மூலிகை அறிமுகம் 7 - தூதுவளை

1) வேறு பெயர்கள்: தூதுவளை, தூதுளம், தூதுளை

2) தாவரப் பெயர்கள்: Solanum Trilubatum; Solanaceae

3) வளரும் தன்மை: தமிழகம் எங்கும் தன்னிச்சையாக வளர்கிறது. வீட்டுத் தோட்டத்திலும் வளர்ப்பதுண்டு. சிறகாக உடைந்த முள்ளுள்ள இலைகளையும், ஊதாநிறப் பூக்களையும், உருண்டையான பச்சை நிறக் காய்கள் சுண்டைக் காய் மாதிரி இருக்கும். சிவப்புப் பழங்களையும் வளைந்த முட்கள் நிறைந்த தண்டினையும் உடைய ஏறு கொடி. இது விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

4) பயன்படும் உறுப்புகள்: வேர் முதல் பழம் வரை எல்லா பாகமும்.

5) பயன்கள்: இதன் பயனை வள்ளளார் கூறும்போது “அறிவை விளக்குவதற்கும் கவன சக்தி உண்டு பண்ணுவதற்கும் கரணம் ஓய்வதற்கும் கபத்தை எரிப்பதற்கும் யோக்யதையுடைய ஒளஷதி தூதுவேளை தேகக் கெடுதியாகிய அசுத்தம் நீக்கி தேகம் வலிவுள்ளதாக நெடு நாளைக்கு இருக்கும். முக்தி அடைவதற்குச் சகாயமாயிருக்கும். மகான்களிடத்தில் அனந்த காலம் காத்திருந்தாலும் மேற்குறித்த மூலிகையின் பிரயோஜனத்தையும் உண்மையையும் அனுபவத்தையும் அவர்கள் வெளியிடமாட்டார்கள்”.

இலை கோழையகற்றும், உடல் தேற்றிக் காமம் பெருக்கும். பூ உடலுரமூட்டும் காமம் பெருக்கும். காய் கோழையகற்றிப் பசியைத் தூண்டி மலச்சிக்கல் அறுக்கும். பழம் கோழையகற்றும்.

தூதுவேளை இலையைப் பிழிந்து எடுத்து சாற்றை 1 அல்லது 2 துளி காதில் விட்டால் காதுவலி, காதில் சீழ் வடிதல் ஆகியவை குணமடையும்.

இலையை நெய்யில் வதக்கி துவையலாக குழம்பாகக் கடைந்தோ சாப்பிட கபக் கட்டு நீக்கி உடல் பலமும் அறிவுத் தெளிவும் உண்டாகும்.

இலைச் சாற்றை சம அளவு நெய்யில் காய்ச்சிக் காலை மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டுவர என்புருக்கிக் காசம் மார்புச் சளி நீங்கும்.

காயை உலர்த்தித் தயிர், உப்பு ஆகியவற்றில் பதப்படுத்தி எண்ணெயில் வறுத்து உண்டுவரப் பயித்தியம், இதய பலவீனம், மலச்சிக்கல் ஆகியவை நீங்கும்.

சமூலத்தை (வேர், இலை, பூ, காய்) 50 கிராம் அரை லிட்டர் நீரில் போட்டு நான்கில் ஒன்றாகக் காய்ச்சி காலை மாலை பருகி வர இரைப்பு, சுவாச காசச் சளி ஆகியவகை தீரும்.

ஆஸ்துமா மூச்சுத் திணறலில் பழத்தூளைப் புகைபிடிக்கச் சளி இளகி குணப்படும்.

நாள்தோறும் 10 பூவைக் காய்ச்சிப் பால், சர்க்கரைக் கூட்டி ஒரு மண்டலம் (45 நாட்கள்) பருக உடல் பலம், முக வசீகரம், அழகும் பெறலாம்.

தூதவேளை, கண்டங்கத்திரி, பற்படாகம், விஷ்ணுகாந்தி வகைக்கு ஒருபிடி ஒரு லிட்டர் நீரில் போட்டு 8-ல் ஒன்றாய் காய்ச்சி (தூதுவேளைக் குடிநீர்) ஒரு மணிக்கு ஒருமுறை 5 மி.லி முதல் 10 மி.லி வரை கொடுத்து வரக் கப வாதச் சுரம் (நிமோனியா) சன்னி வாதச் சுரம் (டைபாய்டு) குறையும்.

தூதுவேளை இலையில் ரசம் வைத்துச் சாப்பிடலாம். தூதுவேளை தோசை சாப்பிடலாம். தூதுவேளை கசாயம் குடிக்கலாம்.

தூதுவேளை, கண்டங்கத்திரி, திப்பிலி, இண்டு வேர் சேர்த்து 500 மி.லி தண்ணீர் ஊற்றி 100 மி.லி ஆக சுண்ட வைத்துச் சாப்பிட்டால் ஆஸ்துமா குணமடையும்.

தூதுவேளை உடல்வலிக் கோளாறு, நுரையீரல் கோளாறுகளைக் குணப்படுத்தும்.

Post a Comment

2 Comments

இது வரை நான் அறிந்திராத பலத்த தகவல்களை இந்த பதிவின் வாயிலாக அரிய தந்தமைக்கு நன்றி . இந்த இலையை பார்த்து இருக்கிறேன் . ஆனால் இதற்குள் இவளவு மருத்துவத் தன்மையா !? இன்றுதான் அறிந்துகொண்டேன் . பகிர்வுக்கு நன்றி
calmmen said…
மிக்க நன்றி ஷங்கர்