆயினும், எது சரியானது என்பதையே நான் எப்போதும் செய்து வந்துள்ளேன். மரபுவாதிகள் எது சரியென்று கருதினார்களோ அதை நான் செய்ததில்லை. கடவுள் என்னிடம் கருணையுடன் இருந்துள்ளார். இதனால் நான் விரும்பியதைச் செய்ய முடிந்தது. சில காலம் முன்பாகவே எனது 37-வது பிறந்த நாளன்று நான் ஓய்வு பெறும் முடிவை எடுத்தேன். இன்று நான் எனது குடும்பத்தினருடன் நாளை செலவிடும் இத்தருணத்தில் நான் அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும், ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுகிறேன்.
கிரிக்கெட்தான் எனது வாழ்க்கை, அப்படித்தான் இனியும் தொடரும். இந்தியாவுக்காக விளையாடுவது ஓர் இனிய நினைவு சார்ந்த பயணம். இதனை எனது அணியினருக்காகவும், இந்திய ரசிகர்களுக்காகவும் நான் மேலும் நினைவுகூரத்தக்கதாகச் செய்துள்ளேன்.
என்னுடன் விளையாடிய அனைத்து சகாக்களுக்கும் நன்றி. இவர்களில் பலர் கிரிக்கெட் ஆட்டத்தின் மிகப்பெரிய வீரர்கள். அனைத்து கேப்டன்களுக்கும் நன்றி கூற விரும்புகிறேன். அவர்கள் என்னை நம்பினார்கள், என்ன சூழ்நிலையிலும் என்னை ஆதரித்தார்கள். எங்களது மிகச்சிறந்த கூட்டாளிகளான இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அளித்த ஆதரவு, மிகச்சிறந்த நினைவுகளுக்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
          நிறைய மகா வீரர்களுடன் ஆடியுள்ளேன், இது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதோடு எனக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமையாகவும் கருதுகிறேன். இதனால்தான் எனது சிறந்த திறமையை வெளிப்படுத்தி ஆட முடிந்தது. இதுதான் எனக்கு ஊக்கத்தை அளித்தது. நான் எனது கனவை வாழ்ந்து விட்டேன், உலகின் சிறந்த மைதானங்களில் ஆடிவிட்டேன். மைதான பணியாட்கள், கிளப்கள், அசோசியேஷன்கள் அனைவருக்கும் எனது நன்றி. இவர்கள்தான் எங்கள் திறமையை வெளிப்படுத்த அரங்கத்தை வடிவமைத்துக் கொடுத்தவர்கள்.

இன்று என் தந்தை எங்களுடன் இல்லை. நான் என் பயணத்தை தொடங்கும் போது அவர் என்னுடன் இருந்தார். ஆனால், அவர் இந்த நாளிலும் என்னுடன் இருந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அவர் எங்கிருந்தாலும் அவருக்கு பெருமை சேர்த்ததாகவே நான் நினைக்கிறேன். அவர் என்னை பெருமையுடன் கண்டு களித்துள்ளார். எனது பயிற்சியாளர் ஏ.என்.சர்மாவுக்கு நன்றி. நான் எந்த மாதிரியான வீரராக உருவானேனோ அத்தகைய தன்மையை என்னிடத்தில் உருவாக்கியவர் ஏ.என்.சர்மா சார். வேறு பயிற்சியாளராக இருந்திருந்தால் பள்ளி கிரிக்கெட் ஆடுவதில் கூட நான் போராடியிருக்க நேரிட்டிருக்கும்...
             எனக்கு இத்தனையாண்டுகள் ஆதரவு அளித்த இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு நன்றி. நான் டெல்லி கிரிக்கெட் சங்கத்துக்கும் கடமைபட்டுள்ளேன். குறிப்பாக அருண் ஜேட்லிக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். அவர் எப்போதும் என்னை ஊக்குவித்து வந்தார், எங்களிடம் எப்போதும் ஆலோசனைகளைக் கேட்டு அதனை உடனுக்குடன் நிறைவேற்றினார் ஜேட்லி.
என்னை வரவேற்ற ஹரியாணா கிரிக்கெட் சங்கத்துக்கு நன்றி. இங்கு சில உண்மையான திறமையுடைய வீரர்களுடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியளிக்கிறது.
டெல்லி டேர் டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு நன்றிகள். நான் எனது அணிக்காக எனது சிறந்த ஆட்டத்தை வழங்கியுள்ளேன், மேலும் ஐபிஎல் கிரிக்கெட்டில் சில சிறந்த வீரர்களுடன் ஆடியதை அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன்.
                ஒவ்வொரு செய்தியாளர்கள் சந்திப்பையும் மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டுள்ளேன். சர்வதேச கிரிக்கெட்டில் ஊடகவியலாளர்களுடன் எனது உரையாடலை மகிழ்ச்சியுடன் நடத்தியுள்ளேன். அயல்நாட்டுப் பயணங்களின் போது இந்திய பத்திரிகையாளர்கள் சிலரது இருப்பு உண்மையில் அருமையான நினைவுகளை என்னிடத்தில் விட்டுச் சென்றுள்ளது.
இனி உங்களுடன் அதிக நேரம் இருப்பதற்காக, சேவாக் சர்வதேசப் பள்ளிக்கு அடிக்கடி வருகை தருவேன் என்று கருதுகிறேன்.
               இவ்வளவு ஆண்டுகளாக எனக்கு கிரிக்கெட் அறிவுரைகளை வழங்கியவர்கள் அனைவருக்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன், ஆனால், இவற்றில் பெரும்பாலான அறிவுரைகளை நான் ஏற்றுக் கொள்ளாததற்கு மன்னிப்பு கேட்கிறேன். நான் அவற்றை பின்பற்றாததற்கு என்னிடம் காரணங்கள் உள்ளன. நான் எனது வழியில் அதனைச் செய்தேன்' என்று சேவாக் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments