போலீஸ் சூப்பிரண்டு அருண் பேட்டி


குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த பவானீஸ்வரி சென்னை கீழ்ப்பாக்கம் துணை கமிஷனராக மாற்றப்பட்டார். இதையடுத்து குமரி மாவட்ட புதிய சூப்பிரண்டாக திருப்பூர் மாவட்ட சூப்பிரண்டு அருண் நியமிக்கப்பட்டார்.

நாகர்கோவிலில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இன்று காலை அவர் புதிய சூப்பிரண்டாக பொறுப்பேற்றுக் கொண்டார். அவரிடம் இங்கு பொறுப்பு போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய மார்ஸ்டன் லியோ பொறுப்புகளை ஒப்படைத்தார். பதவி ஏற்றுக் கொண்டதும் போலீஸ் சூப்பிரண்டு அருண் நிருபர்களிடம் கூறியதாவது:-

குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நான் இரண்டாவது முறையாக இங்கு பொறுப்பேற்றுள்ளேன். எனக்கு முன்பு கிருஷ்ணசாமி, பரம்வித்சிங் ஆகியோர் இது போல 2 முறை எஸ்.பி. ஆக இருந்துள்ளனர். இம் மாவட்டத்தை பற்றி எனக்கு நன்றாக தெரியும். இங்கு வழிப்பறி திருடர்களும், நகை பறிப்பு சம்பவங்களும் அதிகம் நடப்பதாக தெரிவித்தனர்.

இது போல ரவுடிகள் சிலர் தலைதூக்கி வருவதாகவும் கூறினர். இங்கு ரவுடிகளை ஒழித்து கட்டுவதும், விழிப்பறி திருடர்களை மடக்கி பிடிப்பதும் தான் எனது முதல் பணியாக இருக்கும். இது போல நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம் பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடி அதிகம் இருப்பதாகவும் கூறப்பட்டது.

இதற்கு தீர்வு காணவும் நடவடிக்கை எடுப்பேன். சோதனை மாவட்டத்தின் அனைத்து சோதனை சாவடிகளும் பலப்படுத்தப்படும். அங்கு அடிக்கடி சோதனைகள் நடத்தப்படும். குமரி மாவட்டத்தை பொறுத்தவரை இங்கு போதுமான போலீஸ் உள்ளனர்.

இதற்கு முன்பு நான் பணியாற்றிய திருப்பூர் மாவட்டத்தை காட்டிலும் இங்கு அதிகமான போலீஸ் உள்ளனர். சோதனை சாவடி மற்றும், ரோந்து பணிகளில் போலீசார் “ஷிப்டு” முறையில் ஈடுபடுத்தப்படுவார்கள். அவர்களுக்கு உரிய வசதிகளும் செய்து கொடுக்கப்படும். தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்ற அரசு சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படும் என்று அறிவித்துள்ளது.அதன்படி குமரி மாவட்டத்திலும் எனது பணிகள் அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

0 Comments