ரேஷன் கார்டு புதுப்பிப்பு மார்ச் 31 வரை நீட்டிப்பு; ஆன்லைனிலும் புதுப்பிக்கும் வசதி

தமிழகத்தில் குடும்ப அட்டைகளை புதுப்பிப்பதற்கான கால அவகாசம், மார்ச் 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஆன்-லைனிலேயே குடும்ப அட்டைகளை புதுப்பிக்க, தமிழக அரசு வகை செய்துள்ளது.  

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலத்தை 01.01.2012 முதல் 31.12.2012 வரை ஓராண்டுக்கு நீட்டிக்க, தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். 
இந்த உத்தரவின்படி புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளில் வருடம் குறிப்பிடாமல் உள்ள கூடுதல்தாளின் மேற் பகுதியில் 2012 என்று முத்திரையிட்டு செல்லத்தக்கதாக அறிவிக்கப்பட்டது.

புதுப்பிப்பதற்கான கால அவகாசம் 28.02.2012 வரை அளிக்கப்பட்டது 1,97,70,682 குடும்ப அட்டைகளில் இதுவரை 1,86,58,768 குடும்ப அட்டைகள் நியாய விலைக் கடைகளில் புதுப்பிக்கப்பட்டுள்ளன. மேலும் கால நீட்டிப்பு வேண்டுமென்று கேட்டு பொது மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. இதனை கனிவுடன் பரிசீலித்த அரசு, மேலும் ஒரு மாத காலத்துக்கு - அதாவது 31.03.2012 வரை நீட்டிக்க உத்தரவிட்டுள்ளது. 

இதன்படி இருப்பிட ஆதாரமாக வழங்கப்பட்டுள்ள வெள்ளை மற்றும் மஞ்சள் நிற தட்கல் குடும்ப அட்டை வைத்திருப்போர் மற்றும் அரிசி, சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைகள் வைத்துள்ள உடல்நல குறைவு காரணமாக நடக்க இயலாதோர், வயது முதிர்வு காரணமாக நியாய விலைக் கடைக்கு வர இயலாத குடும்ப அட்டைதாரர்கள், 

புனிதப் பயணம் மற்றும் மதம் சார்ந்த உள்ளிருப்பு விரதம் மேற்கொண்டுள்ளோர் மற்றும் புதுப்பித்தல் நடைபெற்ற காலத்தில் தற்காலிகமாக வெளியூர் சென்றவர்கள் ஆகியோர் பயனடையும் வகையில் அவர்களது குடும்ப அட்டைகளை ஆன்-லைன் முறையில் புதுப்பித்துக் கொள்ள இணையதள வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, http://210.212.62.90:8080/newfcp/cardvalidity.do என்ற இணைய தள முகவரிக்கு சென்று புதுப்பித்துக் கொள்ளலாம். 

இதில் ரேஷன் பொருள் வேண்டுவோர் 2012 ஆண்டுக்கான கால நீட்டிப்பு தாளின் இரண்டு நகல்களை எடுத்துக் கொண்டு ஒரு நகலை குடும்ப அட்டையில் ஒட்டிக் கொண்டும், மற்றொரு நகலை உரிய கடைக்காரரிடம் அளித்து ரேஷன் பொருட்களை தொடர்ந்து பெற்றுக் கொள்ளலாம். 

ரேஷன் பொருள் வேண்டாதோர் மற்றும் இருப்பிட சான்றாக மட்டுமே வைத்துக் கொண்டுள்ளவர்கள் இணையதளத்தில் உள்ள 2012 ஆண்டுக்கான கால நீட்டிப்பு தாளின் ஒரு நகலை அவர்களுடைய குடும்ப அட்டையில் ஒட்டிக் கொண்டால் மட்டும் போதுமானது.  இணையதள வசதி 01.03.2012 முதல் 31.03.2012 வரையில் நடைமுறையில் இருக்கும். 

இந்த வசதியை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் கேட்டுக் கொண்டுள்ளார் என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


source.vikadan

Post a Comment

0 Comments