சூர்யாவுடன் ஒரு கலக்கல் பேட்டி




'' 'கஜினி’ சமயம் இருந்த சூர்யாவோ, ஏ.ஆர்.முருகதாஸோ இப்ப இல்லை... எப்படி இருந்தது 'ஏழாம் அறிவு’ மேக்கிங்?''
''ஒவ்வொரு டைரக்டரும் ஒவ்வொரு விதத்தில் ஸ்பெஷல். ஒருத்தர் புதுப் புது டெக்னிக்கை ஸ்க்ரீனில் கொண்டுவருவதில் வித்தை காட்டுவார். சிலர் தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்தணும்னு பிடிவாதமா இருப்பாங்க. இன்னும் சிலர் பி அண்ட் சி சென்டர் வரை இறங்கி அடிக்கணும்னு பரபரப்பாங்க.  முருகதாஸ் கதை சொல்வதில் அசத்துவார். பெண்களுக்கும் பிடிக்கிற மாதிரி சினிமா செய்வார். மூணு அக்காக்களோடு பிறந்து கதை கதையாக் கேட்டு வளர்ந்த மனுஷன். 'ஏழாம் அறிவு’ எங்க ரெண்டு பேரையும் அடுத்த எனர்ஜி லெவலுக்கு எடுத்துட்டுப் போயிருக்கு. ஒரு சினிமா தியேட்டரைவிட்டு வெளியே வந்த பிறகும் மனசுல நிக்கணும்.
ஒரு நாள் நானும் ஜோவும் ஒரு ஹோட்டல்ல சாப்பிட்டுட்டு இருந்தோம். தயங்கித் தயங்கிப் பக்கத்தில் வந்தார் ஒரு இளைஞர். 'கஜினி’  படத்தில் 'நிமிர்ந்து நில், நேராப் பாரு, இஷ்டப்பட்டு வேலை செய், கஷ்டப் பட்டு வேலை செய்யாதே’னு நீங்க சொன்னதைக் கேட்டப்போ எனக்குள்ள ஏதோ ஒரு வேகம் உண்டாச்சு. நான் அப்புறம் என்னையே மாத்தி வடிவமைச்சு, இப்போ வேற  உயரத்துக்கு வந்துட்டேன்’னு சொன்னார். ஒரு சினிமா பார்வையாளருக்கு அப்படி ஏதோ ஒண்ணைக் கடத்தணும்!
பெர்சனலா எனக்கு செஞ்ச வேலையையே திரும்பத் திரும்பப் பண்றது பிடிக்காது. புதுசு புதுசா ஏதாவது செய்யணும்கிறது என் குணம். 'நோ பெய்ன்... நோ கெய்ன்’கிறதுல நான் தெளிவா இருக்கேன். அதுக்காக எந்த உழைப்புக்கும் எப்பவும் தயாரா இருக்கேன். அதுக்கு 'ஏழாம் அறிவு’ ஒரு நல்ல உதாரணம்!''
'' 'மாற்றான்’ல உங்க கேரக்டர்பத்தி இப்பவே பல கதைகள் உலவுதே?''
''அது எதுவுமே இல்லை.  ஆனா, 'மாற்றான்’ இன்னும் மேலே போற மாதிரி இருக்கும். 'ஏழாம் அறிவு’க்கு முன்னாடியே 'மாற்றான்’ கதையை கே.வி.ஆனந்த் சொல்லிட்டார். ரொம்ப சூப்பர் பேக்கேஜ். டெக்னிக்கலா மிரட்டுற படம். சமயங்களில் என்னை அதிர்ஷ்டமானவனா உணரத் தோணும். இப்போ அப்படித் தோணுது!''
''தனுஷ் வரை தேசிய விருது தொட்டுட்டாங்க. உங்களுக்கு அந்த ஆசை இல்லையா?''
''அது எப்படி இல்லாமல் இருக்கும்?  தேசிய விருது நிச்சயமா நம்மை உற்சாகப்படுத்தி தோள்ல தட்டிக் கொடுக்கிற விஷயம்தான். ஆனா, அதுக்கு என்ன அளவுகோல்னு எனக்குத் தெரியலை. எந்த அளவுக்கு நடிக்கணும், எப்படி அதற்கான கதைகளைத் தேர்ந்தெடுக்கணும்னு நான் யோசிச்சதே இல்லை. அந்தத் தேர்வில் நடுவர்களின் மனோபாவம், ரசனை எல்லாம் இருக்கு. நமக்குக் கிடைக்கலையேனு வருத்தம் எல்லாம் இல்லை. கிடைச்சா நல்லா இருக்கும். அவ்வளவுதான். 'ஆடுகளம்’ தனுஷ் அந்த விருதுக்கு ரொம்பப் பொருத்தமானவர்!''
''பெரிய ஹீரோ ஆகிட்டீங்க. 'பயமா இருக்கு’னு சொல்ல முடியாது. ஏன் புது டைரக்டர் பக்கமே போக மாட்டேங்கிறீங்க?''
''ஒரே காரணம், அனுபவ டைரக்டர்களிடம் கதை கேட்கும்போதே நிறைய டீடெயில் சொல்வாங்க. மியூஸிக்கில் ஆரம்பிச்சு எல்லாத்திலும் கன்ட்ரோல் இருக்கும். நம்ம சந்தேகங்கள் உடனுக்குடன் சரிசெய்யப்படும். புது டைரக்டர்கள் சிலரிடம் கதை கேட்டால், பாதி வரை நல்லா இருக்கு. அடுத்த பாதிஎதிர்பார்த்த மாதிரி இல்லை. என்னோட பிசினஸ் வேற ரேஞ்சைத் தொட்டுருச்சுனு தயாரிப்பாளர்கள் நினைக்கிறாங்க.  அவங்க நம்பிக்கை வீண் போகக் கூடாது. கதை சொல்றது மட்டுமே பெரிய விஷயம் இல்லை. அதை நடைமுறைப்படுத்தி எடுக்கிறதுதான்  சாதனை. யாரையும் நான் வலுக்கட்டாயமாத் தவிர்க்கலை. புது இயக்குநர்கள் யாரும் என் வீட்டுப் பக்கமே வராதீங்கனு நான் சொல்லலை. நல்ல விஷயம் அமைஞ்சா... நிச்சயம் பண்ணுவேன்!''
''நிஜமா உங்களுக்குப் போட்டி யாருன்னு நினைக்கிறீங்க?''
''என் இடமும் நிரந்தரம் கிடையாது. அதே நேரம், மத்தவங்க இடமும் அப்படிதான். இருக்கிற வாய்ப்பைக் கவனமாப் பயன்படுத்திக்கிறதுதான் சாமர்த்தியம். எனக்குப் பிடிச்சதை மட்டும் இங்கே பண்ண முடியாது. அஜீத்தோட 'மங்காத்தா’ பார்த்துட்டு இருந்தப்ப, பக்கத்துல இருந் தவங்ககிட்ட பாராட்டிக்கிட்டே இருந் தேன். இமேஜ் கவலையே இல்லாமப் பின்னியிருந்தார். அவரைவிட அந்த கேரக்டரை யார் பண்ணி இருந்தாலும் இந்த ரீச் கிடைச்சு இருக்காது. அது மாதிரி ஈஸியாப் படம் பண்ண எனக்கு எவ்வளவு வருஷம் ஆகும்னு தெரியலை. சமீபத்தில் விஜய்யைப் பார்த்தேன்... 'நண்பன்’, கௌதம் படம்னு அருமையான லைன்-அப்னு பாராட்டினேன். ஒருத்தருக்கு ஒருத்தர் பாராட்டிகிறதுதான். இதில் எங்கே போட்டி வந்தது?''
'' 'மக்கள் இயக்கம்’னு விஜய் அரசியல் பல்ஸ் பார்க்கிறார். அஜீத் அரசியலில் இல்லைன்னாலும், 'வற்புறுத்தி அழைக்கிறாங்க’னு அரசியல் பேசினார். நீங்க ஏன் இவ்வளவு சைலன்டா இருக்கீங்க?''
''எனக்கு அரசியல் தெரியாது. நான் நற்பணி இயக்கம்னு ஆரம்பிச்சு, மனித வளத்தை நல்ல வழியில் பயன்படுத்துறேன். இந்த இளைஞர்களைச் சரியாகப் பயன்படுத்தினால் பல நல்ல விஷயங்களைப் பண்ணலாம். 'அகரம்’லாம் அப்படித் தோணினதுதான். என்னுடைய எல்லா செயல் களையும் நான் நேர்மையாகத்தான் செய்ய நினைக்கிறேன். அவர்களைப் பயன்படுத்தி மக்களுக்கு ஏதாவது நடக்கணும். அவ்வளவுதான். அதை அடிக்கடி தெளிவுபடுத்திக்கிட்டே இருக்கேன். வழிநடத்திச் செல்லும் ஆசை எல்லாம் எனக்கு நிச்சயம் கிடையாது. அரசியலில் என் கடமை எல்லாம், யாருக்குனு முடிவுஎடுத்து ஓட்டுப் போடுவது மட்டும்தான்!''
''மத்த ஹீரோக்கள் திணறிட்டு இருக்கிற சமயத்தில் சூர்யா, கார்த்தி ஹிட் அடிச்சுட்டே இருப்பது நிறையப் பொறாமையை உண்டுபண்ணி இருக்குமே. அதை எப்படி எடுத்துக்கிறீங்க?''
''பொறாமைப்படுறவங்க இப்ப இருக்கிற நிலைமையை மட்டும் பார்க்கக் கூடாது. நாங்க ரெண்டு பேரும் எங்கிருந்து ஆரம்பிச்சோம்னும் பார்க்கணும். கார்மென்ட்ஸ்ல வேலை பார்த்தவன், அப்பாவோட செல்வாக்கால் ஒரு படத்தில் நடிச்சேன். 'சிவகுமார் பையன்’னு யாரும் அதுக்குப் பிறகு என்னைத் தூக்கிவெச்சுக் கொண்டா டலை. ஐந்து வருஷங்களுக்குப் பிறகுதான் முதல் வெற்றியை ருசிச்சேன். அப்புறம் 'கஜினி’ வரைக்கும் போய்த்தான் இந்தப் பேரு.
தம்பி கார்த்தி கஷ்டப்பட்டதைப் பார்த்து நானே அழுதிருக்கேன். ஷூட்டிங்தான், சினிமாதான்... ஆனா, டிராயர் கிழிச்சு அப்படியே தத்ரூபமாப் பண்ணி, முழுசா ரெண்டு வருஷம் கஷ்டப்பட்டான். ஆறு வருஷத்துக்கு ரெண்டு படம்தான் செஞ்சான். எதுவும் ஈஸியாக் கிடைக்கலை. கொஞ்சம் ரீ-வைண்ட் பண்ணிப் பாருங்க... இந்த மாதிரி உழைச்சா, இந்த மாதிரி வெற்றி கிடைக்கும்னு எடுத்துக்கணும்!''
''விக்ரம் மீண்டும் பாலாவுடன் படம் பண்றார்னு சொல்றாங்க... நீங்க பாலாவோடு இணையறீங்களா?''
''பேசிக்கிட்டு இருக்கோம். எப்ப, என்ன பண்றதுனு சீக்கிரம் முடிவாகும். நிச்சயம் பாலா படம் செய்வேன்!''
''ரஜினியைப் பாத்தீங்களா?''
''இல்லை. அவரைத் தொந்தரவு பண்ண விரும்பலை. ஆனால், நானும் ஜோவும் ஒரு கடிதத்தில் எங்க எண்ணங்களைத் தெரிவிச்சு, அழகா ஒரு கிஃப்ட் பேக் செய்து வீட்டில் கொண்டுபோய்க் கொடுத்துட்டு வந்தேன். கிடைச்சிருக்கும்... பார்த்திருப்பார்!''

Thx.vikadan

Post a Comment

0 Comments