தமிழகத்தில் சிறந்த விவசாயிக்கு ரூ.5 லட்சம் பரிசு!

வேளாண்மை வளர்ச்சி நவீன தொழில் நுட்பங்களைச் சார்ந்துள்ளதால், வேளாண் உற்பத்தியைப் பெருக்க, பல்வேறு நவீன தொழில் நுட்பங்களை புகுத்த வேண்டியது மிகவும் அவசியம் என்பதால், முதல்வர் ஜெயலலிதா, தமிழ்நாட்டில் புதிய தொழில் நுட்பத்தை புகுத்தி, இரண்டாம் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டு வருகிறார்கள். 

தற்பொழுது நவீன தொழில் நுட்பத்துடன் அமல்படுத்தப்படும் பல்வேறு சாகுபடி முறைகளில் திருந்திய நெல் சாகுபடி முறையே, உணவு உற்பத்தியை அதிகரிக்கச் செய்ய சிறந்த முறையாகும்.

இம்முறைக்கு அதிக ஊக்கம் அளிக்கும் வகையில், திருந்திய நெல் சாகுபடி தொழில் நுட்பத்தினை கடைப்பிடித்து, மாநிலத்திலேயே அதிக விளைச்சலைப் பெறும் விவசாயிக்கு, ஒவ்வோர் ஆண்டும் சிறப்புப் பரிசுத் தொகையாக 5 லட்சம் ரூபாயும், 3,500 ரூபாய் மதிப்புடைய பதக்கமும், குடியரசு தினத்தன்று வழங்குவதற்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இப்பரிசு முதல்வர் அவர்களால் வழங்கப்படும்.

இப்போட்டியில் பங்கு பெறும் விவசாயி, குறைந்த பட்சம் 50 சென்ட் நிலத்தில் பயிர் செய்திருக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு, குறைந்தபட்ச விளைச்சல் 2,500 கிலோ இருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் இந்தப் போட்டி நடத்தப்படும். இப்போட்டி சென்னை, நீலகிரி தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும்.

முதல்வர் ஜெயலலிதா அவர்களின் இந்த நடவடிக்கையினால், விவசாயிகளிடையே வேளாண்மையில் புதிய தொழில் நுட்பங்களை புகுத்துவதில் அதிக ஆர்வமும், போட்டியும் ஏற்படும். இதன் மூலம் குறைந்த நிலத்தில் அதிக அளவு உற்பத்தி பெருக வழிவகை ஏற்படும் என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது

Post a Comment

1 Comments

moonramkonam said…
அருமை நண்பரே