சசிகலா ஆதரவு அமைச்சர்களுக்கு ஆப்பு?

சசிகலா ஆதரவு அமைச்சர்கள் பலரும் தற்போது பெரும் கிலியுடன் உள்ளனர். சின்னம்மாவை நம்புவதா அல்லது அம்மாவிடம் சரணாகதி ஆகி பதவியைக் காப்பாற்றிக் கொள்வதா என்ற குழப்பத்தில் அவர்கள் உள்ளனராம்.
ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சசிகலா மற்றும் அவரைச் சேர்ந்தவர்கள் தங்களது செல்வாக்கின் மூலம் தங்களது ஆதரவாளர்கள் பலரையும் அமைச்சராக்கி வைத்துள்ளனர். இவர்கள் ஜெயலலிதாவை விட சசிகலாவுக்கே பெரும் விசுவாசமாக செயல்பட்டு வருகின்றனர்.

அதிலும் சில அமைச்சர்கள், அந்தப் பதவிக்குரிய தகுதி சற்றும் இல்லாதவர்கள். இவர்களை நீக்க ஜெயலலிதா பலமுறை முயன்றும் முடியவில்லையாம். காரணம், சசிகலாவின் சமாதானமாகும். இதனால் இந்த அமைச்சர்கள் சற்றும் கவலை இல்லாமல் ஜாலியாக இருந்து வருகின்றனர்.ஆனால் தற்போது சசிகலாவே விரட்டப்பட்டு விட்டதால் இந்த அமைச்சர்களுக்குப் பெரும் குழப்பமாகியுள்ளதாம்.

குறிப்பாக கரூரைச் சேர்ந்த போக்குவரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. இவரை தொகுதிப் பக்கமோ, வேறு எங்குமோ மக்கள் பார்த்ததாக யாருக்கும் நினைவில்லை. தனது செல்போனைக் கூட எடுக்க முடியாத அளவுக்கு பிசியாக இருப்பவர் செந்தில் பாலாஜி. இவரைப் பற்றி கரூரில் அரசல் புரசலாக பல வதந்திகளும் கூட ஓடிக் கொண்டுள்ளன. சசிகலா குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமான வட்டத்தில் இருப்பவர் செந்தில் பாலாஜி. சசிகலாவுக்கு வேண்டப்பட்டவர் என்ற ஒரே காரணத்திற்காக தொடர்ந்து அமைச்சராக இருப்பவர் இவர்.இதேபோல வைத்தியலிங்கம், டாக்டர் விஜய், ஜெயபால், எடப்பாடி பவனிச்சாமி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, காமராஜ் என பல அமைச்சர்களும் சசிகலாவுக்கு மிகவும் வேண்டப்பட்டவர்கள்.

இவர்கள் எல்லாம் எப்போது தங்களுக்கு கல்தா கிடைக்கும் என்ற பெரும் பதைபதைப்பில் உள்ளனராம்.அதேமயம், அடுத்தடுத்து அமைச்சரவையை மாற்றினால் மக்களிடம் மேலும் கெட்ட பெயரே ஏற்படும் என்பதால் இவர்களை நீக்காமல் டம்மியான இலாகாக்களை கொடுத்து அப்படியே ஓரம் கட்டி படிப்படியாக ஜெயலலிதா நீக்கக் கூடும் என்கிறார்கள் தகவல் அறிந்த வட்டாரத்தினர்.

Post a Comment

0 Comments