விஜயகாந்த் :என்னைப்பற்றி தவறான செய்திகளை பரப்புகின்றனர்


""என்னை கண்டு கருணாநிதிக்கு பயம் வந்து விட்டது. அதனால் தான் என்னை பின் தொடர்ந்து தவறான செய்திகளை பரப்புகின்றனர்,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் திருச்சியில் பேசினார்.

திருச்சி வந்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், ஸ்ரீரங்கத்தில் போட்டியிடும் ஜெயலலிதா, திருவெறும்பூர் செந்தில்குமார், மண்ணச்சநல்லூர் பூனாச்சி, முசிறி சிவபதி ஆகியோரை ஆதரித்து ஓட்டு வேட்டையாடினார். திருவெறும்பூர், ரயில்நகர், திருவானைக்காவல், மண்ணச்சநல்லூர், முசிறி ஆகிய இடங்களில் விஜயகாந்த் பேசியதாவது: "பால் உற்பத்தியாளர்களுக்கு விலையை உயர்த்தி தரவேண்டும். குறைந்த விலையில் பால் விற்பனை செய்ய வேண்டும்' என்று மூன்றாண்டுக்கு முன் நான் கூறினேன். ஆனால், இப்போது தான் கருணாநிதி பால் உற்பத்தியாளர்களுக்கு விலை உயர்த்தி தருவதாக அறிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. டில்லிக்கு பலமுறை சென்ற கருணாநிதி, பெட்ரோல் விலை உயர்வு குறித்து வாய்திறந்திருப்பாரா? 5 ஆண்டுக்கு முன், 33.55 ரூபாயாக இருந்த பெட்ரோல் இன்று, 63 ரூபாய்க்கு விற்கிறது. அனைத்து தொழில்களும் இழுத்து மூடப்பட்டுவிட்டன. "கரன்ட் கட்' அதிகரித்துள்ளது. கலர், கலராக டிக்கெட்டை கொடுத்து பஸ் கட்டணத்தை மறைமுகமாக உயர்த்தியுள்ளனர். தவறு செய்தால் யாரையும் விடமாட்டேன். கருணாநிதி, தன் பிள்ளைகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், ஒன்றியம், வார்டு, வட்ட செயலர் வரை அனைவரையும் தவறு செய்யும்படி கூறுகிறார். எங்கும், எதிலும் ஊழல், லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

எனது கட்சி வேட்பாளரை அடித்ததாக, "டிவி'யில் அடிக்கடி ஒளிபரப்புகின்றனர். நான் என் கட்சிக்காரரை தானே அடித்தேன்; உங்களையா அடித்தேன்? கூட்டத்துக்கு வரும் தொண்டர்களை கொடியை கீழே இறக்கச் சொல்கிறார் என்கின்றனர். பின்னால் நிற்கும் மக்கள் என்னை பார்க்க முடியாது என்பதால், கொடியை கீழே இறக்கும்படி கூறுகிறேன். இதை ஏதோ தவறுபோல், சித்தரித்து "டிவி'க்களில் ஒளிபரப்புகின்றனர். என்னை கண்டு கருணாநிதிக்கு பயம் வந்துவிட்டது. அதனால் தான் என்னை பின் தொடர்கின்றனர். தவறான செய்திகளை பரப்புகின்றனர். விஜயகாந்த் வேட்பாளரை அடிச்சான்; கொடியை இறக்கச் சொன்னான்; வாந்தி எடுத்தான் என, என்ன வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள். என்னைப் பற்றி என் தொண்டர்களுக்கும், மக்களுக்கும் தெரியும். ரோட்டில் ஒருவர் நடந்து செல்கிறார். அப்போது, அவர் திடீரென மயங்கி விழுகிறார். உடனடியாக என்ன செய்ய வேண்டும்? அவரது முகத்தில் தண்ணீர் தெளித்து, சோடா கொடுத்து அவரை மீட்க வேண்டும். அதுபோல், தமிழகத்தை மீட்க கருணாநிதியை ஆட்சியிலிருந்து துரத்துவது தான் தமிழகத்தின் உடனடி தேவை. இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

Post a Comment

0 Comments