2வது இடத்திற்குப் போன 'சன்' நியூஸ்


 சன் டிவி குழும வரலாற்றிலேயே முதல் முறையாக அந்த நிறுவனத்தின் சானல் ஒன்று, 2வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. 

தூர்தர்ஷன் மட்டுமே இருந்து வந்த காலத்தில் மக்கள் விடிவு தேடி அலைந்தபோது விடிவெள்ளியாக வந்தது சன் டிவி. சன் டிவியின் புதுமையான மற்றும் புதுப் பொலிவுடன் கூடிய, வித்தியாசமான நிகழ்ச்சிகள் மக்கள் மனதை சட்டென்று கவர்ந்தன. அன்று முதல் இந்த நிமிடம் வரை தமிழ் மக்களின் ஏகோபித்த வரவேற்புக்குரிய தொலைக்காட்சியாக சன் டிவி விளங்கி வருகிறது.

தொடர்ந்து முதலிடத்திலேயே சன் குழுமத்தின் சானல்கள் அத்தனையும் இருந்து வருவது உண்மையிலேயே மிகப் பெரிய சாதனையாக கருதப்படுகிறது. நிகழ்ச்சிகளை வழங்கும் விதம், துல்லியம், மக்கள் மனதைப் படித்து அதற்கேற்ப நிகழ்ச்சிகளை வழங்குவது, அனைவரிடமிருந்தும் தனித்துவத்துடன் தனித்து நிற்பது என பல பிளஸ் பாயிண்டுகள் இதற்குக் காரணம்.

ஆனால் முதல் முறையாக சன் நியூஸ் சானல் 2வது இடத்திற்குப் போயுள்ளது. அதுவும் நேற்று புதிதாக பிறந்த புதிய தலைமுறை சானல், சன் நியூஸ் சானலை முந்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து புதிய தலைமுறை தரப்பில் கூறுகையில், தொலைக்காட்சி பார்வையாளர்களை கணக்கிடும் ஏசி நீல்சன் நிறுவனத்தின் TAM கணக்கீட்டின்படி, தமிழகத்தில் கடந்த 8 வாரங்களாக முன்னேறி, சென்ற வாரம் ஜிஆர்பி எனப்படும் மொத்த மதிப்பீட்டுப் புள்ளிகளில் 35.94 என்ற அளவை புதிய தலைமுறை எட்டி, முதலிடத்தைப் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சன் நியூஸ் சானலுக்கு 31.24 புள்ளிகள் கிடைத்துள்ளனவாம். ஜெயா பிளஸ் 3வது இடத்திலும், கலைஞர் செய்திகள் 4வது இடத்திலும், ராஜ் நியூஸ் 5வது இடத்திலும், என்டிடிவி ஹி்ண்டு 6வது இடத்திலும் உள்ளன.

புதிய தலைமுறை செய்தி சானல் சமீபத்தில்தான் தொடங்கப்பட்டது. சன் நியூஸுக்குக் கடும் போட்டியைக் கொடுக்கும வகையில் உருவெடுத்துள்ள இந்த சானல் காரணமாக சன் நியூஸிலும் கூட பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. முன்னிலும் விறுவிறுப்பான முறையில் செய்திகளை கொடுக்க ஆரம்பித்தது சன் நியூஸ். இருப்பினும் தற்போது முதலிடத்தை அது தவற விட்டுள்ளது.

Post a Comment

0 Comments