ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுடன் ஜெ. திடீர் ஆலோசனை

முதல்வர் ஜெயலலிதா தனது போயஸ் தோட்ட இல்லத்தில் வைத்து முக்கிய ஐஏஎஸ், ஐபிஎஷ் அதிகாரிகளுடன் திடீர் ஆலோசனை நடத்தினார். சசிகலாவுக்கு ஆதரவாக செயல்படுவோருக்கு அப்போது அவர் கடும் எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.

ஜெயலலிதா வீட்டை விட்டும், அவரது நட்பு வட்டத்தை விட்டும் சசிகலாவும், அவரது குடும்பத்தினரும் பூண்டோடு துரத்தப்பட்டு விட்டனர். இதனால் அதிமுகவினர் பெரும் உற்சாகமடைந்தனர். இதைத்தானே அம்மா இத்தனை காலமாக எதிர்பார்த்தோம் என்று அவர்கள் பூரிப்படைந்துள்ளனர்.

இந்த நிலையில் அடுத்து சசிகலாவுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகள் உள்ளிட்டோரை களையெடுக்கும் வேலையில் ஜெயலலிதா இறங்கவுள்ளதாக கூறப்படுகிறது. பெருமளவில் சசிகலாவுக்கு ஆதரவான அதிகாரிகள் அரசின் அனைத்து மட்டத்திலும் நிரம்பியுள்ளன். இவர்களையெல்லாம் களையெடுத்து ஆட்சி நிர்வாகத்தை சீரமைக்க ஜெயலலிதா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று முழுவதும் ஜெயலலிதா தனது போயஸ் தோட்ட வீட்டிலேயே தங்கி அதிகாரிகளுடன் பல கட்டமாக முக்கிய ஆலோசனைகளை நடத்தியுள்ளார். தலைமைச் செயலாளர் தேவேந்திர நாத் சாரங்கி, டிஜிபி ராமானுஜம், உளவுத்துறை ஐஜி தாமரைக்கண்ணன் உள்ளிட்டோர் இதில் முக்கியமாக கலந்து கொண்டனர்.

பல முன்னாள் அதிகாரிகளும், முன்னாள் டிஜிபி உள்ளிட்டோரும் முதல்வரைச் சந்தித்து ஆலோசனை நடத்தினர். திமுக ஆட்சிக்காலத்தில் முக்கிய அதிகாரியாக செயல்பட்டு வந்த இறையன்புவும் முதல்வரைச் சந்தித்துப் பேசியதை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. தற்போது இவர் பணியாளர் சீர்திருத்தத் துறை செயலாளராக இருக்கிறார். இறையன்புவுக்கு முக்கியப் பொறுப்பை ஜெயலலிதா கொடுக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேர்மையான அதிகாரியாக அறியப்படுபவர் இறையன்பு என்பது நினைவிருக்கலாம்.

இவர்கள் தவிர முக்கிய அமைச்சர்களும் கூட ஜெயலலிதாவை சந்தித்து ஆலோசனை பெற்றனர். த ஆலோசனைகளின்போது சசிகலா மற்றும் அவரைச் சேர்ந்தவர்களின் நிழலைக் கூட அண்ட விடாதீர்கள் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டதாக தெரிகிறது. மேலும் சசிகலாவுக்கு ஆதரவாக யாரும் செயல்படக் கூடாது என்று எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து விரைவில் பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

Post a Comment

0 Comments