சினிமா துறையினருக்கு ஷாக் கொடுத்த ஜெ


அரசையும், ஆட்சியாளர்களையும் தொல்லை செய்தே பழக்கப்பட்டுப் போன சினிமாக்காரர்கள், இன்னும் திருந்துவதாக இல்லை. கருணாநிதி காலத்தில்தான் அந்த விழா, இந்த விழா என்று அட்டகாசம் செய்தார்கள் என்றால் முதல்வர் ஜெயலலிதாவிடம் அதே வேலையைக் காட்ட துடித்துள்ளார்கள். ஆனால் ஜெயலலிதா முளையிலேயே அதை கிள்ளி எறிந்து அவர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் சினிமாக்காரர்கள் போட்ட ஆட்டம் மக்களால் மறக்க முடியாது. தமிழக மக்களால் திமுக ஆட்சியை விட்டு விரட்டப்படுவதற்கு இந்த சினிமாக்காரர்களும் ஒரு முக்கியக் காரணம்.

அப்பாவி ஜனங்களால் முதல்வரின் நிழல் அருகில் கூட அவ்வளவு சீக்கிரம் போய் விட முடியாது. அந்த அளவுக்கு ஏகப்பட்ட பாதுகாப்பு வளையங்கள் திமுக ஆட்சிக்காலத்தில் போட்டு வைக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த சினிமாக்காரர்கள் மட்டும் நினைத்தால் போய் பார்த்து விட்டு வர முடிந்தது.குஷ்பு போய் பார்ப்பார், குயிலி போய் பார்ப்பார், சோனா பார்ப்பார், நமீதா பார்ப்பார், ஏன் நேற்று நடிக்க வந்த குட்டிக் குட்டி நடிகைகள் கூட முதல்வராக இருந்த கருணாநிதியை எளிதாக, பார்க்க முடிந்தது.அந்த பாராட்டு விழா, இந்தப் பாராட்டு விழா என்று கிட்டத்தட்ட மாதத்திற்கு 2 விழாக்களை நடத்தி முதல்வரையும், திமுக ஆட்சியையும் குளுமையாக்கி வைத்திருந்தனர் சினிமாக்காரர்கள்.இப்படிச் செய்து செய்தே ஏகப்பட்ட சலுகைகளை வாங்கிப் பலனடைந்தனர். ஆனால் அப்பாவி மக்களும், சினிமா ரசிகர்களும் நல்ல படத்தைப் பார்க்க முடியாமல், குப்பைப் படத்தைப் பார்த்து பொழுதைப் போக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். அதிக காசு கொடுத்து டிக்கெட் வாங்கி கஷ்டப்பட்டு வந்தனர். இந்த கஷ்டத்தை போய் யாரிடம் சொல்வது என்று மக்களுக்கு புரியவில்லை. அப்படி ஒரு நிலை. முதல்வருக்கு நெருக்குதல் கொடுத்து பத்திரிக்கையாளரைக் கூட கைது செய்ய வைக்கும் அளவுக்கு செல்வாக்கோடு இருந்தனர் சினிமாக்காரர்கள் கடந்த ஆட்சிக்காலத்தில்.

இந்த நிலையில் தற்போது ஆட்சி மாறியும், சினிமாக்காரர்களின் காட்சி மாறவில்லை. முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதாவையும் தங்களது வலையில் வீழ்த்த அவர்கள் துடியாய்த் துடித்து வருகின்றனர்.இந்த நிலையில், பெப்சி அமைப்பின் சார்பில் சில நிர்வாகிகள் ஜெயலலிதாவை அணுகி பாராட்டு விழா நடத்த முடிவு செய்துள்ளோம். தேதி தர வேண்டும் என்று கேட்டுள்ளனராம். இதைக் கேட்ட ஜெயலலிதா எனக்கு மக்கள் பணிகள் நிறைய இருக்கிறது. எனவே இதற்கெல்லாம் வர முடியாது என்று கூறி விட்டாராம். அத்தோடு நில்லாமல், இது மட்டுமல்ல திரையுலக விழாக்களுக்கு வரும் ஐடியாவே என்னிடம் இல்லை என்றும் கூறி விட்டாராம்.

முதல்வர் நாம் நடத்தும் விழாவுக்கு வருவார், ஐஸ் வைத்துப் பேசி தேவையானதைக் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம் என்று கணக்குப் போட்ட நிர்வாகிகளுக்கு ஜெயலலிதாவின் இந்த அதிரடிப் பதில் ஷாக்கைக் கொடுத்துள்ளதாம்.கடந்த ஆட்சியாளர்கள் செய்த தவறுகளை செய்யாமல் தவிர்ப்பதில் ஜெயலலிதா மிக மிக கவனமாக இருக்கிறார் என்பதற்கு இது மிகப் பெரிய உதாரணமாக கருதப்படுகிறது.

சினிமாத் தொழிலில் இருப்பவர்கள், சும்மா சும்மா, எதற்கெடுத்தாலும் போய் முதல்வரைப் பார்ப்பது, முறையிடுவது, மனு தருவது என்று தொந்தரவு செய்யாமல், மக்கள் நலப் பணிகளை செய்ய ஆட்சியாளர்களை அனுமதித்து, அந்த நேரத்தில் நல்ல படங்கள் எடுப்பதற்கான ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்ய முயற்சித்தால் சினிமாவின் எதிர்காலத்திற்கு நல்லது. மக்களிடமும் நல்ல பெயர் கிடைக்கும்.

Post a Comment

0 Comments