அயோத்தி பிரச்சினை கடந்து வந்த பாதை


அயோத்தியில் பாபர் மசூதி இருந்த சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக இந்துக்களும் முஸ்லீம்களுக்கும் இடையே தொடர்ந்து மொதல்கள் நடைபெற்று இருக்கின்றன. இந்த சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக கடந்த 500 ஆண்டுகளில் நடைபெற்ற முக்கிய சம்பவங்களின் பட்டியல்.

1528: இந்துக்களின் மிக முக்கியமான கடவுளான ராமர் பிறந்த இடம் என்று இந்துக்களில் ஒரு சாராரால் கருதப்படும் இடத்தில் மசூதி கட்டப்படுகிறது.

1853: இந்த இடத்தில் முதல் முறையாக மதக் கலவரம் ஏற்படுகிறது.

1859: இந்த பிரச்சனையில் தலையிட்ட பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்கள் மசூதியின் உள் மண்டபத்தை முஸ்லீம்கள் வழிபாட்டுக்குப் பயன்படுத்தவும், வெளி மண்டபத்தில் இந்துக்கள் வழிபாடுசெய்யவும் வழிவகைசெய்தனர். இதை அமல் படுத்தும் வகையில் அங்கே வேலியை அவர்கள் அமைத்தனர்.

1949: ராமர் சிலைகள் மசூதிக்குள் கொண்டுவந்து வைக்கப்படுகின்றன. இதை இந்துக்கள் செய்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. இதை முஸ்லீம்கள் எதிர்த்தனர். இதையடுத்து இரு தரப்பும் சிவில் வழக்கை நீதிமன்றத்தில் தொடுக்கின்றனர். இவ்விடயத்தில் தலையிட்ட இந்திய அரசு சம்மந்தப்பட்ட இடத்தை சர்ச்சைக்குரிய இடமாக அறிவித்து அந்த இடத்தின் கதவுகளை மூடுகிறது.

1984: இந்த இடம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போதே விஸ்வ இந்து பரிஷத் இந்த இடத்தை விடுவித்து அங்கு இராமருக்கு கோயிலை கட்டப் போவதாக அறிவித்தது. பாரதீய ஜனதா கட்சியின் தலைவரான எல் கே அத்வானி இராமர் கோயில் கட்டுவதற்காக நாடு தழுவிய பிரச்சாரங்களை மேற்கொண்டார்.

1986: மாவட்ட நீதிபதி சர்சைக்குரிய கட்டிடத்தின் பூட்டுக்கள் திறக்கப்பட வேண்டும் என்றும் அங்கு இந்துக்கள் பிரார்த்தனை செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் உத்திரவிட்டார். இதற்கு எதிர்வினையாக முஸ்லீம்கள் பாப்ரி மசூதி நடவடிக்கை குழுவை ஆரம்பித்தனர்.

1989: விஸ்வ இந்து பரிஷத் சர்ச்சைக்குரிய மசூதிக்கு அடுத்த பகுதியில் ராமர் கோயிலுக்கான அடிக்கல்லை நட்டது.

1990: வி எச் பியினர் மசூதியின் சில பகுதிகளை நாசம் செய்தனர். இதன் பிறகு அப்போதைய பிரமர் சந்திரசேகர் இரு தரப்பையும் அழைத்து சமரசம் செய்ய மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

1991: அயோத்தி அமைந்துள்ள உத்திரப்பிரதேச மாநிலத்தில் பாரதீய ஐனதா கட்சி ஆட்சியைப் பிடிக்கிறது.

1992: பாரதீய ஜனதா, விஸ்வ இந்து பரிஷ்த், சிவசேனா போன்ற அமைப்புக்களின் தொண்டர்களால் மசூதி இடித்துத்த தள்ளப்படுகிறது. இதையெட்டி எழுந்த மத மோதல்களில் இரண்டாயிரம் பேர் உயிரிழக்கின்றனர்.

1998: பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி இந்திய நடுவணரசில் ஆட்சியைப் பிடித்த நிலையில மீண்டும் ராமர் கோயில் பிரச்சனையை விஸ்வ இந்து பரிஷ்த் கையெலெடுக்கிறது. அன்றைய பிரதமர் வாஜ்பாய் நடிகரும் நாடாளுமன்ற உறுப்பனருமான சத்ருகன் சின்ஹா தலைமையில் அயோத்யா பிரிவை ஆரம்பிக்கிறார்.

2002: உத்திரப் பிரதேச மாநில சட்டசபைக்கான தேர்தல் நடக்கும் போது - அயோத்தியில் கோயில் கட்டுவது குறித்து உறுதியான உத்திரவாதங்களை அளிக்க பாரதீய ஜனதா கட்சி மறுக்கிறது.

2003: இந்த வழக்கில் முதன்மை மனுதாரர்களில் ஒருவரான ராமச்சந்திர பரமஹம்ஸ் என்பவரின் மரணச் சடங்குகளில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் வாஜ்பாய் அயோத்தியில் கோயில் கட்டப்படும் என்கிறார். நீதிமன்ற உத்திரவு மூலமாகவோ, அல்லது பேச்சுவார்த்தை மூலமாகவோ இதற்கு தீர்வு கிடைக்கும் என்றும் வாஜ்பாய் நம்பிக்கை வெளியிட்டார். மசூதி இடிக்கப்பட்டு 11 ஆண்டுகள் கடந்த நிலையில் அதற்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று ஒரு நீதிமன்றம் தீர்பளிக்கிறது. இருந்தும் அப்போது துணைப் பிரதமராக இருந்த அத்வானி மீது வழக்கு ஏதும் பதிவுசெய்யப்படவில்லை.

2005: சர்ச்சைக்குரிய இடத்தை இஸ்லாமிய தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படுவோர் தாக்குகின்றனர். பாதுகாப்புப் படையினர் திரும்ப தாக்கியதில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

2009: பாபர் மசூதி இடிப்பு தொடர்பான லிபர்ஹான் கமிஷனின் அறிக்கை 17 ஆண்டுகளுக்குப் பிறகு தாக்கல் செய்யப்படுகிறது. மசூதி உடைக்கப்பட்டதற்காக பாஜக தலைவர்கள் மீது அது குற்றம்சாட்டுகிறது.

2010: பல ஆண்டுகால சட்ட சிக்கல்களுக்குப் பிறகு அலஹாபாத் நீதிமன்றத் தீர்ப்பு வந்துள்ளது.

"அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தை மூன்றாக பிரித்து, வழக்கில் சம்பந்தப்பட்ட மூவருக்கு, ஆளுக்கு ஒரு பங்கு வீதம் பிரித்துக் கொடுக்க வேண்டும்' என, அலகாபாத் ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. மூன்றில் ஒரு பங்கு இந்துக்களுக்கும், இன்னொரு பங்கு முஸ்லிம்களுக்கு, மூன்றாவது பங்கு, "நிர்மோகி அகாரா' அமைப்புக்கு வழங்க வேண்டும். பகிர்வு செய்யும் பணியை மூன்று மாதங்களில் துவக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக இழுத்தடித்த அயோத்தி வழக்கின் தீர்ப்பை, நாடே அதிக எதிர்பார்ப்புகளுடனும், பரபரப்புடனும் எதிர்பார்த்தது. நாட்டின் ஒட்டுமொத்த பார்வையும், நேற்று லக்னோவை நோக்கியே இருந்தது. நீதிபதிகள் தரம்வீர் சர்மா, சுதிர் அகர்வால் மற்றும் சிப்காட் உல்லா கான் ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ பெஞ்ச் நேற்று தீர்ப்பு வழங்கியது. நேற்று மதியம் 3.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படுவதாக இருந்தது. வழக்கில் சம்பந்தப்பட்டவர்களின் சார்பாக ஆஜரான வக்கீல்கள் 20க்கும் மேற்பட்டோர், கோர்ட்டிலிருந்து வெளியே வந்து லக்னோ கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த மீடியா சென்டரில் பேட்டியளித்தனர். பரபரப்பும், பதட்டமாக இருந்த சூழ்நிலையில் வக்கீல்கள் தாங்கள் எடுத்துரைத்த வாதங்களை விளக்கி, அதற்கு நீதிபதிகள் தெரிவித்த கருத்துக்களை கூறும்போதே, தீர்ப்பின் சாராம்சம் கொஞ்சம் கொஞ்சமாக தெரியவந்தது. ஒவ்வொரு நீதிபதியும் தனித்தனி தீர்ப்பு வெளியிட்ட போதும், நீதிபதிகள் சிப்காட் உல்லா கான் மற்றும் சுதிர் அகர்வால் ஆகியோர் கூறிய தீர்ப்பில், "இன்று ராமர் சிலை வழிபடும் இடம் இந்துக்களுக்கு சொந்தம்' என்று குறிப்பிட்டனர்.

இந்த தீர்ப்பில் கூறியதாவது: அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.7 ஏக்கர் இடத்தை, மூன்று பாகமாக பிரித்து, ஒரு பாகத்தை, "நிர்மோகி அகாரா' என்ற அயோத்தியில் நீண்டகாலமாக உள்ள சாமியார்கள் அடங்கிய குழுவுக்கும், இன்னொரு பங்கை சன்னி வக்பு வாரியத்திற்கும் (முஸ்லிம்), மற்றொரு பங்கை, "ராம் லாலா விராஜ்மான்' என்ற ராமர் சிலை வழிபடும் இடத்தை வைத்திருப்பவர்களுக்கும் வழங்க வேண்டும். இடத்தை பிரித்து அளிக்கும்போது, தற்போது ராமர் சிலை உள்ள இடத்தையே இந்துக்களுக்கு ஒதுக்கவேண்டும். இடத்தை பகிர்வு செய்யும் பணியை மூன்று மாதங்கள் கழித்தே துவக்க வேண்டும். அதுவரை இப்போதுள்ள நிலையே தொடர வேண்டும். பிரச்னைக்குரிய இடம், ராமர் பிறந்த ஜென்மபூமி என்று நீதிபதிகள் மூவரும் தெரிவித்துள்ளனர்.

நீதிபதிகளின் தீர்ப்பை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர். அதே சமயம் சன்னி வக்பு போர்டும், இந்த வழக்கில் தொடர்புடைய இந்துமகா சபையும், சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப் போவதாக அறிவித்தன. நாடு முழுவதும் அமைதி காக்க பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்திருக்கிறார். எல்லா அரசியல் கட்சிகளும் மக்கள் அமைதி வாழ்க்கைக்கு உதவ ஒத்துழைப்பு தர முன்வந்துள்ளன.


courtesy.bbc,dinamalar

Post a Comment

0 Comments