3 ஜி கருவி மூலம் 80 சத விபத்துகளை குறைக்கலாம்


விருதுநகரில் நடந்த, 37வது மாநில அளவிலான ஜவகர்லால் நேரு அறிவியல் கண்காட்சியில் இடம் பெற்ற மானாமதுரை மாணவர் மணிகண்டனின் புதிய கண்டுபிடிப்பான "3 ஜி' வாகன கட்டுப்பாட்டு கருவியால், 80 சதவீத விபத்துகளை குறைக்க முடியும்.

உலகில், ஆண்டுக்கு 12 லட்சம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர். டூவீலர்களால் 75 சதவீத விபத்துகள் அதிகரித்துள்ளன. இதை கட்டுப்படுத்தும் விதமாக, சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஓ.வி.சி., மெட்ரிக் பள்ளி மாணவர் வி.ஆர். மணிகண்டன், ஜி.எஸ்.எம்., தொழில்நுட்பத்திலான கருவி மூலம், "3 ஜி' வாகன கட்டுப்பாட்டு கருவியை கண்டுபிடித்துள்ளார். ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் டூவீலரை பதிவு செய்யும் போது, அதில் இந்த டிவைஸ் பொருத்தலாம். இதன் விலை 2,200 ரூபாய். இதை பொருத்திய பின், இதற்காக தனி எண் தரப்படும்.வாகனம் திருடு போனால் அதற்குரிய எண்ணை, மொபைல் போன் மூலம் அழைத்தால் வாகனம் நின்று விடும். அதிலிருந்து எச்சரிக்கை ஒலி எழும்பும். வாகனம் இருக்கும் இடத்தை எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்கும். மேலும், "ஹெல்மெட்' அணிந்த பின்பே வாகனத்தை இயக்க முடியும். வாகனம் விபத்துக்குள்ளாகும் போது, சம்பந்தப்பட்ட மொபைல் எண்ணிற்கு இந்த இடத்தில் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது என எஸ்.எம்.எஸ்., தரும்.சைடு ஸ்டாண்ட் போட்டிருக்கும் போது, டூவீலரை இயக்க முடியாது. குறிப்பிட்ட இடங்களில் இத்தனை கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல வேண்டும் என்பதை கண்டுபிடிக்கும். "பிரேக் ஷூ' தேய்ந்து விட்டால், வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை செய்யும்.

இரவு நேரங்களில் மட்டுமே முகப்பு விளக்குகள் எரியும். பகலில் "ஆன்' செய்தாலும் எரியாது. "எப்.சி.' எடுக்க வேண்டிய தேதியை, அறிவுறுத்தும். திருட்டு வாகனங்களோ, ரோடுகளில் தவறு செய்யும் வாகனங்கள் 200 மீட்டரில் வரும் போதே, நெடுஞ்சாலை கண்காணிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கும். வாகன "பயோ டேட்டா' வழங்கும் விதமாக "3 ஜி' கட்டுப்பாட்டு கருவியை கண்டுபிடித்துள்ள மணிகண்டனுக்கு, விருதுநகரில் நடந்த மாநில அறிவியல் கண்காட்சியில் முதல் பரிசு வழங்கப்பட்டது.

இதுகுறித்து மணிகண்டன் கூறியதாவது: நான் கண்டுபிடித்துள்ள கருவிகளை டூவீலரில் பொருத்தும் போது, ஹெல்மெட் அணியாமல் ஏற்படும் பலியை 95 சதவீதம், விபத்து நடந்த இடத்தை தெரிவிப்பதன் மூலம் பலியை 75 சதவீதம், வேக கட்டுப்பாடு மூலம் 85 சதவீதம், பிரேக் ஷூ, இண்டிகேட்டர், முகப்பு விளக்கு கட்டுப்பாடு, சைடு ஸ்டாண்டு ஆகியவற்றால் ஏற்படும் விபத்துகளை 95 சதவீதம் குறைக்க முடியும். டூவீலர்களால் ஏற்படும் விபத்துகளில் 80 சதவீதத்தை கட்டுப்படுத்த முடியும். இதற்கான தொகை மிகக் குறைவு தான். ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் வாகனங்களுக்கு, "ஸ்மார்ட் கார்டு' வழங்குவதற்கு பதிலாக ஜி.எஸ்.எம்., கருவிகளை பயன்படுத்தலாம்.இவ்வாறு மணிகண்டன் கூறினார்.

Post a Comment

0 Comments