அரசு பள்ளிகளில் புதிதாக 8462 ஆசிரியர் பணியிடங்கள்

தமிழகம் முழுவதும் 8,462 ஆசிரியர் பணியிடங்களை கூடுதலாக உருவாக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

மேலும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இரண்டாம் சுழற்சி முறை வகுப்புகளை நடத்துவதற்காக 2011-12 ஆண்டுக்கு நியமிக்கப்பட்ட 1,661 கௌரவ விரிவுரையாளர்களுக்கான தொகுப்பூதியத்தில் ரூ.4 ஆயிரத்தை உயர்த்தியும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு, 1:40 என்ற ஆசிரியர் - மாணவர் விகிதாசாரப்படி, நடப்பு கல்வியாண்டில் அனைவருக்கும் இடைக்கல்வி திட்டத்தின் கீழ் கூடுதலாக 6,752 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களையும், மேலும், கூடுதலாக தேவைப்படும் 120 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களையும் சேர்த்து ஆக மொத்தம் 6,872 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவிக்க ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால், அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு 181 கோடியே 36 லட்சம் ரூபாய் செலவாகும்.

இதுமட்டுமல்லாமல், அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கைக்கு தக்கவாறு 1:40 என்ற ஆசிரியர் - மாணவர் விகிதாச்சாரப்படி, கூடுதலாக 1,590 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவிக்கவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதற்காக அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு 45 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவாகும்.

மாணவர்களின் கல்வித் தரத்தினை உயர்த்தி அவர்களை வருங்காலத்தில் நல்ல குடிமக்களாக உயர்த்த பாடுபடும் ஆசிரியர்களின் நலன் காக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் அடிப்படையில், தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற 3,137 தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு அவர்கள் 1.6.1988க்கு முன்பு பணியாற்றிய இடைநிலை ஆசிரியர் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணிக்காலத்தை 1.6.1988க்குப் பிறகு பணிபுரிந்த பணிக்காலத்துடன் சேர்த்து தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் தேர்வுநிலை/ சிறப்பு நிலை அனுமதித்து ஊதியம் நிர்ணயம் செய்ய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால் அரசுக்கு 24 கோடியே 25 லட்சத்து 44 ஆயிரத்து 210 ரூபாய் செலவு ஏற்படும்.

கெளரவ விரிவுரையாளர்கள் தொகுப்பூதியம் உயர்வு..

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இரண்டாம் சுழற்சி முறை வகுப்புகளை நடத்துவதற்காக 2011-12 ஆண்டிற்கு 1,661 கௌரவ விரிவுரையாளர்கள் 6,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர். அவர்களது கல்வித் தகுதி மற்றும் பணித்தன்மையைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தொகுப்பூதியத்தினை 6,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக உயர்த்தி வழங்க முதல்வர் ஜெயலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு கூடுதலாக 8 கோடி ரூபாய் செலவு ஏற்படும்.

அரசின் இந்த நடவடிக்கைகள் மூலம், மாணவர்கள் தரமான கல்வியைப் பெற தகுந்த ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவதுடன், தகுதியானோர் ஆசிரியர் பணி பெறவும் இது ஒரு வாய்ப்பாக அமையும் என்று அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசு பள்ளிகளில் புதிதாக 8462 ஆசிரியர் பணியிடங்கள்!

Post a Comment

0 Comments