நிவாரண உதவி - புதுச்சேரிக்கு இன்று வருகிறார் விஜய்

தானே புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட புதுவை மாநில மக்களுக்கு உதவ இன்று புதுவை வருகிறார் நடிகர் விஜய்.

ஆரம்பத்திலிருந்தே புதுச்சேரி மீது தனி கவனம் செலுத்தி வருபவர் நடிகர் விஜய். தனது மக்கள் இயக்கத்தின் சார்பில் ஏற்கெனவே இங்குதான் முதலில் உதவிகளை வழங்கினார். புதுவை எம்எல்ஏ புஸ்ஸி ஆனந்த் இவரது ரசிகர் மன்றத் தலைவரும் கூட. எனவே புதுவைக்கு விஜய் தனி முக்கியத்துவம் தந்து வருகிறார்.

தானே புயலால் புதுவை பகுதி முழுவதும் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க நடிகர் விஜய் இன்று(சனிக்கிழமை) புதுவை வருகிறார்.

புதுவை சுப்பையா சாலையில் குபேர் திருமண மண்டபம் அருகே காலை 9 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரிசி, உடை, பாத்திரங்கள் உள்ளிட்டவற்றை வழங்குகிறார்.

நிகழ்ச்சிக்கு அகில இந்திய விஜய் ரசிகர் மன்ற தலைவர் புஸ்சி ஆனந்து தலைமை தாங்குகிறார். நிகழ்ச்சியில் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்கிறார்கள்.

Post a Comment

0 Comments