விஜயகாந்துக்கு குடை பிடிப்பவராக வடிவேலு -ஆர்.வி.உதயக்குமார் தாக்கு


பாவம், உங்க ஊர் பையண்ணே என்று விஜயகாந்த்திடம் வடிவேலுவை அறிமுகப்படுத்தி அவருடன் நடிக்க வைத்தேன்.ஆனால் இன்று வளர்த்து விட்ட ஏணியை எட்டி உதைத்துள்ளார் வடிவேலு என்று சாடியுள்ளார் இயக்குநர் ஆர்.வி.உதயக்குமார்.

நாகர்கோவிலில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து ஆர்.வி.உதயக்குமார் பிரசாரம் மேற்கொண்டு பேசினார். நாகர்கோவில் தொகுதி அதிமுக வேட்பாளர் நாஞ்சில் முருகேசனை ஆதரித்து பார்வதிபுரத்தில் அவர் பேசியபோது,

விஜயகாந்த் ஒரு நல்ல மனிதர். எதையும் ஓப்பனாக பேசுவார். அவரை வைத்து நான் சின்னக்கவுண்டர் படம் இயக்கும்போது நடிக்க வாய்ப்பு கேட்டு வந்தவர்தான் வடிவேலு.

அந்த படத்தில் விஜயகாந்துக்கு குடை பிடிப்பவராக வடிவேலு நடித்திருப்பார்.விஜயகாந்திடம், பாவம் உங்கள் ஊர் பையன்தான் அண்ணே! என்று, நான்தான் அறிமுகம் செய்து வைத்தேன். விஜயகாந்த் அவரை தட்டிக்கொடுத்து வளர்த்து விட்டார். ஆனால் ஏற்றிவிட்ட ஏணியை வடிவேலு எட்டி உதைத்துள்ளார்.

தி.மு.க.வுக்கு ஆதரவாக பேசும் அவர் வேட்பாளரை மதிப்பதே கிடையாது. திரை உலகம் இன்று ஒரே குடும்பத்தை நம்பி உள்ளது. இவர்களுக்கு ஜெயலலிதா மட்டும்தான் விடுதலை வாங்கித்தர முடியும் என்றார் உதயக்குமார்.

Post a Comment

0 Comments