நூறு வயதில் மாரத்தான் ஓடி உலக சாதனை




நூறு வயதில் மாரத்தான் ஓடி உலக சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார் இந்தியாவில் பிறந்து பின்னர் பிரிட்டிஷ் குடியுரிமைப் பெற்றவரான ஃபூஜா சிங்.
கனடாவில் நடந்த டொரொண்டோ வாட்டர்ஃபிரண்ட் மாரத்தான் போட்டியில் 42 கிலோமீட்டர் தூரத்தை இவர் 8 மணி நேரங்கள் 25 நிமிடங்களில் ஓடிக் கடந்துள்ளார்.மாரத்தான் பந்தய தூரமான 42 கிலோ மீட்டர்களை முழுமையாக ஓடிக் கடந்த மிக அதிக வயதுடைய மனிதர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.தனது 93ஆவது வயதில் டொரொண்டோ மாரத்தனை சிங் 5 மணி நேரம் 40 நிமிடங்களில் ஓடியிருந்தார்.
இந்தப் பந்தயத்தில் ஓடியவர்களில் 3850ஆவது இடத்தில்தான் இந்தப் பெரியவர் வரமுடிந்தது என்றாலும், இவர் கடைசி ஆள் அல்ல. இவருக்கு பின்னால் வந்தவர்கள் ஐந்து பேரும் இருந்தனர்.
தற்போது இரண்டாவது முறையாக இவர் அப்புத்தகத்தில் இடம்பெறுகிறார்.90 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் மாரத்தானை குறைந்த நேரத்தில் ஓடிய சாதனை படைத்ததாக அப்போதே இவருக்கு கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் கிடைத்திருந்தது.
11 ஆண்டுகளுக்கு முன் தனது 89ஆவது வயதில்தான் பெரியவர் சிங் ஓடவே ஆரம்பித்திருந்தாராம்.
தனது மனைவியும் மகனும் இறந்ததை அடுத்து சோகத்திலிருந்து மீளுவதற்கான ஒரு வழியாக ஓட்டப்பயிற்சியை ஆரம்பித்த இவர், ஒவ்வொரு நாளும் பதினாறு கிலோமீட்டர்கள் ஓடி பயிற்சி பெற்று வந்துள்ளார்.
1911ல் பஞ்சாப்பில் பிறந்தவரான சிங் 1960கள் வாக்கில் பிரிட்டனில் குடியேறிருந்தார்.

ஆரோக்கியத்தின் ரகசியம்

மாரத்தான் தூரத்தை ஓடிக் கடந்த உணர்வு பற்றி கேட்டபோது "மறுபடியும் கல்யாணம் பண்ணின மாதிரி சந்தோஷமாக இருக்கு" என்றாராம் இந்த துடிப்பானப் பெரியவர்.இஞ்சிக் குழும்பும், டீயும், கவலைகளை மறந்து மகிழ்ச்சியாக இருக்கும் தனது வாழ்க்கை முறையுமே தள்ளாத வயதிலும் தனது ஆரோக்கியத்துக்கும் சக்திக்கும் காரணம் என்று இவர் கூறுகிறார்.

Post a Comment

0 Comments