ரஜினி ரூ 25 லட்சம் நிதியுதவி பழைய பள்ளியின் சீரமைப்புக்கு

பெங்களூரில் தான் படித்த பழைய பள்ளிக்கூடத்துக்கு ரூ 25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார் ரஜினிகாந்த்.

பெங்களூரில் கெம்பே கவுடா நகரில் உள்ள கவிபுரம் அரசு கன்னட மாதிரி தொடக்கப்பள்ளி. இந்த பள்ளியில்தான் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் 1954 முதல் 1959 வரை கல்வி கற்றார்.

தற்போது 300 மாணவ, மாணவிகள் படித்து வரும் இந்தப் பள்ளி இப்போது மிக மோசமான நிலையில் உள்ளது. 

இந்த பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட அரசு ரூ.86 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால், இன்னும் பணிகள் தொடங்கவில்லை.

இதனிடையே, இப்பள்ளியின் கட்டுமான பணிகளுக்கு நிதி உதவி அளிக்கவேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்துக்கு கர்நாடக மாநில ரஜினி சேவா சமிதி கோரிக்கை விடுத்தது.

இதை தொடர்ந்து ரூ.25 லட்சம் நன்கொடை அளிக்க ரஜினிகாந்த் ஒப்புக்கொண்டுள்ளார். கட்டுமானப் பணிகள் தொடங்கியவுடன், இந்த தொகையை அனுப்பி வைப்பதாக ரஜினிகாந்த் உறுதி அளித்துள்ளார்.

பள்ளியின் பழைய கட்டிடத்தை இடிக்கும் பணியை ஜனவரி 1-ந்தேதி தொடங்க வேண்டும். இல்லையெனில், முதல்வர் வீட்டு முன்பு தர்ணா போராட்டம் நடத்துவோம் என்று ரஜினி சேவா சமிதி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுபற்றி சமிதியின் தலைவர் முருகன் கூறுகையில், "பள்ளி விவகாரத்தில் உடனடியாக கவனிக்குமாறு உள்ளூர் எம்.எல்.ஏ. மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோரை சந்தித்து முறையிட்டுள்ளோம். முதல்வரைச் சந்திக்க இருக்கிறோம்.

ரஜினியின் பிறந்தநாளை ஆண்டுதோறும் இந்த பள்ளியில்தான் கொண்டாடி வருகிறோம். பள்ளி கட்டிடத்தின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. எனவே, ஜனவரி 1-ந்தேதி பழைய கட்டிடத்தை இடிக்கும் வேலையை தொடங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளோம். இல்லையெனில் முதல்வர் வீட்டு முன்பு தர்ணா போராட்டம் நடத்துவோம்.

இந்த பள்ளிக்கு ரஜினிகாந்த் ரூ.25 லட்சம் நன் கொடை அளிப்பதாக உறுதி கூறியுள்ளார். பள்ளிக்கு கம்ப்யூட்டர் வாங்கவும், நூலகம் அமைக்கவும் இந்த தொகை பயன்படுத்தப்படும்," என்றார்.

Post a Comment

0 Comments