ஏர்டெல் நிறுவனம் மீது அன்னிய செலாவணி மோசடி வழக்கு

 தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனம் மீது அன்னிய செலாவணி வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலமாகப் பதிலளித்த பழனிமாணிக்கம், அந்நிய செலவாணி மேலாண்மை சட்டம் மற்றும் பணமோசடி தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குகளை விசாரித்து வரும் அமலாக்கப் பிரிவு பார்தி ஏர்டெல் நிறுவனத்தையும் தனது விசாரணைக்கு உட்படுத்தியுள்ளது என்றார்.

மேலும் தற்போது விசாரணை நடைபெற்று வருவதால் கூடுதல் தகவல்களைத் தெரிவிக்க இயலாது என்றும் பழனிமாணிக்கம் தெரிவித்தார்.

இந்தியாவின் மிகப் பெரிய தொலைத் தொடர்பு நிறுவனங்களில் பார்தி ஏர்டெல் நிறுவனமும் ஒன்று. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தொலைத்தொடர்புத் துறை சேவையை இந்நிறுவனம் வழங்கி வருகிறது.

Post a Comment

0 Comments