ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களைப் பற்றி அவர்களே அதிகாரப்பூர்வமான தகவலை அறிவிக்கும் முன்பு அப்படங்களைப் பற்றிய ஏகப்பட்ட தகவல்கள் வெளியாவதும், அது சில நேரங்களில் சரியாகவும், பல சமயங்களில் “ஜக்கம்மா சொல்றா…” என்பது போல குறியாகவும் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு செய்தி தற்போது கோடம்பாக்கத்தை குஷியில் ஆழ்த்தியிருக்கிறது. (தொழிலாளர்கள், தயாரிப்பாளர்கள் பிரச்சனை ஒரு பக்கம் இருக்கட்டும். இது ரசிகர்களை குஷிப்படுத்தும் செய்தி.)
கமல், தனது விஸ்வரூபம் படத்திற்குப் பிறகு ஷங்கர் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறாராம். இப்படத்திற்கான பேச்சி வார்த்தைக்கான அடித்தளத்தை போட்டுக்கொடுத்திருப்பவர் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் தானாம். இதுவரை தமிழ்ப் படங்கள் காணாத பிரமாண்டபத்தையும், பொருட்ச்செலவையும் இப்படம் காணவேண்டும் என்ற வெறியோடு களம் இறங்கியிருக்கும் ஆஸ்கார் ரவிச்சந்திரன், இப்படத்தில் கமலுடன் ஜாக்கி சானையும் நடிக்க வைக்க வெறியோடு இருக்கிறாராம்.
ஆஸ்கார் ரவிச்சந்திரனுக்கும், ஜாக்கி சானுக்கும் உள்ள நெருக்கத்தைப் பற்றி சீனாவும், தமிழகமும் நன்கு அறியும். அதே போல தசாவதாரம் படத்தின் மூலம் கமலுக்கும் ஜாக்கி நெருக்கமாக ஆகியிருக்கிறார். இந்த நெருக்கங்களால் ஜாக்கி சானும் கமலுடன் நடிக்க ஒப்புக்கொண்டாராம்.
கமல் ரசிகர்கள் மட்டுமின்றி அத்தனை சினிமா ரசிகர்களையும் குஷியாக்கும் இந்த தகவல், ஜக்கம்மாவின் குறியாக இல்லாமல் இருந்தால் சந்தோஷம் தான்.
1 Comments