உலகக் கோடீஸ்வரர் வாரன் பஃபே பெங்களூர் வருகிறா


உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவரும் சமூகப் பணிகளில் ஆர்வம் கொண்டவருமான வாரன் பஃபே இந்த வாரம் இந்தியா வருகிறார்.

இந்த வருகையின் போது அவர் பார்க்க விரும்பும் முதல் இந்திய நகரம்... பெங்களூர்தான். இங்குள்ள டேகு டெக் இந்தியா என்ற நிறுவனத்தைப் பார்வையிடுகிறார் வாரன் பஃபே. அதென்ன இந்த நிறுவனத்தின் மீதுமட்டும் அவ்வளவு அக்கறை?

2000-ல் நிறுவப்பட்ட இந்த டேகு டெக், தென் கொரியாவைத் தலைமையிடமாகக் கொண்ட ஐஎம்சியின் இந்தியப் பிரிவாகும். டங்ஸ்டன் கார்பைட் இழைகள் தயாரிப்பதில் முன்னணியில் உள்ள இந்த நிறுவனத்தின் 80 சதவீதப் பங்குகளை வாரன் பஃபேயின் பெர்க்ஷையர் ஹாத்வே வாங்கியுள்ளது.

இந்த முதலீட்டைப் பெற்ற சில ஆண்டுகளுக்குள் அதற்கான வருவாயை இரட்டிப்பாக்கிக் கொடுத்துள்ளது டேகு டெக். அதனால்தான், தனது இந்தியப் பயணத்தின் முதல் விசிட்டே பெங்களூராகத்தான் இருக்க வேண்டும் என வாரன் பஃபேயை முடிவு செய்தாராம்.

இதுகுறித்து டேகு டெக் நிறுவனத்தின் தலைவர் எல் கிருஷ்ணன் கூறுகையில், "வாரன் பஃபே வருகிறார் என்று தெரிந்ததுமே எனது போன்கள் ஓயாமல் அலறிக் கொண்டுள்ளன. அத்தனை விசாரிப்புகள். அவரது வருகை, ஒட்டுமொத்த இந்தியாவையும் எங்கள் நிறுவனத்தின் பக்கம் திரும்ப வைத்துள்ளது..." என்றார்.

இந்தப் பயணத்தின்போது, பெங்களூரில் உள்ள மற்ற பெரும் தொழில் நிறுவனங்களின் அதிபர்கள் மற்றும் சிஇஓக்களையும், சிஐஐயின் உறுப்பினர்களையும் பார்க்க விருப்பம் தெரிவித்துள்ளாராம் வாரன் பஃபே.

Post a Comment

0 Comments