மாற்றுத்திறனாளி பெண் ஒருவரை பயணம் செய்ய அனுமதி அளிக்காத ஸ்பைஸ்ஜெட் விமானி

 கொல்கத்தாவில் இருந்து கோவா புறப்பட்ட மாற்றுத்திறனாளி பெண் ஒருவரை பயணம் செய்ய அனுமதி அளிக்காத ஸ்பைஸ்ஜெட் விமானி மனிதநேயமே இல்லாமல் நடந்து கொண்டு அவரை கீழே இறக்கி விட்டார்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் ஜீஜா கோஷ் (42). மன நலன் குன்றியவர். அவர் கொல்கத்தாவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் செரிபரல் பால்ஸியில் சிறப்பு ஆசிரியையாக பணிபுரிகிறார். அவர் நேற்று கொல்கத்தாவில் இருந்து கோவா செல்ல ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் ஏறினார். ஆனால் அவரை பயணம் செய்ய அனுமதிக்க முடியாது என்று கூறி விமானி அவரை கீழே இறக்கி விட்டார்.

சக பயணிகளும், இவரும் பலமுறை கெஞ்சியும் கூட அந்த விமானி மனம் இறங்காமல் நடந்து கொண்டுள்ளார்.

கோஷ் இங்கிலாந்தில் படித்த காலத்தில் அவர் தனியாகத் தான் வாழ்ந்துள்ளார். அப்படி இருக்கையில் இங்கே தனியாக பயணம் செய்ய அனுமதிக்காததால் அவர் ஆத்திரம் அடைந்தார். அவர் இந்தியாவுக்குள்ளும் சரி, வெளிநாடுகளுக்கும் சரி தனியாக விமானத்தில் பலமுறை பயணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அவர் கூறியதாவது,

என்னை கீழே இறக்கிவிட்டவருக்கு விமானியாக இருக்கும் தகுதியே இல்லை. நான் எவ்வளவோ கூறியும், அவர் என்னை விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கவில்லை என்றார்.

தனக்கு நேர்ந்தது தனக்கு மட்டுமல்ல தன்னைப் போன்ற அனைவரையுமே அவமதிப்பது போன்றாகும் என்றும், அதனால் அந்த விமானி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் புகார் கொடுத்துள்ளார்.

இதையடுத்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் நடந்த சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்டதுடன் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளது.

ஏற்கனவே இதுபோல பல சம்பவங்கள் இந்தியாவில் நடந்துள்ளன. நடிகர் பிருத்விராஜ் என்கிற பப்லுவின் மன நலம் குன்றிய மகனை பெங்களூர் விமான நிலையத்தில் இப்படித்தான் அநாகரீகமாக நடத்தினார்கள் என்பது நினைவிருக்கலாம். இப்போது இப்படி நடந்துள்ளது.

Post a Comment

0 Comments